நாஞ்சில் வட்டார வழக்கில் உரையாடல்களோடு சமூகப் பார்வையும்
நகைச்சுவையும் சோகமும் ஒரு சேர இழையோடும் படைப்புகளால் நன்கு அறியப்படும்
படைப்பாளி திரு நாஞ்சில் நாடன்.
“சூடிய பூ சூடர்க்க” என்னும் சிறுகதைத்
தொகுப்பிற்காக 2010 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
"தலைகீழ் விகிதங்கள்" தொடங்கி ஆறு
புதினங்களும் பல சிறுகதை, கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன.
மும்பையில் வாழ்ந்த அனுபவத்திலும் பல
கதைகள் உருவாகியுள்ளன. இவரது “கிழிசல்” என்னும் கதை பல சிறந்த
சிறுகதைகள் பட்டியல்களில் காணப்படுகிறது
கதை மாந்தர்களை ‘உள்ளது உள்ளபடி’ படைப்பது கவனத்தை ஈர்க்கிறது. ஊர்
ஊராகத் திரிய வேண்டிவரும் மருந்துக்
கம்பனி விற்பனைப் பிரதிநிதியைக்
கதாநாயகனாகக் கொண்ட “சதுரங்கக் குதிரைகள்” புதினம் படிக்க நேர்ந்தபிறகு
நான் தேடித் படிக்கும் ஒரு எழுத்தாளர். .
இவரது “ஐந்தில் நான்கு” சிறுகதை இப்படிப் போகிறது:
* * * * * *
மும்பையில் பிழைக்க வேலை தேடிச் சென்று, மூன்றாண்டு கழிந்து சொந்த
ஊருக்கு வரும் “மிஸ்டர். எஸ். கே. முத்து"வின் கதையிது.
பேருந்திலிருந்து ஒரு ஏர் பேக், சஃபாரி சூட்கேஸ் ஆகியவற்றுடன் நாகர்கோவிலில் இறங்கியவனுக்கு வேறு பஸ் பிடித்து நாலு மைலில்
உள்ள தன் ஊருக்குச் செல்ல முடியும்.
எனினும் மூன்றாண்டுகள் கழித்து மும்பையிலிருந்து வருபவன் பஸ்ஸில் போவதாவது? அந்த அதிகாலை வேளையில் டாக்சியில் சென்றாலும் தெருவில் சாணி
தெளிக்கும் சில பெண்டுகள் தவிர யார் கண்ணிலும் படாமல் இறங்கினால், புதிய ஏர் பேக்,
சஃபாரி, வி.ஐ.பி, டபிள் நிட்டட் பேண்ட், ஷோலே ஷூ, பாம்பே டையிங் ஷர்ட், நூற்று
நாப்பது ரூபாய் கூலிங்கிளாஸ் இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் இருக்கிறது.
லாட்ஜில் ரூம் எடுத்து ஷேவ், குளியல் முடித்து கையில் நாஷனல்
பேனோசோனிக் என்ற பெயர் கொண்ட ஜப்பானில்
தயாராவது என்ற போர்வையில் வரும் உல்லாச
நகர டிரான்சிஸ்டர் கம் காஸெட் பிளேயர் சகிதம் டாக்ஸி பிடிக்க பஸ் ஸ்டாண்ட்
போகிறான். அங்கே சில கிராமத்து ஆட்கள்
"இது என்ன புதுசா மணக்கு?” என்ற கேள்வியுடன் நிறைய இழுத்து
சுவாசித்துவிட்டு எஸ். கே. முத்துவை பயபக்தியுடன் பார்க்கிறார்கள்
ஊர் நெருங்கியதுமே பரபரப்பும் புளகாங்கிதமும். ஊரின் சாலையில்
ஓட்டுனரை கொஞ்சம் மெதுவாகவும் இரண்டு ஹாரன் கொடுத்தும் போகச் சொல்கிறான். அவன்
வீடு ரோட்டோரத்து வீடல்ல. அவன் தெரு முடுக்கில் கார் நுழைவதோ திரும்ப மேலேறி
வருவதோ நடக்காதது.
டாக்ஸி நின்றது. இரண்டு மூன்று ஹாரன் கொடுத்தது. முத்துவின்
ஆசைப்படியே பொது இடங்களில் இருந்தவர்கள் கவனம் திரும்பியது. முதலில் இது யார்
என்று திகைத்தாலும் இவனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
கதாசிரியரின் வார்த்தைகளில்
“ அட இது நம்ம காத்தமுத்துல்ல…” திடீரென அவனை அடையாளம்
கண்டுகொண்ட ஒரு அவயம்.
