சென்ற ஆண்டில் தமிழில் சிறந்த படம் என்று அறிவித்த ‘ஜோக்கர்’ படத்தைப் பார்த்து அதில் வரும் ஜனாதிபதி பாத்திரத்தைப்பற்றி நாம் வித்தியாசமான கதை மனிதர் என்று நினைத்திருப்போம். இது மாதிரி உண்மையில் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் நினத்திருப்போம்.
ஆனால் உண்மையில் அதே மாதிரி ஒருவர் அமெரிக்காவில் இருந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவர் தான் அவர். தன்னை அமெரிக்காவின் சக்கரவர்த்தி என்று 1859இல் பிரகடனம் செய்தவர்.
அரிசி வியாபாரத்தில் நொடித்துப்போய் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தார் நார்ட்டன். பிளாட்பாரம்தான் அவரது இருப்பிடம். திடீரென்று ஒருநாள் அவர் தன்னை அமெரிக்காவின் சக்கரவர்த்தியாக தனக்குத் தானே நியமித்துக் கொண்டார். அவரது அறிவிப்பைப் படியுங்கள்:
At the peremptory request and desire of a large majority of the citizens of these United States, I, Joshua Norton, formerly of Algoa Bay, Cape of Good Hope, and now for the last 9 years and 10 months past of S. F., Cal., declare and proclaim myself Emperor of these U. S.; and in virtue of the authority thereby in me vested, do hereby order and direct the representatives of the different States of the Union to assemble in Musical Hall, of this city, on the 1st day of Feb. next, then and there to make such alterations in the existing laws of the Union as may ameliorate the evils under which the country is laboring, and thereby cause confidence to exist, both at home and abroad, in our stability and integrity.
வேடிக்கை என்னவென்றால் அவரது நண்பர்களும் , மற்றவர்களும் அவரைக் கிண்டல் செய்யாமல் ‘சக்கரவர்த்தி’ என்றே அழைத்தார்கள். அது மட்டுமல்ல. அவர் சென்ற கடைகளில் எல்லாம் அவருக்கு மரியாதை செலுத்தி இலவசமாக உணவு உடை போன்றவைகளைக் கொடுத்தார்கள்.
சக்கரவர்த்தி நார்ட்டன் , அமெரிக்காவின் சட்டசபையைக் கலைப்பதாக அறிவித்தார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர , ஜனநாயக இரு கட்சிகளையும் தடை செய்வதாக அறிவித்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தன் பெயரில் பேப்பர் பணத்தை வெளியிட்டார். வேடிக்கை என்னவென்றால் அந்தப் பணத்துக்கு மரியாதை செலுத்தி அதற்கான பொருட்களைக் கடைக்காரர்கள் கொடுத்தார்கள்.
அதுமட்டுமல்ல , சான்பிரான்சிஸ்கோவிற்கும், ஓக் லேண்டிற்கும் இடையே ஒரு பெரிய பாலம் கட்டப் போகிறேன் என்றும், கடலுக்கடியில் செல்லும் ரயிலையும் விடப் போகிறேன் என்றும் அவர் ‘அதிகாரபூர்வமாக’ அறிவித்தார்.
( அவர் இறந்து வெகு காலம் கழித்து அவர் கூறிய படியே கடலின் மேல் பாலமும் , கடலுக்கடியில் செல்லும் ரயில் பாதையும் அமைக்கப்பட்டன.)
அவர், மயிலிறகு கிரீடமும், பித்தளைப் பட்டயமும், வாளும் ( எல்லாம் மக்கள் அன்போடு கொடுத்ததுதான்) அணிந்து கொண்டு நகரத்தின் வீதி வழியே தினமும் வலம் வருவார். தன்னுடைய கருத்துக்களை அருகிலிருக்கும் மனிதர்களிடம் கூறுவார்.
ஒருமுறை சைனாக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு பெரிய கலவரம் வெடித்து, இரண்டு கூட்டத்தினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்தனர். நமது சக்கரவர்த்தி அந்த இரு கூட்டத்தினருக்கும் நடுவில் நின்று அமைதிப்படுத்தும் வண்ணம் இறைவனை வேண்டினார். இரு கூட்டங்களும் கலவரத்தை நிறுத்திவிட்டுக் கலைந்து சென்றனர்.
ஒரு தடவை, ஊரு போலீஸ்காரர் இவரைப் பைத்தியம் என்று கூறி சிறையில் அடைத்தார். உடனே நகரத்தின் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் நடத்தினர். செய்தித் தாள்களும் இதைக் கண்டித்துத் தலையங்கள் எழுதின. முடிவில் அவர் அரச மரியாதையுடன் விடுதலை செய்யப்பட்டார். தன்னைச் சிறையில் அடைத்த போலீஸ்காரரை மன்னிப்பதாக அறிக்கையும் விட்டார். அதிலிருந்து அவர் நடந்து செல்லும் போது போலீஸ்காரர்கள் மரியாதையுடன் சல்யூட் அடிப்பது வழக்கமாயிற்று.
ஆனால் ஜனவரி 1880 இல் அவர் இறந்து போது அவரிடம் இருந்தது சில சில்லரைக் காசுகளே! திடீரென்று அவர் பிளாட்பாரத்க்தில் மயங்கி விழுந்து அங்கேயே இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை மிகவும் சிறப்பாக நகரின் முக்கியப் பணக்காரர்கள் ஏற்பாடு செய்தார்கள். இரண்டு லட்சத்திற்குச் சற்று அதிகம் ஜனத்தொகை இருந்த அந்த நகரில் 30000 பேர் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். பிரபல பத்திரிகைகளும் ” சக்கரவர்த்தி இறந்துவிட்டார்” என்று தலையங்கங்கள் எழுதின.
சான் பிரான்சிஸ்கோ க்ரோனிக்கில்:
“[o]n the reeking pavement, in the darkness of a moon-less night under the dripping rain…, Norton I, by the grace of God, Emperor of the United States and Protector of Mexico, departed this life”.[44]
அவரைப் போன்ற பாத்திரங்களைஆர் எல் ஸ்டீவன்சன் , மார்க் ட்வெய்ன் போன்றவர்கள் தங்கள் காவியங்களில் படைத்து அவர் புகழை அழியாச் சின்னமாக மாற்றிவிட்டார்கள்.
மேலும் நகர மக்கள் அவர் பெயரில் ஒரு பெரிய பட்டயத்தை நகரின் முக்கிய இடத்தில் பதித்தனர்
இன்றும் நார்டன் பெயரில் ஒரு சுற்றுப் பயணம் அமைத்து அவர் இருந்த, இறந்த இடங்களுக்கு டூரிஸ்டுகளை அழைத்துச் செல்கிறார்கள்.
சான்பிரான்சிஸ்கோ நகரின் சில முனிசிபாலிட்டி அதிகாரிகள் பலமுறையாக தற்போது இருக்கும் BAY BRIDGE க்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள் !
அது நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!