ராமகுப்தர் (துவக்கம்)
வாசகரே! நாம் படித்த சரித்திரத்தில் சமுத்திரகுப்தருக்குப்பின் இரண்டாம் சந்திரகுப்தன் பதவியேற்று ‘பொற்காலம்’ அமைத்தான் – என்று படித்திருப்போம்.
ஆனால் சரித்திரத்தைச் சற்றுக் கூர்ந்து படித்தால்…
அங்கே… ‘நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!’
உண்மை…
சரித்திர வல்லுனர்கள் இடையில் நடந்த இந்த சரித்திரத் துகள்களை இந்த இருபதாம் நூற்றாண்டில்தான் கண்டெடுத்தனர்.
இங்கு இதிகாசம் போன்ற ஒரு கதை கிடைக்கிறது.
காதல், வீரம், பாசம், துரோகம், நாடகம், வேஷம் அனைத்தும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
கதை சொல்வோம்:
சமுத்திரகுப்தனின் மூத்த மகன் ராமகுப்தன்…
சமுத்திரகுப்தனின் ஆட்சியில் படையெடுப்பு நடத்திய நாட்களில் …
பாடலிபுத்திரத்தில் இருந்துகொண்டு அரசியல் நடத்தியவன் – ராமகுப்தன்.
சமுத்திரகுப்தனின் இளைய மகன் சந்திரகுப்தன்…
சமுத்திரகுப்தனின் ஆட்சியில் படையெடுப்புகளில் எல்லாம் ..
நேரடியாகக் களமிறங்கிப் போரிட்டு வெற்றிகளைப் பெற்றுத் தந்தவன் – சந்திரகுப்தன்.
அரண்மனையிலும், மக்கள் மத்தியிலும் சந்திரகுப்தனின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.
சமுத்திரகுப்தனும் தனக்குப்பின் அரசனாக வர சந்திரகுப்தனே தகுதியானவன் என்று உணர்ந்திருந்தான்.
சமுத்திரகுப்தன் மந்திரியை அழைத்து:
“மந்திரியாரே… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
எனது தந்தை முதலாம் சந்திரகுப்தர் என்னை விட மிகவும் தைரியசாலி”
அவனது வார்த்தைகள் வேதனையை வெளியிட்டது.
மந்திரி: “மன்னவா… உலகமே அஞ்சும் மகாராஜாதிராஜரான தங்களுக்கு தைரியத்தில் என்ன குறைவு. அகில உலகமே தங்கள் பேரைக் கேட்டாலே நடுங்குகிறது”
சமுத்திரகுப்தன்: “மந்திரி… இது உனக்குத் தெரியாதவை அல்ல. இருப்பினும் மறுபடியும் கூறுகிறேன் கேள்!
என் தந்தை எனது திறமைகளை நன்கு அறிந்திருந்தார். எனக்குப் பல அண்ணன்மார்கள் இருந்த பொழுதிலும்.. அவர் தைரியமாக, மக்கள் அவையில்… என்னை ‘அரசன்’ என்று அறிவித்தார். எனக்கு நன்றாகத் தெரியும்…
எனது மூத்த மகன் ராமகுப்தன் ஒரு வீரனாக வளரவில்லை.. நான் எடுத்த படையெடுப்புகளில் ஒன்றில் கூட அவன் பங்கு பெறவில்லை..
வீரமற்று ஒரு கோழையாகவே இருந்திருக்கிறான்.
இன்றும் நான் அவனை மாளவத்தின் ஆளுநராக வைத்திருக்கிறேன்.
அதன் தலைநகரான உஜ்ஜயினியில் இருந்துகொண்டு அவன் அங்கு தனது பெயரில் தங்க நாணயங்களை வெளிவிட்டு வருகிறான்.
சக மன்னன் ருத்ரசிம்மா-II மற்றும் அவன் இளவரசன் ருத்ரசிம்மா-III இருவரும் அருகிலேயே பெரும் சக்திகொண்டு உள்ளனர்.
அவர்கள் என்னிடம் அன்று தோற்று ஒளிந்தாலும் இன்று அவர்கள் தினவெடுத்த தோள்களுடன் தெனாவெட்டாகத் திரிகின்றனர்.
ராமகுப்தன் அவர்களைத் தாக்காமல், அவர்களை வெற்றி கொள்ளாமலும் அடங்கிக் கிடக்கிறான்.
சந்திரகுப்தனோ ..
