
ரவி தன் மனைவிக்கு காது கொஞ்சம் பிராப்ளம் ஆகிவருகிறது என்பதை உணர்ந்ததும் அவளுக்கு என்ன மாதிரி ‘காது கேட்கும் கருவி’ வாங்க வேண்டும் என்பதை யோசிக்க ஆரம்பித்தான்.
அவளிடம் எப்படி இதைப்பற்றிப் பேசுவது என்று தயங்கி அவர்களுடைய குடும்ப டாக்டரை அணுகி யோசனை கேட்டான்.
‘அது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. கணவனே அவளுக்கு எந்த அளவுக்குக் காது கெட்டுப்போய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம் என்று சொன்னார்.
எப்படி டாக்டர் என்று ஆர்வத்தோடு கேட்டான் ரவி.
ரொம்ப ஈசி. நான் சொல்லறபடி செய்! அவளுக்கு 40 அடி தூரத்தில் இருந்து நீ சாதாரணமான குரலில் பேசி அவளுக்கு அது கேட்குதான்னு பாரு!
கேக்கலைன்னா 30 அடி துரத்தில பேசிப்பாரு!
அதுவும் கேக்கலைன்னா 20 அடி தூரத்தில்
பேசிப்பாரு!
இப்படியே அவளிடமிருந்து சரியான பதில் வரும் வரை பேசிப்பாரு!
பிறகு சொல்லு அவளுக்கு எத்தனை தூரத்தில் காது கேக்குதுன்னு! அதுக்குத் தகுந்த மாதிரி மெஷின் கொடுத்திடலாம்!
அன்று மாலையே ரவி அவளைப் பரிசோதிக்க எண்ணினான்.
40 அடிக்குத் தள்ளி இருந்து “கமலா! இன்னிக்கு ராத்திரிக்கு என்ன டிபன்” என்று சாதாரணமாக் கேட்டான்.
அவளிடமிருந்து பதில் வரவில்லை.
முப்பது அடிக்குப் போய் அதே கேள்வியைக் கேட்டான். அப்போது பதில் இல்லை.
20 அடி – ஹுஹூம் .
10 அடி பதிலே இல்லை.
அவளுக்கு மிக அருகில் சென்று ‘இன்னிக்கு ராத்திரிக்கு என்ன டிபன்’ என்று கேட்டான்.
அவள் சொன்ன பதிலால் அவனுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.
என்ன சொல்லியிருப்பாள்?
உனக்கு என்னாச்சு ரவி? ஐந்தாவது தடவையா சொல்றேன் இன்னிக்கு ரவா உப்புமா!