8/25
நெருப்பைக் கொட்டி விட்டுப் போனவளே !
நெஞ்சைக் கீறி விட்டுச் சென்றவளே !
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
கண்கள் கலந்து கடி மணம் புரிந்தோம்
இரு மனம் கூடி புது மணம் தேடி
இருவரும் விரைந்தோம் இரவினை நாடி !
உன்னை அழகென்றேன் அனலில் மெழுகானாய் !
கன்னிமை எனதென்றேன் கண்ணிமை துடித்திட்டாய் !
கன்னத்தில் கன்னம் வைத்தேன் கள்வனென்றாய் !
கனிந்த கன்னம் பழமா கடித்துத் தின்னவா !
கன்னத்தின் ஓரம் காது அது இனி இருக்காது !
கயிற்றைக் காட்டி கழுத்தை ஏன் வளைக்கிறாய் !
வலிக்கிறது என்று சொல்லி வாய்பொத்த வருகிறாய் !
பொய் சொன்ன இதழுக்கும் நாவிற்கும் தண்டனை !
வாய்ச் சொற்கள் நின்ற பின் நெஞ்சங்கள் பேசுகிறதே !
நெஞ்சம் சுடுகிறதே அது சுரமா எரியும் பந்தமா
உரசலில் எழுந்தது அச்சுரம் பாதியில் நின்றால் அபசுரம் !
அணைத்தால் அணையும் புதுத் தீ தான் இதுவோ
கண்ணில் என்ன செவ்வரி ! கண்ணே எரிகிறதா ?
விடியும் வரை எரிந்தது அந்த விளக்கு
ஆசை நெய்யிட்டு வேட்கைத் திரியிட்டு
காமத் தீ இட்ட விளக்கல்லவா அது !
கருக்கலில் எழுந்து காலை ஒற்றினாய் !
தீர்க்க சுமங்கலி வாழ்த்தொலி வேண்டினாய் !
கண நேரத்தில் கண்கள் மயங்கினாய் !
மண மாலையுடன் மடியில் சரிந்தாய் !
இமைகள் மெல்லத் துடிக்கின்றன !
இதழ்கள் சொல்லத் துடிக்கின்றன !
இதயம் கொல்லத் துடிக்கிறது !
ஸ்வாசம் மெள்ள நிற்கிறது !
நாடி வந்தவளின் நாடி நின்றது !
பாடி வந்தவளின் மூச்சு நின்றது !
முதலும் முடிவுமான அந்த இரவினிலே
நெருப்பைக் கொட்டி விட்டுப் போனாளே !
நெஞ்சைக் கீறி விட்டுச் சென்றாளே !!