தமிழில் அனைவருக்கும் தகராறு க் , ச் , ட் , த், ப் போன்ற மெய் எழுத்துக்களை இரு வார்த்தைகளுக்கு நடுவே எப்பொழுது சேர்க்க வேண்டும் , எப்போது சேர்க்கக் கூடாது என்பது தான்.
( தகராறுக்கு முதலில் எந்த ‘ர’ போடவேண்டும் என்று கேட்டதற்கு தகராறு எப்பவும் சிறியதா ஆரம்பிச்சு பிறகுதான் பெரியதா முடியும். அதனால் முதலில் சின்ன ‘ர’ போடுங்க , அப்பறம் பெரிய ‘ற ‘ போடுங்க! என்றாராம்)
இந்த வல்லின மெய்யெழுத்துக்களைச் சேர்ப்பதை வல்லினம் மிகும் இடங்கள் என்றும், சேர்க்கக் கூடாத இடங்களை வல்லினம் மிகா இடங்கள் என்றும் சொல்லுகிறோம்.
சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல், சேர்க்கக் கூடாத இடத்தில் சேர்த்தால் அர்த்தமே மாறுபடுவதுடன் ஓசை நயமும் கெட்டுவிடும்.
ஆகவே, வல்லினம் மிகும் இடங்களையும் மிகா இடங்களையும் தெளிவாக அறிதல் வேண்டும்.
கீழே கண்ட விதிகளையும் உதாரணங்களையும் படித்தால் இந்தத் தகராறு நமக்கு வராது.
வல்லினம் மிகும் இடங்கள்
1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும்.
அ + பையன் = அப்பையன்
இ + செடி = இச்செடி
எ + பணி = எப்பணி
2. அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி,எப்படி என்னும் சுட்டு வினாச் சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.
அந்த + கோவில் = அந்தக்கோவில்
அங்கு + சென்றான் = அங்குச்சென்றான்
எங்கு + போனான் = எங்குப்போனான்
3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
நூலை + படி = நூலைப்படி
பாலை + குடி = பாலைக்குடி
4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
அவனுக்கு + கொடுத்தான் = அவனுக்குக்கொடுத்தான்
பணிக்கு + சென்றான் = பணிக்குச்சென்றான்
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
மரம் + பெட்டி = மரப்பெட்டி
பூட்டு + சாவி = பூட்டுச்சாவி
விழி + புனல் = விழிப்புனல்.
6. பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.
பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
பச்சை + கிளி = பச்சைக்கிளி
7. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ.
8. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
மலர் + கண் = மலர்க்கண்
தாமரை + கை = தாமரைக்கை.
9. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும்.
தீ + சுடர் = தீச்சுடர்
பூ + கூடை = பூக்கூடை.
10. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
அழியா + புகழ் = அழியாப்புகழ்
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை.
11. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
எட்டு + தொகை = எட்டுத்தொகை.
12. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.
ஆடு + பட்டி = ஆட்டுப்பட்டி
நாடு + பற்று = நாட்டுப்பற்று.
13. முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்
பொது + தேர்வு = பொதுத்தேர்வு
திரு + குறள் = திருக்குறள்.
14. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்
சால + பேசினான் = சாலப்பேசினான்
தவ + சிறிது = தவச்சிறிது.
15. ஆய், என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின் பின் வல்லினம் மிகும்
என + கூறினான் = எனக்கூறினான்
இனி + காண்போம் = இனிக்காண்போம்.
வல்லினம் மிகா இடங்கள்.
1. அது, இது, அவை, எவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும், எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.
2. ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துக்களின் பின் வல்லினம் மிகாது
அவனா + சென்றான் = அவனா சென்றான்
அவனோ + பேசினான் = அவனோ பேசினான்
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்.
3. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது,
மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது.
4. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்.
எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்.
5. வினைத்தொகையில். வல்லினம் மிகாது.
ஊறு + காய் = ஊறுகாய்
சூடு + சோறு = சுடுசோறு.
6. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
கபிலபரணர்
இரவுபகல்.
7. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
தமிழ் + கற்றார் = தமிழ் கற்றார்
கடல் + கடந்தார் = கடல் கடந்தார்.
8. மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வல்லினம் மிகாது.
பூவொடு + சேர்ந்த = பூவொடுசேர்ந்த
கபிலரோடு + பரணர் = கபிலரோடுபரணர்.
9. எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
ஒன்று + கொடு = ஒன்றுகொடு
இரண்டு + பேர் = இரண்டுபேர்.
10. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது.
வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
வாழிய + பல்லாண்டு = வாழிய பல்லாண்டு.
11. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.
சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்புபாம்பு.
12. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
சிறிய + பெண் = சிறிய பெண்.
தமிழ் கண்ட இலக்கண விதிகளைக் கொண்டு சந்திப் பிழைகளை நாவி மென்பொருள் திருத்துகிறது.