வீரத்தின் சிகரம் ..
வெற்றியின் நாயகன்…
மக்களின் காவலன்..
அவனை அரசனாக அறிவிப்பது தானே நீதி..நியாயம்..உத்தமம்..
ஆனால் அதை அறிவிக்க என் நெஞ்சில் தயக்கம்…
இப்போழுது சொல்லுங்கள்…
நான் தைரியசாலியா?”
மாவீரன் புலம்புகிறான்..
இந்திய நெப்போலியனின் இரும்பு இதயம் கரும்பு போல் நெகிழ்ந்தது.
புத்திரப்பாசங்கள் எப்பேர்ப்பட்ட வீரர்களையும் பலவீனமாக்கும்!
மந்திரி கூறுகிறார்:
“மன்னவா … நான் இன்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்… தங்களுக்குப் பின் சந்திரகுப்தரை அரசராக்குவேன்.”
மாமன்னன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
ஆனால் அந்த மந்திரி…
இந்நாளைய மந்திரி போன்றவர்..
ஊழலின் மொத்த உருவம்…
மந்திரியின் எண்ணம் எல்லாம்:‘சந்திரகுப்தன் அரசனானால் நேர்மையான ஆட்சி செய்வான். ஆனால், ராமகுப்தன் அரசனானால் தனக்குப் பொன்னும் பொருளும் கொடுப்பான்’.
மந்திரி கட்சி மாறினான்.
சில நாட்களிலே…
சமுத்திரகுப்தன் மறைந்து விட்டான்.
இரும்புக்கரங்களால் உலகையே வென்ற மாவீரன்.
சுவர்க்கத்திற்குப் படையெடுக்கப் போயினன் போலும்!
ராமகுப்தன் மந்திரியை அழைத்தான்.
“மந்திரியாரே!
நான் அரசனானால் இந்நாட்டை நீங்களே நிர்வகிக்கலாம்.
பொன் மூட்டைகளுக்கும்… பெரும் நிலங்களுக்கும் தாங்கள் அதிபதியாகலாம்.
தந்தை இறந்த இன்றே எனக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
காலம் தாழ்த்தினால் சந்திரகுப்தன் ஏதாவது செய்து அரியணையைப் பறித்துக்கொள்வான்.”
மந்திரி:
“ராமகுப்தரே! நீங்கள் தான் இந்நாட்டு மன்னர்..
அதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
சில நாட்கள் பொறுக்க வேண்டுவது மிகவும் அவசியம்.
மக்கள் அனைவரும் மன்னர் இறந்த துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.
உங்கள் பட்டாபிஷேகத்தை யாரும் கொண்டாடமாட்டார்கள்.”
மந்திரி தொடர்ந்தார்..
“மேலும் இன்னொரு முக்கிய சமாசாரம்” அவன் காதில் முணுமுணுத்தார்.
ராமகுப்தனின் முகம் சூரியப்பிரகாசம் அடைந்தது.
“அமைச்சரே… இந்த ஆலோசனை ஒன்றுக்காக .. உங்களுக்கு எதையும் தரலாம்..”
சூழ்ச்சிகள் ரகஸ்யமாகும்பொழுது அதன் சக்தி இன்னும் அதிகமாகும்.
காலம் காலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு பேரழகி தோன்றி மக்களின் நெஞ்சங்களை ஈர்த்து- மாமன்னர்களைத் தன் வசமாக்குவர்.
மகாபாரதத்தின் திரௌபதி.. புத்தர் காலத்தில் ஆம்ரபாலி…இந்நாளில் ஐஸ்வர்யாராய் …என்று சரித்திரம் படம் பிடித்துக் காட்டும்.
இவர்கள் அனைவரும் அழகு மட்டும் கொண்டிருக்கவில்லை.
அறிவிலும் மேம்பட்டிருந்தார்கள்.
அந்த வரிசையில் அன்று…
துருவாதேவி…
இளவரசி..
பேரழகி..
அவள் அழகின் பெருமை காட்டுத் தீ போல நாட்டில் பரவியிருந்தது.
அழகுடன் கூடிய அவளது அறிவும் மற்றும் துணிச்சலும் நாடறிந்தது.
சந்திரகுப்தனின் மாவீரமும் அவனது போர் சாகசங்களும் அவள் மனதில் காதலைத் தூண்டியது.
அவனது வசீகரமும், அறிவும், கலையார்வமும் அவளை வெகுவாக ஈர்த்தன.