ஊர்
திரும்பும் ஞாயிற்றுக்கிழமை அன்று பஸ்
நிறுத்தத்தில் பம்பாயில் கிடைக்காத அரும்பொருட்கள் கொண்ட பனையோலைக் கடவு,
திருநெல்வேலியிலிருந்து பம்பாய் வரை சாப்பிட பொட்டலங்கள்.
“பத்திரமா
போயிட்டு வா என்கிறார் அப்பா.
கதாசிரியர்
சொற்களில்
"ஏ.
காத்தமுத்து.. என்ன பொறப்பிட்டாச்சா? இல்லாட்டாலும் இங்கிண கிடந்து என்னாத்துக்கு?
நம்ம பயலுக்கும் என்னமாச்சும் ஒரு சான்ஸ் உண்டுபண்ணப் பாருடே! சிஸ்த் பாசாயிருக்கான்”
என்று ஒரு தகப்பனார் பரிந்துரை செய்தார்
“அப்பம்
போயி வீடெல்லாம் ஏற்பாடு செய்துகிட்டு எளுத்து போடு. உனக்க அத்தானும் எப்படியும்
வாற ஆவணியில கலியாணத்தை முடிச்சுப் போடணும்ணு சொல்லுகா.. கண்டமானம் செய்யாட்டலும்
உள்ளத்துக்குள்ள செய்வா. மெத்தனமா இருந்திராதே” என்று அம்மா பதினெட்டாம்
முறையாக ஞாபகப்படுத்தினாள்.
பஸ்
வந்ததும் அடிச்சுப் பிடிச்சு ஏறிய பிறகு இன்னும் மூன்றாண்டுகளுக்கு ஊருக்கு
வரக்கூடாது என்று எண்ணிக்கொள்கிறான். கொண்டு வந்திருந்த பனிரெண்டு நூறு ரூபாய்
நோட்டுக்களும் வெங்காயம் உறித்ததைப் போல் ஒன்றுமில்லாமல் போய், டிக்கட்டிற்கே
யாருக்கும் தெரியாமல் நூறு ரூபாய் கடன்.
கையில் கட்டியிருந்த கடிகாரம் அத்தான் எடுத்துகொண்டுவிட்டார். தவணை
பாக்கி கட்டவேண்டும். கூட வசிக்கும் குத்தாலத்திடமிருந்து இரவல் வாங்கி வந்திருந்த
டிரான்சிஸ்டர் கம் காசெட் பிளேயர் தங்கை புருஷனுக்குப் போய்விட்டது. ஊருக்கு
வருவதற்கான ஏற்பாட்டில் மாதச் சீட்டில் மாதம் ஐம்பது ரூபாய் இன்னும் இருபத்தெட்டு
மாதம் கட்டவேண்டும்.
இப்படி முடிகிறது கதை
இந்தக் கடன்கள் எல்லாம் கழிக்க, எத்தனை ஆண்டுகள் இனிமேல், “தோ
மசால் தோசா, ஊத்தப்பா ஏக் பிளேட், வடா சாம்பர் தீன்’ என்று எண்ணுகையில் அவன்
கண்கள் கலங்கிக் கசிந்தன.
