
மன்னிக்கவும். இது நம்ம சென்னை மெட்ரோ அல்ல. அதுதானே பார்த்தேன் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது!
இது தான் நமது மெட்ரோ! ( பங்களூரில் NAMMA METRO . சென்னையில் AMMA METRO ).
வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா 29ந்தேதி ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை செல்லும் மெட்ரோ ரயிலைத் துவக்கி வைத்தார்.


இன்றைய நிலவரம்:
- மெட்ரோ வருவதற்குக் காரணம் நாங்கள் தான் என்று தி.மு.க – அ.தி.மு.க இரண்டும் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன’
- தி.மு.க வின் ஸ்டாலின் மெட்ரோவில் போகும்போது யாரையோ கன்னத்தில் அறைந்து விட்டதாக ஒரு வீடியோ வைரலாகப் பரவி முடிவில் அது தவறானது என்று முடிவாகியது.
- இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான மெட்ரோ சென்னை மெட்ரோ. பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு 40 ரூபாய்.
- ஆலந்தூர் ரயில் நிலயத்திலிருந்து வெளியே வருவதற்குள் படி இறங்கி தாவு தீர்ந்துவிடும்.
- ஆலந்தூரில் இறங்கி கிண்டிக்கு பஸ் பிடிக்க நினைத்தால் ஜி.எஸ்.டி. சாலையைக் கடக்கும் போது உங்கள் உயிருக்கு யாரும் ஜவாப்தாரி இல்லை.வடிவேலு கிணறைக் காணோம் என்ற மாதிரி சப்வேயைக் காணோம்.


மெட்ரோவின் சிறப்புகள் ( திட்டப்படி)
மெட்ரோ இரயில் நிலையங்களில்
- தானியங்கி இயந்திரத்தின் மூலம் பயணச்சீட்டு வழங்கப்படும்.
“ஸ்மார்ட் கார்டு” முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
- தானியங்கி இரயில் இயக்கம், தானியங்கி இரயில் பாதுகாப்பு மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற வசதிகளைக் கொண்டதாக இருக்கும்
- முழுவதுமே குளிரூட்டப்பட்ட வசதியுடன் இருக்கும்.
- முதல் வகுப்பு/ மகளிருக்கென்று தனியாக பெட்டி வைக்கும் யோசனை உண்டு
- கடைகள், கழிவறைகள், தொலைக்காட்சி பெட்டிகள், இணைப்புப் பேருந்துகள், வாகன நிறுத்தங்கள் போன்ற வசதிகள் இருக்கும்
- கழிப்பறை வசதி இருக்கும் ( ரயில் தொடர் வண்டிகளில் கழிப்பறை வசதிகள் இருக்காது)
- சுரங்கப்பாதையில் பயணிக்கும் போதும், இரயில் நிலையங்களிலும் செல்போன்களில் பேச முடியும்.
- அவசர சூழ்நிலைகளில் இரயில் பெட்டிகளில் இருக்கும் எச்சரிக்கை பொத்தான்களை அழுத்தி இரயில் ஓட்டுநரை எச்சரிக்கலாம்.
- அடுத்து வரும் இரயில் நிலையங்களின் பெயர்களை மின் அணுதிரையில் பார்க்கும் வசதியும், ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதியும் இருக்கும்.
- உடல் ஊனமுற்றோர்களின் வசதிக்காக சக்கர நாற்காலிகளை நிறுத்திவைப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
- நான்கு பெட்டிகளைக் கொண்ட ஒரு மெட்ரோ இரயில் தொடரில் சுமார் 1,276 பேர் பயணம் செய்யலாம்.
- WIFI வசதி தர திட்டம் உள்ளது.
- வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு மெட்ரோ இரயிலில் சுமார் 45 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் ஆகும். தற்சமயம் கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை செல்ல 17 நிமிடங்கள் ஆகும்.
மெட்ரோ இரயில் வழித்தட விவரங்கள்:

வழித்தடம் – 1
வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை 23.1 கி.மீ.
வழித்தடம் – 2
சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை 22 கி.மீ.
மொத்தம் 45.1 கி.மீ.