



பொன்னியின் செல்வன், கடல்புறா, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், நான் கிருஷ்ண தேவராயன் போன்ற எண்ணற்ற ஒலிப் புத்தகங்களைத் தயாரித்து வெளியிட்ட பாம்பே கண்ணன் அவர்கள் ‘பொன்னியின் செல்வனை’ ஓர் ஒளிப்படமாகத் (TELE FILM) தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
நட்சத்திரங்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
இதைப் பற்றி அவரே தன் முகநூலில் கூறியவற்றை உங்களுக்காகக் கீழே தந்திருக்கிறேன்.
கல்கியின் பொன்னியின் செல்வன் ஒளிப்படம்
ஒளிப்பட வேலைகள் துவங்கி விட்டன
நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது
படப்பிடிப்பிற்கான இடங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன
உடைகளும் காட்சி அமைப்புகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன
ஆனாலும் என்னுடைய பொன்னியின் செல்வன் TELEFILM என்று நான் கூறியதும் பலரும் எத்தனை EPISODE என்று கேட்கிறார்கள் திரைப்படமா என்றும் கேட்கிறார்கள்
அவர்களுக்காக இந்த விளக்கம்
நான் திட்டமிடுவது ஒரு முழுநீள தொலைக் காட்சித் திரைப்படம்தான்
ஆனால் இதைத் தற்சமயம் திரை அரங்குகளில் பார்ப்பதற்காகத் தயாரிக்கப் போவதில்லை
திரை அரங்குகளுக்குச் செல்லவேண்டுமானால் அங்குள்ள பெரிய திரையில் காட்டும் வண்ணம் சில விஷயங்கள் படப்பிடிப்பிலேயே இருக்கவேண்டும்.மேலும் திரை அரங்குகளுக்குள் செல்ல விநியோகஸ்தர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் இவர்களின் தயவு வேண்டும். மிகுந்த பொருட்செலவில் விளம்பரங்கள் செய்யப்படவேண்டும். விநியோகஸ்தினர்களை நாடினால் பிரபலமான நட்சத்திரங்கள் யாரென்று கேட்பார்கள் அல்லது பிரபலமான இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். பல கோடிகள் முதலீடு தேவைப்படும். இல்லை என்றால் அது சூதாட்டம்தான்.
இவற்றை எல்லாம் தற்சமயம் நினைக்காமல் இந்தப் படத்தை ஒரு வீடியோ பிலிமாகத் தயாரிக்க முற்பட்டு வருகிறேன்
மேலும் பொன்னியின் செல்வன் போன்ற படத்தைத் திரை அரங்குகளுக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால் அதை ஒரு இரண்டு மணி நேர படமாகச் சுருக்க வேண்டும்
அது பொன்னி மட்டும்தான். பொன்னியின் செல்வன் அல்ல
யானையை பானைக்குள் அடைப்பது போன்றது
ஆனால் என்னுடைய படம் அந்தக் கதைக்கு – அந்த சரித்திரத்திற்கு எவ்வளவு நீளம் தேவையோ அதை – அதன் தரம் குறையாமல் எப்படி எடுக்க வேண்டுமோ அவ்வாறு இருக்கும்
என்னுடைய இப்போதைய கணிப்பு 300 நிமிடங்களுக்குள் இருக்கும் என்பது.
இதுவே இரண்டு பகுதிகளாக வெளிவரும்.
வெளி நாடுகளில் சில சிறந்த நாவல்கள் திரைப் படங்களாக வருவதில்லை அவை இப்படிபட்ட TELEFILM களாகவே வருகின்றன என்பதை நான் கண்டிருக்கிறேன்.
உதாரணமாக ARTHUR HAILEY போன்றவர்களின் படைப்புகள்
மேலும் TELEVISION தொடராக தயாரிக்கலாமே என்பதற்கு என்னுடைய பதில்:
அதன் சிரமங்களை, அறிந்தவர்கள் சொல்வார்கள்!
அதற்கான முதலீட்டில் நான் இரண்டு பொன்னியின் செல்வன் எடுத்து விடுவேன்
மேலும், என்னுடைய படத்தில் அந்தந்த சரித்திர பாத்திரங்கள் மட்டுமே மனதில் நிற்பார்களே தவிர நடிகர்களைக் கொண்டு பாத்திரங்கள் அடையாளம் காணமாட்டார்கள். அந்த அளவிற்குப் பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கப்போகும் பொருத்தமான நடிகர்கள் இருப்பார்கள்
பொருத்தமான காட்சி பின்னணி காட்சிக்குத்தேவையான வெளிப்புறங்களில் படப்பிடிப்பு,அரங்க நிர்மாணம், உடைகள் கல்கியின் வசனங்கள் இசை மற்றும் பாடல்கள் எல்லாம் உண்டு
பின்னாளில் ஒருநாள் இதுவும் திரை அரங்குகளுக்கு செல்லும் – தொலைக் காட்சிகளில் இடம்பெறும் என்ற நம்பிக்கையோடு அதற்குத் தேவையான TECHNICAL மாற்றங்களைக் குறைந்த செலவில் செய்யும் வண்ணம் இப்போது இதைத் தயாரிக்கின்றேன்
இதைப் பற்றியும் கிராபிக்ஸ் பற்றியும் தொழில்நுட்ப வல்லுனர்களோடு பேசி வருகிறேன்
மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்த TELEFILM என்னும் திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன்
நீங்கள் பார்க்கப்போவது ஒரு திரைப்படத்திற்கு நிகரானதாக இருக்கும்
நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே DVD அல்லது வலைத்தளத்தில் காண்பீர்கள்
உங்களிடம் மீண்டும் ஒரு முறை நான் கேட்க விரும்புவதெல்லாம் நீங்கள் அறிந்ததே
இதன் மாபெரும் பொருட்செலவிற்கான ஆதரவு
எங்களால் முடிந்த வரையில் இதில் செலவு செய்யப்போகிறோம்
இருந்தும் இதன் பிரம்மாண்டம் காரணமாக ,இது எல்லோர் மனதில் இருக்கும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக அமைய வேண்டுமென்ற ஆசையினால்,நம் மனதில் இருக்கும் பாத்திரங்கள் கண் முன் தத்ரூபமாக தோன்ற வேண்டுமென்ற ஆவலினால், உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன்
என்னுடைய ஒலிப்புத்தகங்கள் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் அடுத்து எப்போது என்றும் அவர்கள் மனதிற்கு தோன்றும் சில கதைகளை ஒலிப்புத்தகமாக செய்யுங்கள் என்றும் விண்ணப்பங்களை முன் வைக்கிறார்கள்
நிச்சயம் ஒருநாள் கடவுள் அனுக்ரகமும் உடல் மனது தெம்பும் இருந்தால் நேரமும் கிடைத்தால் செய்வேன்
இதற்கிடையில் நான் கேட்பதெல்லாம் கல்கியின் ரசிகர்களும் பொன்னியின் செல்வன் நாவலை ஒளிப்படமாக பார்க்க விரும்புவர்களும் சிறிய முயற்சியாக இதற்கு உதவலாமே
உங்களால் முயன்ற அளவிற்கு ஒரு ஐந்துலிருந்து பத்து விநாடி படம் தயாரிப்பதற்கு ஒவ்வொருவரும் உதவினாலே சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல தேவையான ஆதரவு கிடைத்து விடும்
குறிப்பாக வெளி நாட்டில் வாழும் கல்கியின் ரசிகர்களும் என் ரசிகர்களும் இதற்கு பெரும் உதவியாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன்
மிண்டும் படப்பிடிப்பு துவங்கியவுடன் உங்களை அணுகுகிறேன்.