‘அருமாந்த பிள்ளை .. தூர தொலைக்குப் போறமேண்ணு வருத்தப்படுகு’ என்று
பக்கத்து இருக்கைப் பெரியவர் மனதுக்குள் அனுதாபம் சிந்தினார்
**** **** **** ****
நாஞ்சில் வட்டார மொழி வளத்துடன் சில கதைகள்
·
சுடலை மாடன் கொடை காணப்போகும் ஒரு வளர்ந்த சிறுவனின் பார்வையில்
பன்றி பலி உள்ளிட்ட அந்த விழா நடவடிக்கைகளும் வெளியூரிலிருந்து எப்போதாவது வரும்
கணவன் கொண்ட ‘மதனி’ என்ற மாதுவும் – ("பேய்க்கொட்டு”)
·
போகும் வழியில் ஒரு தோப்பில் இளைப்பாற இருந்த தம்பதியரை ஊரில் உள்ள
சிலர் அங்கிருந்து போகக் கட்டாயப்படுத்த அவர் மறுக்க ஏற்படும் பிரச்சினையை
தீர்க்கும் நல்ல ‘சுதி’யிலிருக்கும் ஈஸ்வரமூர்த்தி பட்டா – (“பாலம்”)
·
திருவிழாவில் அப்பாவுடன் கச்சேரிக்கு அடம் பிடித்துக் கூடப்போகும் சிறுவன், கச்சேரி முடிந்து காப்பிக்கடையில்
சுமார் மூன்று ரூபாய்க்கு உணவருந்திவிட்டு, சந்தடி சாக்கில் இரண்டு தேயிலை என்று
சொல்லி காசு கொடுத்துவிடுகிறார் அப்பா. இதற்காகத்தான் வருடா வருடம் அப்பா
கச்சேரிக்கு வருகிறாரோ என்று எண்ணமிடும்
சிறுவன்,
இனி அப்பாவுடன் திருவிழாவிற்கு
வருவதில்லை என்று முடிவெடுக்கிறான். (“கிழிசல்”)
பம்பாய் அனுபவத்தில் படைத்த கதைகள்.
·
பிரபலமான ஒருவரின் முக்கியஸ்தருக்கான மும்பை ஷன்முகானந்தா அரங்கின்
முன்வரிசை ‘காம்ப்ளிமென்டரி" டிக்கெட்டில்
நாடகம் பார்க்கப்போகும் அவரது காரோட்டி, இருக்கையிலிருந்து எழுப்பிவிடப்பட, நாடகம் பார்க்காமலேயே வீடு திரும்பும்
சம்பவம். –( “அம்பாரி
மீது ஒரு ஆடு”)
·
சோமசுந்தரத்திற்கு இன்றைக்குள் மிஷினை ஏற்றிவிட வேண்டிய
கட்டாயம். ட்ரக் வராமல் ட்ரான்ஸ்போர்ட்
கம்பனிக்காரர்களை விரட்டி போன் செய்தும் நம்பிக்கையில்லை. மேலதிகாரியோ எப்படியாவது
இன்றே ஏற்றிவிடவேண்டும் என்றும் ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கடிந்துகொள்கிறார்.
விரட்டி விரட்டி மிஷினை ஏற்றிவிட்டு காரியம் சாதித்த பெருமையோடு மேலதிகாரிக்குப் போன் செய்தால் அவர் எங்கோ
டின்னருக்குப் போயிருக்கிறார் என்பது தெரிந்ததும் உற்சாகம் வடிந்து போகிறது- (“வைக்கோல்”).
எல்லாக் கதைகளிலும் இவரது பார்வையும் கதை சொல்லும் சரளமும்
வியக்கத்தக்கது.
இலக்கியவாசல்
இரண்டாம் நிகழ்வாக “நான் ரசித்த தி.ஜானகிராமன்” என்னும் தலைப்பில் கலந்துரையாடல்
சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலைய அரங்கில் 23.05.2015 அன்று சிறப்பாக
நடைபெற்றது!
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய
இலக்கியவாசல் சுந்தரராசன், வந்திருந்த
சான்றோர் பெருமக்களை அன்புடன் வரவேற்று தி.ஜா.வின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லி அவர் படைப்புகளின் சிறப்புகளை
எடுத்துரைத்து, பார்வையாளர்களைப் பேச அழைத்தார்!
திரு.கோபிநாத்
( நடராஜகால் சிறுகதை])
குத்தகை நில
வருமானத்தில் உழைக்காமல்
சாப்பிடும் ராமதுரை மாமாவின் குணாதிசயங்களை நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தார்! எதிர்வீட்டுப் பெண் திருமணத்தை நிறுத்திவிட முயலும் அவரது வாய்ச்சவடால்களை
முறியடித்துத் திருமணம் செய்து கொண்டுபோகும் பெண்ணைப்பற்றிய கதை இது. இந்த கதையைச்
சொல்வதே அந்தப் பெண்தான் என்பது கதையின்
கடைசியில் தெரிய வருவது மிகவும் சுவாரசியமான ஒன்று!