விதிகள் | மிகுமா? | உதாரணம் |
நிலை மொழியின் ஈற்றில் உயிரும் வரும் மொழியில் கசதப வந்தால் | ஆம் | வினாத்தாள் |
ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும். | ஆம் | பூப் பறித்தான், கைக் குழந்தை |
அகர, இகர ஈற்று வினையெச்சம் முன் | ஆம் | வரச் சொன்னான், ஓடிப் போனான் |
நிலைமொழியில் உயர்திணை | இல்லை | திரு கண்ணன், சிவ பெருமான் |
இருபெயரொட்டுப் பண்புத் தொகை | ஆம் | தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம், முருகக்கடவுள் |
பண்புத் தொகை | ஆம் | வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம் |
வினைத் தொகை | இல்லை | காய்கதிர்,பழமுதிர்சோலை |
உம்மைத் தொகை | இல்லை | கபில பரணர் |
உவமைத் தொகை | ஆம் | முத்துப்பல், கமலச் செங்கண் |
உவமை விரி | இல்லை | முத்து போன்ற பல்,முத்தைப் போன்ற பல் |
உருபும், பயனும் உடன் தொக்க தொகை | ஆம் | தமிழ்ப் பேச்சு |
ஊர்ப் பெயர்களின் அடுத்து | ஆம் | திருவாரூர்த் தமிழ்ச்சங்கம் |
எழுவாய் தொடர் | இல்லை | சாத்தன் வந்தான் |
அடுக்குத் தொடர் | இல்லை | பாம்பு பாம்பு |
விளித் தொடர் | இல்லை | சாத்தவா |
தொரிநிலை வினைமுற்றுத் தொடர் | இல்லை | வந்தான் சாத்தன் |
குறிப்பு வினைமுற்றுத்தொடர் | இல்லை | பொன்னனிவன் |
பெயரெச்சம் | இல்லை | வந்த பையன், பறந்த புறா |
எதிர்மறைப் பெயரெச்சத்தில் | இல்லை | வாடாத பூ, ஓடாத குதிரை |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | ஆம் | அறியாப் பிள்ளை, தீராத் துன்பம், ஓடாக் குதிரை, பாடாத் தேனீ |
நெடிற்றொடர்,ஆய்தத்தொடர்,உயிர்த்தொடர்,இடை/மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சம் | இல்லை | வந்து போனான் |
வன்றொடர்க் குற்றியலுகர வினையெச்சம் | ஆம் | போட்டுக் கொடுத்தார் |
இடைச்சொற்றொடர் | இல்லை | மற்றொன்று |
உரிச்சொற்றொடர் | இல்லை | நனிபேதை |
இரட்டைக் கிளவி | இல்லை | தடதட |
எட்டாம் வேற்றுமை | இல்லை | தலைவா கொடும், நாடே தாழாதே |
ஏழாம் வேற்றுமை விரி | இல்லை | தரையில் படுத்தான் |
ஏழாம் வேற்றுமைத் தொகை | இல்லை | தரை படுத்தான் |
7 உருபும் பயனும் உடன்தொக்க தொகை | ஆம் | நீர்ப்பாம்பு |
ஆறாம் வேற்றுமை விரி | இல்லை | கண்ணனது கை |
ஆறாம் வேற்றுமைத் தொகை | ஆம் | புலமைச் சிறப்பு, கிளிக்கூண்டு,வாழைத்தண்டு,தேர்ச்சக்கரம்,காளி கோயில் |
6 உருபும் பயனும் உடன்தொக்க தொகை | – | – |
ஐந்தாம் வேற்றுமை விரி | இல்லை | மதுரையின் வடக்கே |
ஐந்தாம் வேற்றுமைத் தொகை | இல்லை | தமிழ் பேசு, ஊர் நீங்கினான் |
5 உருபும் பயனும் உடன்தொக்க தொகை | ஆம் | வாய்ப்பாட்டு, கனிச்சாறு |
நான்காம் வேற்றுமை விரியின் பின் | ஆம் | கடைக்குப் போனான்,தந்தைக்குக் கடமை |
நான்காம் வேற்றுமைத் தொகை | ஆம் | வேலிக் கம்பி,பொன்னி கணவன் |
4 உருபும் பயனும் உடன்தொக்க தொகை | ஆம் | குழந்தைப் பால், கூலிப்படை, தக்கோர் சால்பு |
மூன்றாம் வேற்றுமை விரியின் பின் | இல்லை | தந்தையோடு சென்றான் |
மூன்றாம் வேற்றுமைத் தொகை | இல்லை | கை தட்டினான் |
3 உருபும் பயனும் உடன்தொக்க தொகை | ஆம் | வெள்ளித் தட்டு |
இரண்டாம் வேற்றுமை விரியின் பின் | ஆம் | பூனையைப் பார்த்தான் |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | இல்லை | நீர் குடித்தான் |
2 உருபும் பயனும் உடன்தொக்க தொகை | ஆம் | நீர்க்குடம் |
முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமை | இல்லை | கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள் |
வன்தொடர்க் குற்றுகரம் | ஆம் | ட்டு,ற்று… |
திரு, நடு, முழு, பொது | ஆம் | திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி |
நிலை மொழியில் மகரம் கெட்டால் | ஆம் | இணையத் தமிழ், அந்நியச் செலாவணி, படத் தொகுப்பு. |
ஆதாரம்:
தொல்காப்பிய/நன்னூல் இலக்கண விதிகள்
கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்களின் பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! என்ற தொகுப்பு
தமிழ் இணைய பல்கலைக் கழக இலக்கணப் பாடங்கள்
தகவல் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மிகச்சிறப்பு. நன்றி
LikeLike