நிலவு சூடும் அழகும்-கங்கை
நீர்மலிந்த சடையும்
உலவும் அரவு புனையும்- எஃகின்
உறுதி பாய்ந்த உடலும்,
அலகிலாத கருணை -பொழியும்
அமுத வதனமைந்தும்
கலைகளான பரமே- என்றன்
கவிதையான சிவமே!
அதல, சுதலம் முதலாய்- வளரும்
அண்டமாளு கின்றாய்!
நிதமும் கருணை கொண்டே- பாரம்
நீக்கி அருளுகின்றாய்!
நுதலில் விழியினுள்ளே- ஞானச்
சுடர் வளர்த்து நின்றாய்!
முதலுமான பரமே- என்றும்
முடிவிலாத சிவமே!
அஞ்சும் நெஞ்சினோடு-சூழும்
அசுர, தேவர் கூட்டம்
தஞ்சமென்று நின்றன்-கமலத்
தாள்பணிந்த வேளை
அஞ்சலஞ்சல் என்றே -ஆங்கே
ஆலகாலமென்றோர்
நஞ்சையுண்ட பரமே!- என்னுள்
நடனமாடும் சிவமே!
பாடுகின்ற நாவில் -பனுவல்
பரிமளிக்க வருவாய்!
தேடுகின்ற நெஞ்சில்- பக்தித்
தேன் துளிர்க்க வைப்பாய்!
ஏடு தந்து நின்மேல்- பாடல்
எழுதவைத்துகந்தாய்!
காடுநாடும் பரமே- உமையாள்
காதலிக்கும் சிவமே!
தாதையாகி நின்றாய்- நீயே
தாயுமாக வந்தாய்!
வேதவடிவமானாய்!- எங்கும்
விரியும் அண்டமானாய்!
ஜோதி வடிவமானாய்-வானில்
சுழலும் கோள்களானாய்!
நாதமான பரமே!-என்னுள்
நானுமான சிவமே!