திரு.அதியமான் ( “மோகமுள்”)
மோகமுள்
நாவலில் எல்லோரும் பாபு ஜமுனா உறவையே சொல்லுகிறார்கள். ஆனால் தான் ரசித்தது தி.ஜா.எப்படி இயற்கையின் ரசிகராயிருந்தார்
என்பதும் (வாழை மரம் வெட்டப்பட்ட பிறகு அதன் அடிப்பகுதியில் அழகாய் அமைந்துள்ள துவாரங்கள்
அதிசயம்), ரங்கண்ணாவுடனும் நண்பனுடனும் (ராஜம்) உரையாடல்களில் வாழ்க்கையையும் மனிதர்களையும்
அலசும் சிறப்பையும் சொல்லி, தி.ஜா.வின் படைப்புக்களில் தனது
ஆராய்ச்சி தொடர்வதையும் சொல்லி மகிழ்ந்தார்!
கவிஞர் தரும.இராசேந்திரன்
(“நாவல் பிறக்கிறது )
ஒரு
நாவல் எப்படி உருவானது என்று தி.ஜா.தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதை
எடுத்துரைத்தார்! எதிர் வீட்டுக் கிழவரின்
இளம்பெண் கல்யாணமும், தனது மகன் குடும்பத்தையே வீட்டைவிட்டு
வெளியேற்றிவிட்டு, இளம் மனைவியுடன் கிழவர் தனிக்குடித்தனம் ஒருவருடம்
நடத்திவிட்டு மரணம் அடைந்த
நிகழ்வையும் குறிப்பிட்டார். தன்னை விட
எட்டுவயது அதிகமான அழகும், அமைதியும், புத்திகூர்மையும்
உள்ள பெண் மீது தான் கொண்ட ஒரு தலை மோகம் தான்
மோகமுள் என்ற நாவலாக ஆகிவிட்டது! “இந்த ஞாபகங்கள் ,என்
ஆசைகள் ,நப்பாசைகள் ,நான்
எப்படி இருந்திருக்க வேண்டுமென்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள், பாத்திரங்களாக
எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாக
சேர்ந்து நாவலாக உருவாயின “ என்று ஜானகிரமனே குறிப்பிட்டுள்ளார் என்பதைப் பகிர்ந்துகொண்டார்!
நங்கநல்லூர் ஸ்ரீதரன்: ("திண்ணை வீரா!”):
திண்ணையில்
அமர்ந்து கொண்டே “எழுந்து வந்தால் தொலச்சுடுவேன்" என்று எல்லோரையும் மிரட்டும் ஒரு
பாத்திரம், இறுதியில் வீட்டிற்குள் போகவே இருவர் தூக்கிச்செல்ல வேண்டியிருக்கும்
நிலையில் இருக்கிறார் என்பது கதை முடிவில்
தெரியவரும். பாத்திரப் படைப்பும்
சொல்லும் விதமும் மிகவும் ரசிக்கத்தக்கது
என்றார் .
திரு.தொல்காப்பியன்: ( "வீடு”.)
இந்த
வீடு விற்பதற்கு இல்லை என்று ஒரு டாக்டர் சொல்லிக்கொண்டே இருப்பதுடன் தொடங்கும்
இந்தக் குறுநாவலில், அந்த டாக்டர் தனது மனைவி மிகவும் அழகாய் இருப்பதை
ரசித்துக்கொண்டே இருப்பார். கம்பௌண்டருடன்
அவளுக்குத் தொடர்பு ஏற்பட்டுப் போகிறது .டாக்டர் அப்போதும் மனைவியைத் தொடாமலே அவளது அழகை ஆராதனை செய்வது கொடுமை.
இக்கதை மூலம் ஒரு படிப்பினையை தி. ஜா. சொல்கிறார்
வழக்கறிஞர் திரு .பாலஸ்ரீநிவாசன்:
(“குளிர்”
“வெய்யில்”)
இரு
முரண்பட்ட தலைப்புகளிள் எழுதப்பட்ட சிறுகதைகள் இரண்டையும் ஒப்பிட்டு அழகாகப் பேசினார்
.“குளிரில்
”- 80 வயது
கிழவி கதவைத் தட்டினால் அவள் வீட்டில்
திறக்க மாட்டார்கள் .அவ்வப்போது அடியும் வாங்கும் பாட்டிக்கு வக்காலத்து வாங்கிய
பக்கத்து வீட்டுக்காரர் உபசரித்து
தங்கள் வீட்டில் தூங்க வைத்தால், கிழவி
தனது வீட்டுப் பெருமை பேசுகிறதாம்!
“வெய்யிலில்”
– செல்ல மகள் வெய்யில் நேரத்தில் அவசரமாக ஊருக்கு கிளம்பி இரயிலடி செல்ல ,அவள்
மறந்து விட்டுப்போன துணியை எடுத்துக்கொண்டு வெய்யிலில் ஓடும் மனிதரைப் பார்த்து டீக் கடைக்காரர் , ‘இந்தத்
துணியாவது உன்னிடம்
இருந்து அவள் பிரிவை எளிதாக்கட்டுமே’ என்பது சிறப்பு!
திருமதி
.விஜயலட்சுமி . ( “தீர்மானம்” ) :-
இளம்பெண்
விசாலியை அவளது சின்ன மாமனார் வந்து அவள்
கணவர் வீட்டிற்குச் சட்டென்று அழைத்தது அனைவருக்கும் கவலைதர, விளையாடிக்
கொண்டிருந்த விசாலி
சட்டென்று சின்ன மாமனாருடன் கிளம்பிச் செல்கிறாள் ஊருக்கு . வீட்டிலோ அவள் அப்பா
இல்லை. அத்தையிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்! வெளியில் சென்றிருந்த அப்பா
வந்து அவள் பின்னாலேயே போய்
வலங்கிமானில் சாப்பாடு செய்வித்து விசாலியிடம் கையில் திணிக்கிறார்…. அவளது ஆசை சோழிப் பெட்டியை! விசாலிக்கு
வயது 10 ! அந்தப் பத்து வயதில் அப்படி ஒரு
தீர்மானமா?
இலக்கியவாசல் சு.சுந்தரராசன்:
(“அம்மா வந்தாள்” மற்றும் “நள பாகம்”)
தி.ஜாவின்
புகழ் பெற்ற "அம்மா
வந்தாள் “ நாவலைப் பற்றி மிக விரிவாக, உணர்வுபூர்வமாக
பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். தஞ்சாவூர் ஜில்லாவின் மண்வாசனை தவழும் இந்த
நாவலின் அப்பு, வேதம் படிக்க 4 வயதில்
வேத பாடசாலை சென்றவன், வேதம் கற்று
இளைஞனாகத்
தன் வீடு திரும்ப முயலும்போது, வேத பாடசாலையில் உள்ள இளம் விதவை
இந்து அவனை விரும்புவது கண்டு அதிர்ச்சி அடைகிறான். அவன் எவ்வளவோ புத்திமதி
சொல்லியும் கேட்காத இந்து அவனை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடிக்கிறாள் .அவளைத் தள்ளிவிட்ட
அப்புவை பார்த்து ‘உன்
அம்மா என்ன யோக்கியமானவளா?” என்று
கேட்டவுடன் அப்பு திகைத்துப் போகிறான் .
அவன்
அப்பா தண்டபாணி தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவன் அம்மா அலங்காரம் உண்மையிலேயே அழகானவள் .ஆனால் அவங்க
வீட்டுக்கு வரும் பணக்காரர் சிவசுவிடம் அவளுக்கு கூடாநட்பு ஏற்பட்டு விடுகிறது .
இதை அவள் கணவன் உள்பட யாருமே கண்டும் காணாதது மாதிரி இருக்கிறார்கள்.
அப்புவிடம்
பாவமன்னிப்பு கேட்கும் அம்மா அலங்காரம் :உன் வேதத்தாலும் என் பாவத்தைப் போக்க இயலாது
.என்னைப் போன்றவா எல்லாம் காசியிலே போய் மூலையிலே முக்காடு போட்டு உக்காந்து
சாகவேண்டும் என்கிறாள் .. இந்த
நாவல் தி.ஜா.வை ஜாதிப் பிரஷ்டம் செய்யும்
அளவுக்குப் பேசப்பட்டதும் உண்மை .
ஒரு சாமியாரின் அருளை வேண்டி
அவருக்கு பிடி கருணை அளிக்க தில்லுமுல்லு செய்யும் ஒரு சிறு வியாபாரி (பிடிகருணை),
வறுமையின் இயலாமையால் கல்கத்தாவில்
குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்
வேலைக்குப் போகும் ஒரு சிறுமிக்கு தன்னால் இயன்ற அன்பைக்கட்டும் வகையில்
ஒரு ஆரஞ்சு அளிக்கும் பாலகன் ( சிலிர்ப்பு ).
