பத்துவயதில் படித்துவைத்த சரித்திரத்தை மறந்துவிட்டோம்
சித்தமது தள்ளாட ஏதேதோ செய்கின்றோம்
முன்னோர்களின் தப்புக்களை முழுதாக மறந்துவிட்டோம்
நினைவில்லை சுதந்திரத் தொண்டர்களின் தியாகங்கள்!
சிறுசிறு துண்டுகளாய் இருந்துவந்த பாரதத்தை
சிற்றரசர் பலபலபேர் ஆண்டுவந்த வேளையிலே
பரஸ்பர நம்பிக்கை ஒற்றுமையும் துளியுமிலை
பெரியவன் நான்தானென சண்டையிலே கழித்திட்டார்!
வாணிபம் செய்யவந்த வெள்ளையன் பார்த்தான்
துணிச்சலாய் பிரித்தாளும் அம்பினையே தொடுத்தான்
காழ்ப்பினால் மதிகெட்டுப் போயிருந்த சிறுவேந்தர்
சூழ்ச்சிக்கு பலியானார் தாழ்வுக்கு வழியானார்!
அடிமைத் தளையுடனே அல்லலுற்ற பாரதமும்
விடுதலைக்குப் பலகாலம் காத்திருக்க நேர்ந்ததுவே
சுதந்திரத் தீபத்தை சீராக ஏற்றிவிட
எத்துணைத் தியாகங்கள் எத்துணைத் துன்பங்கள்!
சரித்திரம் சொல்லிவைத்த பாடங்கள் போதவில்லை
ஒற்றுமையி னுயர்வுதனை மதிக்காமல் மிதிக்கின்றோம்
வேற்றுமையால் வீழ்ந்திட்ட முன்னோர்கள் தப்புகளை
அறியாமை சூழலிலே செய்யவே முனைகின்றோம்!
முன்னேறும் நமைப்பார்க்க பொறுக்காத அயல்நாட்டான்
இனிதாக நஞ்சினையே நம்மனதில் தூவுகிறான்
புல்லுருவி வஞ்சகனின் நோக்கத்தை யறியாமல்
காலிஸ்தான் எங்கள்ஸ்தான் பிரியடா என்கின்றோம்!
திராவிடம் போடோஸ்தான் காஷ்மீரம் என்கின்றோம்
பாரதத்தை நாம்மீண்டும் துண்டாட நினைக்கின்றோம்
நம்நாட்டை விழுங்கவே காத்திருக்கும் எதிரிக்கு
நாமாக நாட்டினையே பலியாகக் கொடுக்கின்றோம்!
சுதந்திரமே குறியாகப் போரிட்ட தொண்டர்கள்
செய்தபெரும் தியாகங்கள் பலனற்றுப் போகிறதே
சிதறிக் கிடந்த நாடுகளை யொன்றாக்க
பட்டபல கஷ்டங்கள் வீணாகப் போகிறதே!
நண்பனேநம் மடமையின் விளைவுகளை யுணர்வோமா
பண்போடு மயக்கத்தின் பிடிவிட்டு எழுவோமா
நயமாகப் பேசுகின்ற வஞ்சகர்சொல் கேளாமல்
சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெறுவோமா!