சின்னப்பெண்ணே
மல்லிகைப் பந்தொன்று தொட்டிலில் கிடக்குது
வாய் விட்டுச் சிரித்து மணத்தைப் பரப்புது
வந்திடும் ஆனந்தம் அன்பே உன்கைவீச்சில்
தந்திடும் இன்பம் எந்நாளும் உன் வாய் எச்சில்
கன்னம் குழிந்திடச் சிரித்திடும் கண்கள்
என்னை ஈர்க்கும் மாணிக்கக் கற்கள்
பொன்னகை பெண்ணின் புன்னகை என்பர் –உன்
சின்னகை பட்டாலே தூசவை என்பர்
உன்னை நான் எடுத்துத் தோளிலே கிடத்தி
கன்னத்தில் கன்னத்தை மெல்லவே இழைத்து
உன்பட்டு முதுகில் என் கையால் தட்டி
ம்ம்ம் என்று நீ ராகமும் இழுக்க
ஓ ஓ ஓ என்று நான் தாளமும் இசைக்க
ஆனந்த கீதங்கள் சங்கமமாகும்
அற்புத சுகங்கள் என்வசமாகும்