என்னுடைய எண்ணமே துவங்கிய படம் வெற்றிகரமாக முடிய வேண்டும்
நாம் கல்கியின் கதாபாத்திரங்களை திரையில் காண வேண்டும்
அவர்களுடன் சில மணி நேரங்களை கழிக்க வேண்டும் என்பதுதான்
இந்த விண்ணப்பம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்தான்
அவர்கள் கொடுக்கப்போகும் சிறிய தொகை ஒவ்வொரு நாளும் அவர்கள் பெயர் சொல்லும்
உதவ விரும்புவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் வங்கிக் கணக்கு தருகிறேன் அதில் செலுத்தி விடுங்கள்
கண்டிப்பாக செய்வீர்கள் என நம்புகிறேன்
இதுவரையில் ஆதரவு அளித்துள்ள சில நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி வணக்கம்
Computer graphics எனப்படும் தொழில் நுட்பம் தெரிந்த கலைஞர்கள் இந்தத் தொலைக் காட்சிப் படத்திற்குத் தேவைப்படுகிறார்கள்
புதியவர்கள் அனுபவஸ்தர்கள் ஆலோசனை வழங்க என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்
பாம்பே கண்ணன்
“வேட்டு போட்டாச்சு. பெருமாள் புறப்புட்டுட்டார். இன்னும் சித்த நாழில நம்ம வீதிக்கு வந்துடுவார். சின்னதா ஒரு கோலத்த போட்டுட்டு வான்னா, எவ்வளவு நாழி எழச்சு எழச்சு போட்டுண்டே இருப்ப. உள்ள போய் முகத்த அலம்பிண்டு தலைய சரி பண்ணிண்டு வா”
“தோ வரேம்மா” என்றபடியே சற்று தள்ளி நின்று போட்ட கோலத்தை ஒரு தடவை ரசித்துப் பார்த்து விட்டு, கதவருகே நின்ற அம்மாவிடம் பல்லைக் கடித்தபடியே, “ஏம்மா இவ்வளவு பெருசா வீதி பூரா கேக்கற மாதிரி கத்தற.. எனக்குத் தெரியாதா”
“ஏண்டி, நீயும் ராஜியும் போடாததையா உன் பொண்ணு போட்டுட்டா. ரெண்டு பேரும் மார்கழி மாசம் வீதியடைச்சுப் போடற கோலத்தப் பாக்க ஊரே திரண்டு வருமே”
பக்கத்தாத்து கோமு பாட்டி முட்டாக்கை இழுத்து விட்டபடியே எங்காத்து திண்ணைல உக்கார்ந்துண்டா. பாட்டிக்கு எண்பது வயசாச்சு. ஆனா இப்பவும் தன் வேலையைத் தானே பார்த்துண்டு சுறுசுறுப்பாக எப்பவும் இருப்பா.
”போடி கமலா, சீக்கிரம் போய் வேற புடவையும் மாத்திண்டு வா. இன்னிக்கிக் குதிரை வாகனம். தேர் முட்டி கிட்ட கிச்சாவாத்து திண்ணைல மொதல்ல போய் இடம் பிடிச்சுண்டா பெருமாள நன்னா சேவிக்கலாம். அங்க சித்த நாழி நிப்பார்.”
குதிரை வாகனத்துல பெருமாள் வரது கண்கொள்ளா காட்சியா இருக்கும். நான் வேகமா உள்ள போகத் திரும்பினபோது, எதுத்தாத்து ரெங்கன் மூச்சிறைக்க ஓடி வந்தான்.
“இன்னிக்கி நம்ம வீதிக்குப் பெருமாள் வரமாட்டார்.. முக்காத்துப் பிச்சி மாமி செத்து போய்ட்டா” என்றபடியே தகவலை மற்றவர்களுக்கும் சொல்ல ஓடினான்.
“ரெங்கா என்னப்பா சோதனை. வயசான கிழவியெல்லாம் விட்டுட்டு சின்னவள கூட்டிண்ட்டியே” என்றபடி பாட்டி பிச்சி மாமியாத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.
“என்னடி சொல்றான் இவன்” என்றபடியே கதவைப் பிடித்தபடி அப்படியே திண்ணையில் உட்கார்ந்தாள் அம்மா.
“கார்த்தாலதானேம்மா பாத்துட்டு வந்த”
அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை. நிலை குத்திய பார்வையோடு அமர்ந்திருந்தாள். அம்மா எதற்கும் சுலபமாக கலங்குபவள் இல்லை. சற்று திடமானவள்தான்.
“வா உள்ள போகலாம்” என்று அவள் கையைப் பிடித்தேன். எப்பவும் மறுப்பவள் இன்று கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தாள்.
கூடத்துத் தூணில் சரிந்தபடியே அமர்ந்தவள் வாய், ராஜி, ராஜி என அரட்டியபடி இருந்தது. கொஞ்ச நாழி முன்னால கோமு பாட்டி சொன்னாளே அந்த ராஜிதான் பிச்சி மாமி. ரொம்ப வருஷமா எல்லாரும் பிச்சி மாமின்னு கூப்டே பழக்கமாயிடுத்து.
அம்மாவின் பால்ய சினேகிதி. எப்பலேர்ந்து இந்தப் பிச்சி மாமி பித்து பிடிச்சவளாட்டம் ஆயிட்டானு பல தடவ கேட்டும் அம்மா கிட்ட இருந்து சரியா பதில் வந்ததில்லை.
இன்னிக்கித்தான் அம்மா சென்னைல இருந்து வந்தா.. சாரங்கன் மாமா ரெண்டு வாரம் முன்னால இறந்து போய் காரியம்லாம் முடிஞ்சு கார்த்தால வந்தா. வந்து காபி குடிச்சு குளிச்ச உடனயே “ராஜிய பாத்துட்டு வரேன்”னு கிளம்பிட்டா.
“என்னம்மா உன்னோட ஆருயிர் சினேகிதியப் பாக்காம பத்து நாளா தவிச்சுப் போய்ட்டயா” என்ற என் கேலியைப் பொருட்படுத்தாமல் கிளம்பிப் போய்ட்டா.
இப்ப திடீர்னு ராத்திரி அவ உயிரோட இல்லன்னு சொன்னா அதிர்ச்சியாத்தானே இருக்கும். என்ன வேலை இருந்தாலும், தன் சினேகிதியுடன் ஒரு மணி நேரமாவது செலவிடாமல் இருக்க மாட்டா அம்மா. இது எனக்கு நினைவு தெரிந்த நாளா நடக்கிறது… அப்பேற்பட்ட சினேகிதியின் இழப்பு கண்டிப்பாக இடியாகத்தான் இறங்கியிருக்கும். அப்பாவுக்கு கேன்சர் வந்தபோதும், ஆறு மாதத்தில் அவர் இறந்தபோதும் அதைத் தைரியமாக எதிர் கொண்டாள்.. அதே போல் இதிலிருந்தும் மீண்டு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன், “எழுந்திரும்மா, அவாத்துக்குப் போய்ட்டு வந்துடலாம்”
“இல்லடி நான் வர மாட்டேன். என் ராஜி கூட நா கார்த்தாலதான் பேசினேன். அவள இந்த கோலத்துலப் பாக்க எனக்கு இஷ்டமில்லை”
பிச்சி மாமி அம்மாவிடம் மட்டும்தான் பேசுவாள். வேறு யார் என்ன கேட்டாலும், சில சமயம் வெறும் சிரிப்பு அல்லது வெற்றுப் பார்வைதான்.
எவ்வளவு சொல்லியும் அம்மா கேக்கவே இல்லை. அவாத்துலயும் சொல்லி அனுப்பிட்டு காத்திருந்து பாத்துட்டு கடைசில பாடிய எடுத்துட்டா.
அம்மா ரெண்டு நாள்ல சரியாய்டுவான்னு பார்த்தா. எப்பப் பாரு ராஜி ராஜின்னு ஒரே புலம்பல். ஜுரமே வந்துடுத்து. ஜுர மாத்திரையக் கொடுத்து தூங்க சொல்லிட்டு, வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து படுத்தேன். நடு ராத்திரி இருக்கும், ராஜி ராஜின்னு அம்மாகிட்ட இருந்து குரல். அடுத்தாப்ல, “அண்ணா ராஜி உன் கிட்டயே வந்துட்டாண்ணா, ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்கோ, ராஜிம்மா போறுண்டி இவ்வளவு நாள் பிச்சியா நடிச்சது.”
“அம்மா அம்மா என்னம்மா சொல்ற” என்றதும் மலங்க மலங்க விழித்தாள். உடல் அனலாய் சுட்டது. இன்னொரு மாத்திரையை கொடுத்துட்டு அவ தல மாட்லயே உக்காந்திருந்தேன். கார்த்தால பால்காரன் விடாமல் மணி அடிக்கும் சத்தம் கேட்டுத்தான் கண் விழித்தேன்., அம்மாவைத் தொட்டு பார்த்தேன். வியர்த்து விட்டிருந்தது.
ஒரு வாரத்தில் உடல் சரியாகி கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்தாலும் அம்மா முன்ன மாதிரி இல்ல. அன்னிக்கி ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் மொட்ட மாடில காத்தாட உட்கார்ந்திருந்தப்ப மெதுவா அம்மா கிட்ட, “அன்னிக்கி ஜுர வேகத்துல என்னன்னவோ உளறினமா, அதான் என்னன்னு கேக்கலாம்னு”
“என்ன உளறினேன்”
“இல்ல, அண்ணா, ராஜி உன்கிட்ட வந்துட்டா அப்டி இப்டின்னு, ஒண்ணும் புரியல”
“உளறலடி உளறல, எல்லாம் நெஜம். என் ராஜியே போய்ட்டா. உசிருக்கு உசிரானா அண்ணாவும் போய்ட்டான். இனிமே சொன்னா என்ன, சொல்றேன்.”
“ராஜி எனக்கு சினேகிதி மட்டும் இல்லை, அவா நமக்கு தூரத்து சொந்தம். அண்ணாவும் அவளும் ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசைப்பட்டா. என்கிட்டத்தான் ரெண்டு பேருமே முதல்ல சொன்னா. எனக்கா ரொம்ப சந்தோஷம். ஆருயிர்த்தோழியே மன்னியா வந்தா, இருக்காதா பின்ன, ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரமா இருக்கும். அவ அவ்வளவு அழகு”
நான் நிமிர்ந்து பார்த்தவுடன், “நீ பாக்கறச்ச பித்து பிடிச்ச கோலத்துல எல்லா அழகும் மறஞ்சு போச்சுடி”
“ரெண்டாத்துலயும் சம்மதம். நிச்சயம் பண்ணணும்கிற நேரத்துல, ஊர்லேர்ந்து வந்த ராஜியோட தாத்தா, ” ஜாதகப் பொருத்தம் பாக்க வேணாமா ” என்று ஆரம்பித்தார். ராஜியோட அப்பா, “மனப் பொருத்தம் இருக்கு, சொந்த பந்தமுமாச்சு. அது போறாதா”
“அதெப்படிடா, உங்கம்மா நேக்கு அக்கா பொண்ணுதான், ஆனாலும் எட்டு பொருத்தமும் அமஞ்சதுனாலதான் கல்யாணம் பண்ணிண்டேன் தெரியுமோன்னோ. ஏன்? நீயும் அத்தை பொண்ணதான் கல்யாணம் பண்ணிண்ட, உனக்கு ஜாதகம் பாக்கலியா”
“இல்லப்பா அவா ரெண்டு பேரும் இஷ்டப்பட்டுட்டா. அதுனாலதான் நான் மத்த ஏற்பாட ஆரம்பிச்சேன். அதுக்கென்ன அவாள்ட்ட பிள்ளையோட ஜாதகம் வாங்கி பாத்துடலாம்”
ஜாதகம் பார்த்ததில், பொருத்தமும் சரியில்லாதது மட்டுமில்லாமல் பிள்ளை ஜாதகப்படி அவனுக்கு ரெண்டு தாரம் உண்டுன்னும் ஜோசியர் சொல்லிட்டார். தாத்தா கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேனுட்டார். ராஜியோட அப்பா பெண்ணின் முக வாட்டத்தைப் பார்த்து, அப்பாவிடம்,
“பூ கட்டி வேணா பாக்கலாமா”
“ப்ரகஸ்பதி, உனக்கு ஒன்ணும் புரியாதா. அதான் ஜோஸியன் தெளிவா சொல்லிட்டானே. அந்த பிள்ளய கட்டிண்டு ஒண்ணு இவ அல்பாயுசுல போய்டுவா. இல்லன்னா இவ இருக்கறச்சயே அவன் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிண்டுடுவான். பெத்த பொண்ணுமேல அக்கறை இருந்தா இப்படி பேசுவியாடா. போ போ வேற நல்ல மாப்பிள்ளையா பாரு”
அப்பா பேச்சை தட்ட முடியாமல் அவரும் வேறு வரன் பாக்க ஆரம்பித்தார். ராஜிக்கு என்ன பண்றதுன்னே புரியல. பயந்த சுபாவம். எதுத்துப் பேசிப்பழக்கமில்லை.
என்ன பண்றதுன்னு புரியாம தவிச்சா. அதுலேர்ந்து தப்பிக்க போட்டதுதான் இந்த பிச்சி வேஷம். பைத்தியக்காரப் பொண்ண எவன் கட்டுவான். அப்ப ஆரம்பிச்சது கட்டை சாயறவரைக்கும் இந்த நாடகம் தொடர்ந்துடுத்து. இதுக்கு ஒரே சாட்சியா நான். அவ தல விதி அப்படி ஆயிடுத்து. தினமும் நான் அவளோட செலவிடற சில மணி நேரங்கள்தான் அவளுடைய சந்தோஷம். எல்லாம் முடிஞ்சு போச்சு இப்ப.” என்றபடி கண்களை துடைத்தபடியே எழுந்தாள் அம்மா.
ரெண்டு பெண்டாட்டி உண்டு என்று ஜோசியரால் சொல்லப்பட்ட சாரங்கன் மாமா கடைசிவரை கட்டை ப்ரம்மச்சாரியாகத்தான் இருந்தார்.
பொன்னியின் செல்வன் கதையை சித்திரக் கதையாக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் தஞ்சையைச் சேர்ந்த ஓவியர் ப. தங்கம் என்பவர்.
முதல் ஏழு அத்தியாயங்களை சித்திரக் கதையின் முதல் புத்தகமாக சென்ற ஆண்டு வெளியிட்டிருந்தார்.
தற்போது அதன் இரண்டாம் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
சென்னையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழ் வசந்தம் வார மலரில் ‘வீர சோழன்‘ என்ற தலைப்பில் ஏழு ஆண்டுகள் மாமன்னன் ராஜராஜசோழனின் வீர வரலாற்றினை வரைந்து சித்திரக்கதையாக வெளியிட்டார்.
அம்மன்னனைப்பற்றிய சித்திரக்கதைகளைத் தமிழகக் குழந்தைகளுக்குத் தருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளார்
80 வயது ஆகியும் இந்த அரிய முயற்சியில் ஈடுபட்ட ஓவியர் தங்கம் அவர்களைக் குவிகம் சார்பில் வாழ்த்துகிறோம் .
ஒரு புத்தகத்தின் விலை ரூபாய் 200 மட்டுமே.
பொன்னியின் செல்வன் ரசிகர்கள் அனைவரும் இதை வாங்கி அவரை ஊக்குவித்துப் பெருமையடையவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
ஓவியர் தங்கம் அவர்களை 9159582467 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் தனது வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவிப்பார். அந்தக் கணக்கில் நீங்கள் பணம் செலுத்தியதும் புத்தகத்தைத் தபாலில் அனுப்பி வைப்பார்.
நான் இங்கிலாந்தில் லண்டன் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வருடம். 1966ல். அப்போது லண்டன் ரீஜெண்ட் தியேட்டரில் ‘THE MOUSE TRAP’(எலிப்பொறி) என்னும் ஒரு அகதா கிரிஸ்டியின் பிரபலமான திட்டமிட்டுக் கொலை புரிந்த கதையை ‘யார் அதை செய்தார்கள்?’(whodunit?) என்றவாறு அமைக்கப்பட்ட விறுவிறுப்பான நாடகத்தைப் பார்த்தேன்!
அந்த நாடகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னால் நீங்கள் அதை நம்பப்போவதில்லை!!!
1952ல் தொடங்கிய நாடகம் நான் பார்த்த நாள் 1966ல் அதே தியேட்டரில் 14 வருடங்களாக தினமும் ஹவுஸ் ஃபுல்லாக நடந்து 14*52*6 கணக்கில் 4368 ஷோக்களைத் தொட்டது.
இப்போது 2017ம் வருடம். இன்னமும் தினமும் தியேட்டரில் முழுமையாக நிரம்பி 65 வருடங்களுக்குப் பின் 26500 ஷோக்களையும் தாண்டி கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்டில் இடத்தை பெற்றிருக்கிறது!! !!
நாடகம் 1972ம் ஆண்டு பக்கத்திலேயே இருக்கும் பெரிய செயிண்ட் மார்ட்டின் தியேட்டருக்கு மாற்றப்பட்டு அதிலேயே தொடர்ந்து நடைபெற்று மக்களை மகிழ்வித்துக் கோண்டிருக்கிறது!
கனடாவில் ஒன்டாரியோ, டொராண்டோவில் டிரக் தியேட்டரில் 9000 ஷோக்களை நிரப்பி சிங்கப்பூர், கோலாலம்பூர் , பேங்க்காக் போன்ற அயல் நாடுகளிலும் போடப்பட்டிருக்கின்றது!! உலகம் முழுவதும் முக்கியமாக ஐரோப்பாவிலிருந்து நாடகம் பார்ப்பதற்கென்றே மக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். நாடகம் இயங்கும் நேரம் 2 மணி 20 நிமிடங்கள்.
அந்த நாடகத்தின் கதை இப்படிப் போகிறது:
லண்டனில் உள்ள ஆள் நடமாட்டமில்லா ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கெஸ்ட்ஹௌஸாக மாற்றப்பட்ட ‘மான்க்ஸ்வெல் மேனர்’ என்னும் பழைய அரச எஸ்டேட். அதன் உரிமையாளர்கள் மாலி மற்றும் ஜைல்ஸ் என்னும் புது மண தம்பதிகள். முதல் வாடிக்கையாளர்களுக்காக கெஸ்ட்ஹவுஸை ரெடி செய்து காத்திருக்கிறார்கள். வெளியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பனி மழை பொழிந்து கொண்டிருக்கிறது. தம்பதிகள் முதல் வாடிக்கையாளர்களின் வருகையைப் பாதிக்குமோ என்று பயம் கொள்கிறார்கள். அப்போது ரேடியோவில் அதே தெருவில் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நடந்த மௌரீன் என்ற ஒரு பெண்மணியின் கொலையைப் பற்றி ஓர் அறிவிப்பு வருகிறது. அந்தச் செய்தி கெஸ்ட் ஹவுஸ் தம்பதிகளை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. கடைசியில் ஒருவர் பின் ஒருவராக ஐந்து வாடிக்கையாளர்கள் வந்து சேர்கிறர்கள். முதலாதவர் மன நிலையினால் சற்று பாதிக்கப்பட்ட கிரிஸ்டஃபர் என்னும் இளைஞர், தம்பதிகளுக்கு சிறிது மன உளைச்சலை கொடுக்கிறார். இரண்டாதவர் திருமதி பாயில். ஒன்றுமே பிடிக்காதவர். பிறர் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர். மூன்றாமவர் எப்போதும் பட்டாளத்தைப் பற்றியே பேசும் நடுத்தர வயதுள்ள மேஜர் மெட்காஃப். நான்காதவர் கேஸ்வெல் என்னும் இளைமையான பெண். ஏற்கெனவே ரேடியோவில் ஒலிபரப்பானக் கொலையைப் பற்றித் தனக்குத்தெரிந்த சில உண்மைகளைச் சொல்லுகிறார். திடீரென நுழைந்த பரவுசீனி என்னும் ஐந்தாதவர் தன் கார் பனிமழை சூறாவளியால் கவிழ்ந்து விட்டதாகக் கூறிக்கொண்டே வந்து சேருகிறார்.
அடுத்த நாள் போலிஸ் டிடெக்டிவ் சார்ஜெண்ட் ட்ராட்டர் கெஸ்ட் ஹவுசுக்கு வருகிறார். அவர் ரேடியோவில் அறிவிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டப் பெண்மணி மௌரீனைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். சில வருடங்களுக்குமுன் நீதிமன்றம் மூன்று குழந்தைகளை, கவனித்துப் பாதுகாத்து வளர்க்க மௌரீன் வீட்டிற்கு அனுப்பியது. ஆனால் அங்கு குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளானார்கள். அதை அறிந்த நீதிமன்றம் குழந்தைகளை அங்கிருந்து அகற்றுமுன் ஒரு குழந்தை மட்டும் பலியாகி இறந்துவிடுகிறது. மௌரீன் பெண்மணி அக்குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியவள். மௌரீன் சிறை தண்டனை பெற்றாள். தண்டனை முடிந்த பிறகு கெஸ்ட் ஹவுசிற்கு அருகில் வசித்து வந்தாள். அங்குதான் அவள் கொலை செய்யப்பட்டாள். அவள் வீட்டில் போலீஸ் கண்டுபிடித்த நோட்புக்கில் ‘மூன்று குருட்டு மூஞ்சூருகள்’ கொல்லப்படுவார்கள்’ என்றும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ மற்றும் ‘மௌரீன்’ விலாசங்களும் எழுதப்பட்டிருந்தன. அவள் உடலில் ஒரு குறிப்பில் ‘இதுதான் முதலாவது’ என்றும் எழுதப் பட்டிருந்தது.
திருமதி பாயில் மேஜரிடம், நீதிபதியாய் இருந்தபோது குழந்தைகளை மௌரீனிடம் அனுப்பியது அவர்தான் என்பதை ஒப்புக்கொள்கிறார். ட்ராட்டர் அங்கிருப்பவர்களில் யாரோஒருவர் கொலை செய்யப்பட்டவரோடு தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கிறார். எல்லோரும் இதை மறுக்கின்றனர்.
திடீரென்று படிப்பறையில் திருமதி பாயில் கொலை செய்யப்பட்டு விட்டதாக மாலி அறிவிக்கிறார். ட்ராட்டர் எல்லோரையும் பாயில் கொலை செய்யப்பட்டபோது எங்கிருந்தார்கள் என்பதை விசாரணை செய்கிறார். அதற்கு உண்மையான பதில் கிடைக்கவில்லை. மூன்று குழந்தைகளில் மற்றொன்றின் இருப்பிடம் தெரியவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சந்தேகிக்கிறார்கள். அங்கிருப்பவர்கள் அனைவரும் மௌரீன் கொலையில் எதோ ஒரு காரணத்திற்காகத் தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பட்டாளத்தில் சேர்ந்த விலாசமில்லாத எஞ்சியுள்ள பெரியதாய் வளர்ந்துள்ள குழந்தைதான் இப்போது முதலாம் சஸ்பெக்ட் எனவும் தெரியவருகிறது. எல்லோரும் அவர்களில் அந்த கொலைகாரன் பதுங்கியிருப்பதை உணர்கிறார்கள். யார் அந்தக் கொலையாளி? அடுத்து கொலைபடப்போகும் அந்த நபர் – ‘குருட்டு மூஞ்சூரு’ யார்? சஸ்பென்ஸ் அதிகரிக்கிறது. சிதறடிக்கும் முடிவில் ‘அந்த கொலையை செய்தவர் யார்’ என்ற உண்மையை நேர் மாறான திசையில் திருப்பிக் கொலைகாரனைக்காட்டி செயலின் நோக்கத்தையும் வெளிப்படுத்தி நம்மை ஒரு குலுக்கு குலுக்கிவிடுகிறார் அகதா கிருஸ்டி.
எலிஸபெத் ராணி II மூலம் உச்ச பிரிட்டிஷ் டேம்(dame) தலைப்பு பெற்ற அகதா கிரிஸ்டியின் உன்னத பாணியின் அதிர்வுறும் சஸ்பென்ஸில் அற்புதமான சிக்கல்கள் அடங்கிய சதித்திட்டம் எந்த மூலை முடுக்களிலெல்லாம் பதுங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களின் ஸ்டைலின் முடிவை ஊகித்துத் தெரிந்துகொள்ள இயலாத தன்மையின் உயர்வு தெரியவருகிறது.
கொலைகாரர் கடைசியில் நாடகம் பார்ப்பவர்களை அவரைப் பற்றியும் கதையின் முடிவைப்பற்றியும், யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதுடன் நாடகம் முடிவடைகிறது! நானும் ஓருவரிடமும் பகிரப்போவதில்லை!!!
ஆரம்பத்தில் ரிச்சார்ட் அட்டென்பரௌ நடித்து பின்னர் அடிக்கடி நடிகர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஓர் அதிசயம் கின்ன்ஸ் புக்கில் இடம் பெற்ற டெரிக் கைலெர் 4515 ஷோவிற்குப் பிறகு இன்றும் உயிருடன் இருக்கிறார்!! அவரின் குரல் FMல் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!!!
ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ரிச்சர்டு அட்டன்பரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமீர் ரஸா ஹுசைன் மற்றும் விராட் ஹுசைன் இயக்கத்தில் ‘தி மவுஸ் டிராப்’ நாடகத்துக்கு ஏர்செல் ஏற்பாடு செய்திருந்தது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில் சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நாடகத்தைப் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.
ஓர் அமெரிக்கர் இந்தியாவில் வந்து பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கினார் என்பது எவ்வளவு வியப்பாக இருக்கிறது?
அதுவும் இவர் தான் எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார் என்றால் இன்னும் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது?
எம்ஜியாருக்குத் தாடையில் ஒரு பள்ளம் இருப்பதால் அவர் கதாநாயகராக நடிக்கத் தகுதியானவர் இல்லை என்று மறுத்த டைரக்டர் அவர். முடிவில் தாடையில் ஒரு ஒட்டுத் தாடியுடன் நடிப்பதை ஒப்புக் கொண்ட டைரக்டர் அவர் ( படம் மந்திரி குமாரி)
அந்தக்கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை இயக்கியவர்.
காற்றினிலே வரும் கீதம் பாடலைப் பாடிய எம் எஸ் சுப்பலக்ஷ்மியின் மீரா படத்தை இயக்கியவர் அவர்.
அவர் தான் எல்லிஸ் டங்கன் என்ற அமெரிக்கர் . அவர் இயக்கிய படங்கள்:
நந்தனார் (1935) – சில காட்சிகள் மட்டும்
சதிலீலாவதி (1936)
சீமந்தினி (1936)
இரு சகோதரர்கள் (1936)
அம்பிகாபதி (1937)
சூர்யபுத்ரி (1940)
சகுந்தலா (1940)
காளமேகம் (1940)
தாசிப் பெண் (1943)
வால்மீகி (1945)
ரிடர்னிங் சோல்ஜர் (1945)
மீரா (1945)
பொன்முடி (1950)
மந்திரி குமாரி (1950)
அவரைப் பற்றி எடுத்த ஒரு ஆவணப் படத்தை ( சற்று நீண்ட படம்தான் ) பார்த்து ரசியுங்கள். தமிழ்த் திரைப்படச் சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு நிச்சயமாக இது பிடிக்கும்!!
நல்லா இருக்கனும்
பிச்சைக்குக்
கையேந்தி நின்றார்
பெரியவர். மகன் மக்களால்
கைவிடப்பட்டவர்.
ஒருரூபா
தட்டில் விழுந்ததும்
.’உன் குழந்தைகுட்டி
நல்லா இருக்கனும்’
என்றபடி நகர்ந்தார்.
இது என்ன கூத்து.
இது என்ன கூத்து ….!
வந்ததோ நற்செய்தி
வரவேற்கும் எதிர்காலம்
துள்ளவேண்டும் மகிழ்ச்சியில் ஏன் இப்படித் துவண்டுவிட்டாய்
துன்பம் துயரம்
கண்டு கண்டு
பழகியதால்
நற்செய்தியை ஏற்க
மனம் மறுக்கிறதோ
உடல் எதிர்க்கிறதோ ?
வாழையடி வாழை
வெட்டிய வாழை பந்தலில் கட்டிய வாழை
நீர்சிந்தி நிற்கிறது
குலையுடன். மண்டபத்துள்ளே
இருமனம்சேர
குலம் தழைக்க
திருமணம் நடக்கிறது
வாழையடி வாழை
இந்தியாவின் முதல் புத்தகக் கிராமம்
மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள பிலார் கிராமத்தை இந்தியாவின் முதல் புத்தகக் கிராமமாக உருவாக்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் வெல்ஷ் பகுதியில் உள்ள ஹே-ஆன்-வை கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தக் கிராமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கிராமத்தில் 25 பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கே கலையம்சத்துடன் வடிவமைப்புகளைச் செய்து கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என்று பல்வேறு பிரிவுகளில் புத்தகங்களையும் வைத்திருக்கிறார்கள். மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்துக்கு மகாராஷ்டிர அரசும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது. ..