சந்திரகுப்தனும் துருவாதேவியை எண்ணிக் காதலால் உருகினான்.
நளன் – தமயந்தி போல் இருவரது காதலும் தூது விட்டு வளர்ந்தது.
சமுத்திரகுப்தன் மறையுமுன்…
சந்திரகுப்தன் தந்தையிடம் சென்று அவனிடம் தன் காதலைக் கூறியிருந்தான்.
சமுத்திரகுப்தன் தனது தள்ளாத நிலையிலும் …
அவர்கள் இருவரது திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தான்.
சந்திரகுப்தனும் துருவாதேவியும் தேன்பூக்களில் விழுந்த தேனீக்கள் போலாயினர்..
காதல் ஒரு போதை!
நினைத்தவுடனே அது போதை தரும்!
திருமணம் செய்து கொள்வதைவிட அதற்குக் காத்துக் கிடப்பதில் உள்ள சுகம்.
சுகமோ சுகம்…
சமுத்திரகுப்தன் காலமாகி வாரமிரண்டு சென்றது.
ராமகுப்தன் சந்திரகுப்தனை அழைத்தான்.
மந்திரியாரும் உடன் இருந்தார்.
ராமகுப்தன்:
“சந்திரகுப்தா!
தந்தையின் மரணம் நமது நாட்டையே ஆட்டிவிட்டது…
அரசன் இல்லாத நம் நாட்டை அந்நிய மன்னர்கள் தாக்க முயலுவர்.
அதை நீ தான் படைத்தலைமை ஏற்று தடுத்துக் காக்கவேண்டும்.
தந்தையார் சாகும் முன் மந்திரியாரிடம் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார்.
அதை அவர் சொல்லக் கேள்”
மந்திரியார் விஷயங்களைத் திரித்துக் கூறினார்:
“சந்திரகுப்தா!
மாமன்னர் தன் கடைசி நாட்களில் பெரும் துயரத்தில் இருந்தார்.
தான் மன்னனாவதற்காகத் தன் அண்ணன்களை அழிக்க நேர்ந்த கொடுமைதனை நினைத்து நினைத்துப் பெரிதாகப் புலம்பினார்.
அவர் அழுது அன்றுதான் நான் பார்த்தேன்”
மந்திரியின் குரல் தழுதழுத்தது.
நடிப்பில் அவர் சிவாஜி கணேசனை மிஞ்சினார்.
மந்திரி தொடர்ந்தார்:
“மன்னர் என்னிடம் சொன்னது:
மந்திரி… இதுபோல் நமது குப்தர் பரம்பரையில் இனி நடக்கக்கூடாது.
சந்திரகுப்தன் மாவீரன் … அவன் படைத்தலைவனாகி நமது நாட்டை எதிரிகளிடமிருந்து காக்க வேண்டும். ஆனால் அரசனாக என் மூத்தமகன் ராமகுப்தன்தான் வரவேண்டும். சந்திரகுப்தன் அவனை முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும்.
இதை நீ அவனிடம் எடுத்துக் கூறிச் செய்வாயா? என்று கேட்டார். “
மந்திரி சொல்வதைக் கேட்டு சந்திரகுப்தனுக்கு மனம் உருகியது..
பாகாய் உருகியது.
“மந்திரியாரே!
தந்தை சொல் மிக்க மந்திரம் வேறு ஒன்றும் இல்லை…
ராமகுப்தனுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.
குப்தர்களின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு அவனது ஆட்சிக்கு என்னால் எந்த குந்தகமும் வாராது”
உண்மையாக … நேர்மையாக அவனது வாக்கு கம்பீரமாக ஒலித்தது.
சதிகள் … சரித்திரங்களைப் புரட்டிப் பார்த்திருக்கிறது..
‘இராமாயணத்திலிருந்து… பாகுபலி வரை’ சதிகள் காவியங்களை நடத்தி வந்துள்ளது.
மந்திரிகள் சூழ்ச்சி செய்வதும் ஊழல் செய்வதும் இந்நாளில் சகஜமாகி விட்டது.
அந்நாளிலும் அதற்கு விதிவிலக்கு இல்லை.
அடுத்த வாரமே ராமகுப்தனின் முடி சூட்டு நாள் குறிக்கப்பட்டது.
மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
ஆனாலும் சந்திரகுப்தன் மகிழ்வோடு ஆதரித்தான்.