தனது தாத்தா மகாநாமரை பழிவாங்க
அவரைப் போரில் வெல்லும் அரசன் விடூடபன் (தாத்தாவும் பேரனும்) ஆகிய கதைகளைக்
குறிப்பிட்டார்.
தான்
கண்ட மனிதர்களையும் நிகழ்வுகளையும் சிறு சிறு உரையாடல்கள் மூலமும் எளிய வருணனைகள்
மூலமும் மிக எளிதாகச் சொல்லி விடுவது தி.
ஜா வின் சிறப்பு என்று குறிப்பிட்டார்.
அவர்
கதைகளீல் வரும் கூடா நட்பைப் பற்றியும் குறிப்பிட்டார். அதனால் அந்தக் காலத்தில் சில
இல்லங்களில் ஆனந்தவிகடன் வாங்கிவந்தவுடன்
தி.ஜானகிராமன் , ஜெயகாந்தன் கதை உள்ள பக்கங்களையும் பிய்த்து விட்டுத்தான்
தங்கள் குழந்தைகளுக்குப் படிக்கக் கொடுப்பார்களாம்!.
வந்திருந்து தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் ஏனைய பார்வையாளர்களுக்கும் நன்றி
கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கிருபானந்தன்.
அண்மையில் முனைவர் இராமலிங்கம் அவர்களின் சொற்பொழிவில் கேட்டு சிரித்து சிந்தித்து மகிழ்ந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழ்மொழியின் வளமையை எடுத்துக்காட்ட எத்தனையோ இலக்கண இலக்கியங்களும் காப்பியங்களும் இன்னபிறவும் உள .
இரும்புக்குள் துவாரம் போட்டால் அதை துளை என்று சொல்கிறோம் . அதையே ஊசியின் ஒரு முனையில் துளை போட்டால் அதை காது என்று சொல்கிறோம் .அந்த ஊசியின் காதில் நூலைக் கோர்த்துக் கிழிந்துபோன துணியைத் தைக்கிறோம் . அந்த காதுக்குள் நுழைந்த நூலைப்போல இப்போது வெளியிடும் நூலும் [புத்தகமும்] உங்கள் மனதில் பதிந்து நல்ல சிந்தனையைத் தூண்டி வாழ்வில் வளம் சேர்க்கட்டும் !
எழுதும்போது இயல்பாகவே குனிந்து எழுதுகிறோம் [ பணிவு ] நாம் எழுதும் பேனாவும் குனிந்துதான் எழுதுகிறது எப்போதும் பணிவு நம்மை உயர்த்துகிறது !
“காக்கை கரவா கரைந்துண்ணும்” என்ற குறளுக்கு விளக்கம் சொன்ன ஆசிரியர், காக்கை நாமிடும் உணவை மற்ற காக்கைகளையும் “கா கா” என்று அழைத்து பகிர்ந்து உண்ணும் என்று சொன்னதை வகுப்பு மாணவர்கள் அனைவரும் அந்த காட்சியைத் தாங்கள் நேரில் பார்த்திருப்பதாகச் சொல்லிய போது , ஒரே ஒரு மாணவன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டான்: நான் பார்த்த ஒரு காகம் ஒரு முறுக்கை கிழவியிடமிருந்து திருடிவந்து மரத்தின்மேல் உட்கார்ந்து காலிடுக்கில் வைத்துக்கொண்டு தான் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்தி சாப்பிட்டதே அது ஏன் என்று .கேட்டான்.
.வகுப்பு நேரம் முடிந்துபோனதால் ஆசிரியர் பதில் தேடியவாறே வீட்டிற்குச் சென்றார்.இரவு தூக்கம் தொலைந்தும் , விடை தென்படவில்லை ..காலையில் மகள் கேட்டாள் ஏம்பா இரவு நீங்க சரியா தூங்கல? மகளிடம் விபரம் சொன்ன ஆசிரியருக்கு மகளிடமிருந்து விடை கிடைத்தது ! மறுநாள் பள்ளிக்கு வெளியே காத்திருந்த மாணவனை வகுப்பறைக்கு அழைத்துச் சென்று ஆசிரியர் இவ்வாறு சொன்னார் : நல் வழியில் கிடைத்த உணவை காக்கைகள் பகிர்ந்து உண்டன . திருட்டு வழியில் கிடைத்த உணவை அந்த திருட்டுக் காகம் தான் மட்டும் உண்டது ! எனவே நல் வழியில் சேர்த்த செல்வம் மற்றவர்க்குப் பயன்படும்., தீய வழியில் சேர்த்த செல்வம் மற்றவர்க்குப் பயன்படாது என்ற நீதியையும் எடுத்துச் சொன்னார். மாணவர்கள் மகிழ்ந்தனர் !