இன்னொரு சந்தோஷமான செய்தி! இந்தக் கிராமத்தைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் ஒரு புத்தகக் கிராமத்தை உருவாக்கவிருக்கிறார்கள். கவிஞர் இந்திரன், பதிப்பாளர் வேடியப்பன், கோ. வசந்தகுமாரன் ஆகியோரின் முன்முயற்சியில் இந்தப் புத்தகக் கிராமம் உருவாகவிருக்கிறது. இதற்காக, மகாராஷ்டிரத்துக்குப் பயணம் செய்யவும் இருக்கிறார்கள் இந்தப் புத்தக நண்பர்கள்!
குவிகம் , இந்த முயற்சியைப் பாராட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், நண்பர்களின் இந்த முயற்சிக்குத் தன்னால் ஆன உதவியைச் செய்யவும் குவிகம் காத்துக் கொண்டிருக்கிறது!
சைக்கிள் காலம்!
அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம் – கமலீஸ்வரன் கோயில் தெரு குள்ள ஸ்ரீதர் வாடகை சைக்கிளில் ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தான் – குரங்குப் பெடல் இல்லை – சீட்டில் உட்கார்ந்து!
அவன் ஓட்டிக்கொண்டிருந்தது, எங்கள் வீட்டில் இருந்த பச்சைக்கலர் ஹெர்குலெஸ் சைக்கிள் மாதிரி இல்லை. சின்னதாக நா..னே காலூன்றிக் கொள்ளுமளவுக்கு – (அந்த நீண்ட ’ஏ’காரம் என் குட்டை உருவத்தைக் குறிக்க!) – சிறுவர் சைக்கிள்!
தேய்ந்த பிரேக்குகள், துருவேறிய வீல் கார்டு, பெடலில் தொங்கும் நடு ரப்பர்க் கட்டை, 45 டிகிரியில் வானம் பார்த்த மரக்கட்டை சீட்டு, வளைந்த ஹாண்டில் பார், வாய்பிளந்த பிரேக் லீவர்கள் – முதன் முதலில் இந்த சைக்கிளை ஓட்டிய பையனுக்கு இப்போது குறைந்தது ஐம்பது வயாதாகியிருக்கலாம்!
ஏக்கமாயிருந்தது – ஸ்ரீதர் கொஞ்சம் பெரியவன், வயதில்! ஒரு ரவுண்டு கேட்டால் தரமாட்டான். பாட்டியும் காசு தரமாட்டாள் (ஒரவருக்கு பத்தோ, இருபதோ பைசாதான்) – “விழுந்து அடி பட்டுண்டா யாரு டாக்டர் வீட்டுக்கு அலையறது?”
சின்ன வயது சைக்கிள் அனுபவம் பற்றி ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கும் – சைக்கிள் அன்றைய வெகுஜன சினேகிதன்! எல்லோர் வீட்டிலும் ஒரு சைக்கிள் – அவசரத்துக்கு சட்டென்று ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, பக்கத்துத் தெரு பொட்டிக்கடைக்குப் போய் ஒரணாவுக்குத் தக்காளியோ, வெங்காயமோ வாங்கி வர சைக்கிளை விட வேறு டிரான்ஸ்போர்ட் ஏது?
ஆறாம் கிளாஸில் என்னுடன் படித்த நடராஜனுக்கு இரண்டு காலிலும் போலியோ – மெடல் காலிபர்ஸ் காலை இறுக்க, சின்ன சைக்கிளில் ஒரு மாதிரி கோணலாய் உட்கார்ந்து பெடலடித்தபடி வருவான். ஹாண்டில்பார் பிடிகளிலும், சக்கர கார்டுகளிலும் கலர்க் கலராய்க் குஞ்சலங்கள் ஆடிவரும் – போலியோ குறையை அந்தச் சின்ன சைக்கிள் நட்புடன் தீர்த்து வைத்தது!
என் தாத்தா சைக்கிளோட்டி நான் பார்த்ததில்லை. எத்தனை மைல்களானாலும் நடராஜா சர்வீஸ்தான்! ஆனால் அப்பா, மார்கெட், சலவைக்கடை, ஆபீஸ் – எங்கும் சைக்கிளில்தான் செல்வார் – அம்மாவைவிட அவரது ஹெர்குலஸ் சைக்கிள்தான் அவருக்கு மிகவும் நெருக்கம்! மடித்துக் கட்டிய வேட்டியுடன் லாவகமாக முன்பக்கமாக நொடியில் ஏறிச் செல்வார்! நாளொன்றுக்கு முப்பது கிமீ சலிக்காமல் எழுபது வயது வரை சைக்கிளில் பவனி வந்திருக்கிறார். காலை நடையை விட இது சிறந்த உடற்பயிற்சி அவருக்கு!
’சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது’ ஒவ்வொரு சம்மரிலும் நடக்கும் ஒரு விவகாரம்! ஒருவர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓடிவர, கற்றுக்கொள்பவர் நேராகப் பார்த்துக்கொண்டு, ஹாண்டில்பாரை பாலன்ஸ் செய்துகொண்டு, பெடலை மிதிப்பது எந்த நாட்டியத்தை விடவும் நளினமானது, கீழே விழும் வரையில்! உடன் வருபவர் மூச்சுத் திணறி பாதியிலேயே நின்றுவிட, பேச்சுக்குரல் இல்லாததால் ஓட்டுபவர் திரும்பிப் பார்க்க, பயத்தில் பாலன்ஸ் தவறி விழுந்து தெருவில் சில்லறை பொறுக்குவதும், விழுப்புண்கள் பெறுவதும், சைக்கிள் சரித்திரத்தில் திரும்பத் திரும்ப வருவன!