முடி சூட்டும் நாளுக்கு முதல் நாள்..
ராமகுப்தன் மந்திரி தனக்குத் தந்த ரகசிய ஆலோசனையை அமுலாக்கத் தொடங்கினான்.
துருவாதேவியை அழைத்தான்.
“துருவாதேவி…
உனது அழகு பிரசித்தியானது..
உனது அறிவோ அபரிமிதமானது.
நீ மாபெரும் சாம்ராஜ்யத்திற்கு ராணியாக வேண்டியவள்.
நீ சந்திரகுப்தனுக்கு நிச்சயமாகி உள்ளாய்.
அவனை மணந்தால் நீ இளவரசியாகவே இருப்பாய்.
என்னை மணந்து அகில உலகின் முடி சூடிய ராணியாக விளங்குவாய்.
நான் உனது அடிமை“
துருவாதேவி நெருப்பில் விழுந்த மயில் போல் துடித்தாள்.
“இளவரசே!…
நான் ஏற்கனவே மணமாக உள்ளேன்.
சந்திரகுப்தர் எனது காதலர்.
என் கணவனாக உள்ளார்.
என்னை விட்டு விடுங்கள்”
தைரியமாகத்தான் சொன்னாலும் … அழுகையை அவளால் அடக்க முடியவில்லை..
ராமகுப்தன்:
“துருவாதேவி!
நான் நாளை அரசன்…
எனது ஆணைக்கு சந்திரகுப்தன் கட்டுப்படுவேன் என்று உறுதி கொடுத்திருக்கிறான். மேலும் நீ என் ஆணைக்குக் கட்டுப்படவில்லை என்றால் சந்திரகுப்தனுக்கும் ஆபத்து காத்திருக்கிறது”
அவன் குரலில் ஒரு அச்சுறுத்தும் தொனி..
மறுநாள்…
முடி சூட்டு விழா ஆரம்பத்தில்..
அமைச்சர் அறிவித்தார்:
“இளவரசர் முடி சூடுமுன், ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முதலில் நடைபெறும், பின் இருவரும் மகாராஜாதிராஜா- மகாராணி என்று முடி சூட்டப்படுவர்”
மக்கள் திகைத்தனர்.
சந்திரகுப்தன் நிலை குலைந்து போனான்.
துருவாதேவி மேடையில் ஏறினாள்:
“சந்திரகுப்தரே.. எனது திருமணம் தங்களுடன் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் பதில் என்ன”
சந்திரகுப்தன் பெரும் சங்கடத்திற்கு ஆளானான்.
அவனிடம் வீரத்திற்குக் குறைவில்லை.
ஆனால் இது என்ன சோதனை.
“துருவாதேவி!
நீ என்றுமே என் இதயத்தில் இருப்பாய்.
என்றாவது ஒரு நாள் நான் மன்னனானால் நீ தான் என் ராணி..
ஆனால்… இன்று நான் என்ன சொல்வேன்?
அண்ணன் நாட்டைக் கேட்டான்.,,
கொடுத்தேன்..
அண்ணன் என் கண்களைக் கேட்கிறான்…
அன்பால் விளைந்த கொடுமை…
என்ன செய்வேன்!”
புலம்பினான்.
துருவாதேவி சந்திரகுப்தன் தன்னைக் காப்பான் என்று நம்பியிருந்தாள்…
திக்பிரமை அடைந்தாள்.
ராமகுப்தன்:
“சந்திரகுப்தா! மன்னனாகும் நான் உன்னிடம் வேண்டுவது இது ஒன்று தான்.
மேலும் இது குப்தச் சக்ரவர்த்தியின் ஆணை..
இதை மீறுவது ராஜத்துரோகம் மட்டுமல்ல.
தந்தையின் ஆணையை மீறுவதுமாகும்.
தந்தை உன்னை எனக்கு என்றும் பணியுமாறு ஆணையிட்டிருக்கிறார் என்பதை அறிவாயல்லவா?”
காதலர் இருவரும் துடித்தனர்.
விதி வலியது.
ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முடிந்தது..
ராமகுப்தன் குப்தச் சக்ரவர்த்தியானான்..
‘பாகுபலி- The Beginning’ போல இது ராமகுப்தன் – துவக்கம்.
இனி வருவது ‘பாகுபலி- The Conclusion’….
மன்னிக்கவும்..
ராமகுப்தன் – மறைவு.
காத்திருங்கள்…