எரிதழல் சுழன்றது ஏழுநூறு கோடியாவது முறையாக.
இருளகன்று ஒளி பாய்ந்தது.
இயற்கை அன்னை துயிலெழுந்தாள்.
என்னென்ன புதுமையோ என்றெண்ணிக் கண் விழித்தாள்
“யானறியாத புதுவர வென்னவோ” என எண்ண, எண்ண –
“அம்மா, அம்மா” காற்று வந்து கண்ணைக் கசக்கியது.
“ஏனடா, கண்ணே, கைவிலக்கு, கண்ணக் கசக்காதே.”
“அம்மா, புகை, புகை, இலைப்புகை, ஆலைப்புகை,
வாகனப்புகை, அணுகுண்டுப்புகை, கண் எரிகிறதே.”
“சீ, சிறுபிள்ளை, இதற்குப்போய்” அழுவதா?
அதோ அக்காள் பார், போய் விளையாடு”
ஆழிப்பெண் ஓடிவந்தாள் விழியொழுக
“அம்மா, என்னைச் சேறாக்கினான்,
எண்ணைச் சேறாக்கினான்.
என் செல்வங்களைப் பிணமாக்கினான், பாரம்மா” எனக் கால் பிடித்தாள்.
“பேதையே,நீ கலங்காதே” கண்துடைத்து,
”வான் மகள் அழைக்க வருகிறாள் பார் விளையாட
ஓடு, ஓடு, சேர்ந்து கொள்” என்றாளன்னை
“ஓட்டை போட்டானே அம்மா,
என் சட்டையில் ஓட்டை போட்டானே,
சும்மாயிருந்த என்னைக் கிள்ளினானே,
என் செய்வேன்?” புலம்பி மழையாய் அழுதாள் வான்மகள்.
காற்றும் கடலும் வானும் ஓடிவர,
மெய்தழுவி மூவரையும் மடிசாய்த்தாள் மண்மாதா.
பேதைகளே! யார்க்கஞ்சுவது? எவர்க்கஞ்சுவது?
கேவலம் இந்த மனிதனுக்கா? சே! வெட்கம்!
புகைமண்டலமாக்கினானா உன்னை?
சேறாக்கினானா உன்னை?
கிழித்தானா உன்னை? நீங்கள் என்ன செய்தீர்கள்?
மூவரும் ஒரே குரலில்,
”நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை
எப்பொழுதும் போல் எங்கள் கடமையைத்தான் செய்தோம்”
“எந்த தைரியத்தில் உங்களைத்தொட்டான்?
நானிருப்பது தெரியவில்லை அவனுக்கு?
முட்டாள் மனிதன்!
என்னை சீண்டக் கூடாதென்று தெரியாதா?
என் சீற்றம் புரியாதா அவனுக்கு.
காட்டுகிறேன் நான் யாரென்று.
பிள்ளைகளே, உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை.
காண்பிக்கிறேன், வாருங்கள்
நான் சற்றே திரும்பினால் காற்றே, நீ திசை மாறுவாய்
மனிதன் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து சாவான்
கடலே, நீ கொந்தளிப்பாய்
அவனையும் அவனுடைமைகளையும்விழுங்கி விடுவாய்.
வானமே, நீ ஊதாக் கதிர்ளைக் கக்கி உருக்குலைப்பாய் அவனை
இருக்குமிடம் தெரிந்து நடக்காவிட்டால் இது தான் கதி“.
கோபத்தில் உடல் விதிர்த்தாள், திரும்பினாள்
தலை முடிந்தாள் இயற்கை அன்னை !
சுனாமியாய்ச் சீறினாள் !
பூகம்பமாய் வெடித்தாள் !
மழையாய்க் கொட்டினாள் !