படிப்படியாக இரண்டு வருடங்களில் நானே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதில் எனக்குக் கொஞ்சம் பெருமைதான்! சைக்கிள் ஸ்டாண்ட் போடுவதில் தொடங்கி, சாயாமல் தள்ளிக்கொண்டு போவது, இடது காலைப் பெடல் மீது வைத்துக்கொண்டு,வலது காலால் தரையில் உந்தி உந்தி சில நிமிடங்கள் கால் தரையில் படாமல், சைக்கிள் பெடல் சவாரி செய்வது, கொரங்கு (?குரங்கு) பெடல் அடிப்பது என்று சுயப்பயிற்சி! பிளாட்பாரமோ, மைல் கல்லோ – அதன் மீது காலூன்றி முதலில் பாரில், பின்னர் சீட்டில் அமர்ந்து சைக்கிள் சவாரி!
இதற்குள் சுள்ளி பொறுக்கிச் சென்ற செல்லாத்தாவின் பின்புறம் சைக்கிளால் மோதி – ப்ரேக் பிடிக்காமல் – கெட்ட வார்த்தையில் வாங்கிய திட்டு, மாது மாமாவின் புது வெள்ளை வேட்டியில் முன்சக்கரம் பட்டு அழுக்கானதற்கான திட்டு, கட்டியிருந்த நாலு முழ வேட்டி, சைக்கிள் செயினில் மாட்டிக் கிழிந்து, எண்ணை/கிரீஸ் கறையில் கலர் மாறியது, தெரு முனையில் திரும்பிய குதிரை வண்டியைப் பார்த்து மிரண்டு, இடதுபுறம் சைக்கிளோடு சரிந்து, தெருவோரச் சாக்கடையில் சங்கமித்தது எல்லாம் சைக்கிள் கால வரலாற்று உண்மைகள்!
இரண்டு கைகளையும் விட்டு, சிட்டுக்களுக்கு முன்னால் சீன் போட்ட மறு நிமிடம், ஹாண்டில்பார் நொடிந்து ‘தடால்’ என கீழே விழுந்து தரை பெருக்காத வாலிபர்கள் குறைவு!
அந்தக்காலத்தில்,இரவு நேரத்தில் விளக்கில்லாமல் சைக்கிளில் போவது குற்றம். அதற்கான விளக்கை தினமும் துடைத்து, மண்ணெண்னை விட்டு ரெடி செய்வது ஒரு வேலை! பின்னால் வந்த முன்னேற்றம், சக்கரத்தில் உராய்ந்தபடி டைனமோவும் – அதனால் பிரகாசமாய் எரியும் கூம்பு வடிவ எலெக்ட்ரிக் லைட்டும்!
நாணல் படத்தில் விளக்கு இல்லை என நாகேஷை நடுரோட்டில் போலீஸ்காரர் நிறுத்த, மெதுவாய் அவரைச் சுற்றி வந்து, தோள்மீது கைபோட்டு சைக்கிளை நிறுத்துவார் – “பிளாட்ஃபாரமும் இல்லே, லைட் போஸ்ட்டும் இல்லே; நடு ரோட்டுல நிக்கச் சொன்னா, எப்படி சைக்கிள நிறுத்தறது? அதான் இப்படி…” என்பார்!
தமிழ் சினிமாக்களில் காதல் சொல்லும் சைக்கிள்கள் – நீதிக்குப் பின் பாசம் (எம்ஜிஆர் – சரோஜாதேவி), கல்யாணப் பரிசு (ஜெமினி – சரோஜாதேவி). அண்ணாமலை (ரஜினி, குஷ்பு) ! சைக்கிள் ஓட்டும் போதுதான் தத்துவப் பாட்டும் வரும் – பாவமன்னிப்பு (சிவாஜி). ஏழ்மையின் சின்னமும் சைக்கிள்தான் (நிறைய படங்கள்).
தபால்காரர், பால்காரர், பேப்பர் போடுபவர் எனப் பலரின் உற்ற தோழன் சைக்கிள் வண்டிதான்!
இரண்டு, மூன்று சக்கர சைக்கிள், சர்க்கஸ் பஃபூன் ஓட்டும் ஒரு சக்கர சைக்கிள், இரண்டுபேர் பெடல்செய்து போகும் மூன்று சக்கர சைக்கிள் எனப் பல ரகங்கள்.
முன்பக்க பார் இல்லாத லேடீஸ் சைக்கிள் பிரத்தியேகமாக பெண்களுக்கானது – ஓர் ஆண் அதை ஓட்டும்போது, பெண்ணுக்கான நளினத்துடன் ஓட்டுவதைப் போல் தோன்றுவது விந்தையானது!
சைக்கிள்கள் ஒரு தலைமுறையின் கலாச்சாரத்தைச் சொல்கின்றன. இன்றும் கிராமங்களின் முக்கியமான போக்குவரவு சாதனமாக இருப்பது சைக்கிள்கள்தான். காரியரில் தேங்காய்க் குலை, வைக்கோல் பிரி, கோழிகள் அடைத்த கூடை என வரப்புகளில் வளைந்து, வளைந்து சைக்கிளை ஓட்டிச்செல்வது அழகாய் இருக்கும்!
ஒலிபெருக்கி அலற, சுற்றிலும் காகிதத் தோரணங்கள் தொங்க, 24 மணி நேரம் இடைவிடாத சைக்கிள் சவாரி, ஊர்ப் பக்கங்களில் பிரபலம்.
நேரத்திற்குக் குழாய் வைத்த எவர்சில்வர் கேனில் டீயுடன் வரும் சைக்கிளுக்கு மவுசு கொஞ்சம் கூடதான்!
இன்று சைக்கிள் ஓட்டுவது ஒரு பயிற்சியாகச் செய்யப்படுகிறது! சுரங்கத்தில் வேலை செய்பவரைப்போல முன் விளக்குடன் ஒரு ஹெல்மெட், ஸ்போர்ஸ் ஷூவுடன் இருபது, முப்பது கிமீ சைக்கிள் சவாரி செய்யும் இளைஞர்கள் (ஞிகளும்) இப்போது நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றனர்!
வீட்டுக்குள் காலைப் பயிற்சி சக்கரமில்லாத ‘ஸ்டாடிக்’ சைக்கிளில் தொடங்குகிறது – அது வெளியில் சைக்கிளில் சுற்றுவதற்கு ஈடாகுமா?