காயிதே மில்லத் கல்லூரி மைதானத்திலிருந்த நாட்களிலிருந்தே சுமார் இருபது கண்காட்சிக்கு சென்றிருந்தாலும் இம்முறை பெரிய மாறுதல். மேஜைக்கு அந்தப்பக்கம். நண்பரின் ஸ்டாலைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு.
இரண்டு கைகளிலும் தூக்கமுடியாமல் பைகளில் புத்தகங்களோடு எத்தனை பேர். விடுமுறை நாட்களிலும் கடைசி நாளிலும் நல்ல கூட்டம். விதவிதமான ரசனைகளும் தேவைகளும். புத்தகங்கள் மத்தியிலேயே 13 நாட்கள். முன்பே அறிமுகமான சில எழுத்தாளர்கள், புதிய அறிமுகங்கள், வாசகர்கள், மற்றகடைகளில் இருந்த உரிமையாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள். விதவிதமான நுகர்வோர் .. நேரம் சென்றதே தெரியவில்லை.
வருபவர்களில்
- லிஸ்ட் எழுதிக்கொண்டுவந்து கேட்பவர்கள்.
- ஸ்டால்களில் புத்தகப் பட்டியல் வாங்கிப்போய் அதிலிருந்து நிதானமாக தேர்ந்தெடுத்து பின்னர் வந்து வாங்குபவர்கள்.
- புத்தகங்களை நோட்டம் விட்டு மனதில் பட்டால் வாங்குபவர்கள்
- சமீபத்தில் வந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட புத்தகத்தை குறிவைத்து வாங்குபவர்கள்
- புத்தகம் வாங்காமலேயே குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவற்றை வாங்குபவர்கள்
- பட்ஜெட் போட்டு வாங்குபவர்கள்
- பாதி வாங்கியபின் ATM சென்று பணம் எடுத்து வாங்குபவர்கள்
- பிரபலங்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பவர்களும் , ‘ஆட்டோக்ராஃப்’ வாங்குபவர்களும்
- கடைசி நாட்களில் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் எதிர்பார்த்து வந்தவர்கள்.
- வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றவர்கள்.
ஸ்டால்களில்
- பொருட்காட்சி விற்பனையை பெரிதும் நம்பியிருக்கும் பதிப்பாளர்கள்.
- நஷ்டம் வராமல் விட்டாலே போதும் என்கிற பகுதிநேர பதிப்பாளர்கள்
- கண்காட்சிகளை மட்டுமே நம்பியி’ருக்கும் ஒரு சில பதிப்பாளர்கள்
- குறைவான சொந்த பதிப்புகளும் அதிகப்படியாக பிற புத்தகங்களும் வைத்திருக்கும் பதிப்பகங்கள்
- விற்பனை மட்டுமே செய்யும் விற்பனையாளர்கள்.
- திருவிழாக்கடைகள் போல் உணவகம், கரும்பு ஜூஸ், செடிகள், வாகன ஸ்டாண்ட் இன்ன பிற
நிகழ்ச்சிகளில்
- அரங்கத்தில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள்
- ஸ்டால்களில் பெரிய , சிறிய அளவில் வெளியீட்டு விழாக்கள்
ஒரு ஸ்டாலில் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளர்களும், உதவியாளர்களும் இருந்தார்கள். நல்ல எனர்ஜியுடன் வேலை செய்தார்கள். ஆனால், ‘வாங்க வேண்டாம் ஸார்.. பார்த்துட்டுப்போங்க’ என்று அழைத்த அந்த இளைஞனிடம் ‘நீயே வாங்கவேண்டாம் என்கிறாயே, அப்ப எதுக்குப் பாக்கணும்?’ என்று கேட்டார்.
விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி மாணவன் சுனில் குமார் தன் நண்பன் மல்லிக்குடன் வந்திருந்தான். அப்பா செலவிற்கு கொடுத்த ரூ.100 க்கும் ஜூலியஸ் சீசர் என்ற புத்தகம் வாங்கிப் போனான். பார்க்கவே நிறைவாக இருந்தது. பல பழைய புதிய நண்பர்களுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்புதான் எனக்கு “TAKE AWAY”.
கிருபாநந்தன்
புத்தகக் கண்காட்சியைக் காணாதவர்கள் நிச்சயமாக ஓர் அருமையான உணர்வைப் பெறும் வாய்ப்பை இழந்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ! இந்தக் குஷி மற்றும் கொண்டாட்டம் காண நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்கவேண்டும் ! உங்களுக்காக இந்த சிறு வீடியோ !