ஒரு கல்யாண வீட்டுக்குப் பேச அழைத்தார்கள் .பேச ஆரம்பிக்கும் போது , ஐயா பொறுமையா பேசுங்க இப்பத்தான் சாம்பார் தயாராகிக்கிட்டு இருக்குன்னாங்க.நான் பேசிக்கொண்டு இருந்தேன் ! ஐயா இன்னும் கொஞ்ச நேரம் அப்பளம் பொரிச்சவுடன் சொல்றோம் .அப்ப நீங்க பேச்சை நிறுத்திவிட்டு எல்லோரையும் சாப்பிடச் சொல்லலாம் என்றார்கள் ! அன்றிலிருந்து கல்யாண வீட்டில் சொற்பொழிவிற்கு நான் போவதை நிறுத்திக்கொண்டேன் !
உயர் அழுத்த மின்சார கோபுரத்துக்கு வெளியே ஒரு போர்டு “தொடாதீர்கள் அபாயம் , தொட்டால்” மரணம் சம்பவிக்கும் “மீறினால் சட்டப்படி ” தண்டிக்கப்படுவீர்கள் “ ……?
இந்தப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்சிகளைக் கவிப்பேரொளி நீரை.அத்திப்பூ அவர்கள் சிறப்பாகத் தொகுத்து வழங்கி மகிழ்வித்தார்.
ஆறு குழந்தைகள் பெற்ற மாமியிடம் ஒண்ணாங்கிளாஸ் பாடம் எடுக்கும் இங்கிலீஷ்காரி மாதிரி இருக்கும் தஸ்புஸ் டீச்சர் சொல்லுகிறாள் ‘உங்களுக்குக் குழந்தை வளர்க்கத் தெரியவில்லை’ ‘உங்க பிள்ளை படிப்பில பரவாயில்லை. ஆனால் ரொம்ப குறும்பு பண்ணரான். அவனுடைய உபரி சக்தியை வேற வழியில் மாத்தணும். இல்லாட்டிக் கெட்டுப் போவான்’
அவளுக்குத் தாங்கல. பதிலுக்குக் கேட்டும் விட்டாள். அடுத்த மாதம் பையனோட ரேங்க் வழக்கமா வர்ற மூணிலிருந்து முப்பத்திரெண்டுக்குச் சரிஞ்சிருக்கு. டீச்சர் வீட்டுக்குப் போனாள். அவள் எங்கேயோ நாடக ஒத்திகைக்குப் போயிருக்கிறாள்.
அவள் அம்மா தான் வரவேற்றாள்.அப்புறம் அலுத்துக் கொண்டாள். ’ என்ன டீச்சர் வேலை வேண்டியிருக்கு? முப்பதொரு வயசு வரைக்கும் கல்யாணமே வேண்டாம்னு இருந்தா. பின்னாடி அவளாகவே பண்ணிட்டா. முதல் கொழந்தை தங்கல.இரண்டாவதும் முந்திப்பிறந்து மெஷின்லே வைச்சு இப்பத்தான் மனுஷக் கொழந்தை மாதிரி ஆயிருக்கு. அதெல்லாம் கிடக்கட்டும். முந்தாநாள் உங்க டீச்சரம்மா ஒரு ரசம் வைச்சாளே பாக்கணும். சமுத்ர ராஜாவே வந்து வைச்ச மாதிரி இருந்தது. புருஷன் கை நிறைய சம்பாதிக்கரான். இவள் எதுக்கு வேலைக்குப் போகணும். மாப்பிள்ளை கிளப்புக்குப் போறாரேன்னு அழ மட்டும் தெரியுது. வேற எங்கே போவார்?
‘சரி ஸ்கூலிலேயே பேசிக்கிறேன்’ என்று திருப்தியுடன் மாமி புறப்பட்டாள். தாயே பராசக்தி’ என்று விடை கொடுத்தாள் அம்மாக்காரி.
எல்லாம் பராசக்தி மயந்தான். உபரி சக்தியை நாடக ஒத்திகையில் செலவழித்தால் கூட பராசக்தி கிருபை இல்லாமல் முடியுமோ?