புரிந்து கொண்டேன் முருகா புரிந்து கொண்டேன் -உன்
படைப்பின் ரகசியத்தைப் புரிந்து கொண்டேன்
நல்லதும் கெட்டதும் நாட்டினிலே ஒருமித்து
நடப்பதன் காரணம் தெரிந்து கொண்டேன்!
நல்லவர் மாண்புகள் நன்றாகப் புரிந்திடவே
தீயவர் கொடுமையும் அவனியில் மலியவேண்டும்
குளிர்ச்சிமிகு நிழலினது அருமை யுணர்ந்திடவே
வேகின்ற வெயிலின் வெப்பமது வேண்டும்!
சூரபத்மன் கொடுமையால் தேவர்கள் அல்லல்பட
அசுரனின் அதர்மத்தால் உலகமது வாடிவிட
உன்கையால் அவனழிய தர்மத்தின் மேன்மையது
மனிதர்க்கும் தேவர்க்கும் நன்றாகப் புரிந்ததுவே!
ஆத்திரத்தால் பழத்தினையே அண்ணனிடம் தோற்றுவிட்டாய்
பொறுமையின் மதிப்பினையே எல்லோர்க்கும் காட்டிவிட்டாய்
சுட்டபழமா சுடாதபழமா கேட்டாய்நீ அவ்வையிடம்
அகந்தையும் ஞானமுமிரு துருவமென காட்டிவிட்டாய்!
துன்பமது இலையேல் இன்பத்தில் சுகமில்லை
கசப்பொன்று இலையேல் அமிர்தத்தில் சுவையில்லை
ஊடலும் இலையேல் கூடலில் சுகமில்லை
துரோகம் இலையேல் நட்பிலே உயர்வில்லை!
உலகிலே எல்லோரும் நல்லவராய் இருந்துவிட்டால்
அழிவிற்கு அடிகோலும் போரில்லை நோயில்லை
மக்கள்தொகை எளிதாக விரைவாகப் பெருகிடவே
தாங்காது ஐயனே இவ்வுலகம் தாங்காது!