கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ. பாஸ்கரன்.

dr1

வாணிகப் பரிசிலனோ யான்? 

Related image

மிக அழகிய அரண்மனை அது. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், கோட்டைக் கொத்தளங்களும், சுற்றிச் சுழன்றோடும் நீர்ச்சுனைகளும் கொண்டு, மன்னனின் ரசனைக்கு அத்தாட்சியாக நின்றுகொண்டிருந்தது!..

நீண்ட தூரப் பயணம். முகத்திலும் உடலிலும் களைப்பின் அறிகுறிகள். அரண்மனை வாயிலில் வந்து, நிமிர்ந்து நின்று,  “நான் ஒரு செந்தமிழ்ப் புலவன். அரசரைக் காண வந்துள்ளேன்’ என்கிறான் வந்தவன்.

தோற்றத்திலும், சொற்களின் தோரணையிலும் அவன் புலவன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

கூர்மையானது வாள் மட்டுமல்ல, பார்வையும் கூடத்தான். அங்கிருந்த காவலாளி – அந்தக் கணமே விரைந்து அரசராணையை நிறைவேற்றுகிறான்.

புலவரை மிக்க மரியாதையுடன் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறான். பட்டுப் பீதாம்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமரவைக்கிறான் – மேலிடத்து உத்தரவு அப்படி!

“யாரங்கே?” – தட்டிய கையொலிக்குப் பணியாரங்களும், பழரசங்களும் புலவன் முன் அணிவகுக்கின்றன!

”அரச மண்டபத்தில் அதிமுக்கியமான நாட்டு நிலவரம் குறித்த ஆலோசனையில் அரசனும், மந்திரியும், சேனாதிபதியும், மற்றும் முக்கிய அதிகாரிகளும் தீவிரமாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அரசரது அனுமதி பெற்று விரைந்து வருகிறேன்; அதுவரை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்” – மின்னலென மறைகின்றான் காவலன்.

ஆசனத்தில் அமர்ந்தபடியே, கண்களைச் சுழல விடுகின்றார் புலவர். விருந்தினர் மாளிகையின் பொலிவு அவரை மயக்குகிறது – தன் தோளில் போர்த்தியுள்ள பட்டு வஸ்திரத்தின் விசிறி மடிப்புகளைச் சரி செய்துகொள்கிறார் – அதிலிருக்கும் கிழிசல் வெளியே தெரியா வண்ணம்!

”மன்னா, உன் கொற்றம் வாழ்க! கொடை வாழ்க!! வெகுதூரத்திலிருந்து தங்களைக் காண ஒரு புலவர் வந்திருக்கிறார். விருந்தினர் மாளிகையில் தங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் மன்னா!”

“அப்படியா, மிக்க நன்று. அமரச் செய்து தாகத்திற்கு ஏதேனும் கொடு”

 “ம்ம், மந்திரியாரே, இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியமானது – இடையில் நிறுத்தக் கூடாதது. வந்திருக்கும் புலவருக்குத் தேவையான சன்மானம், பொன், ஆடை ஆபரணங்களை அளித்து, வழியனுப்பி விட்டு வாருங்கள். மற்றுமொரு சமயம் நான் அவரை சடுதியில் சந்திப்பதாகவும் சொல்லுங்கள்.”

’உத்தரவு மன்னா – அப்படியே செய்கிறேன்”

Image result for king and a poet in old tamilnadu

ஒரு பார்வையில், காவலாளிகள் இருவர் பின் தொடர, மந்திரியார் விருந்தினர் மாளிகை நோக்கி நடக்கிறார் – மனம் மட்டும் இங்கேயே மன்னரின் ஆலோசனைக் கூட்டத்தில்!

மந்திரியாரின் நடை, உடை மற்றும் பின் தொடரும் காவலாளிகளைக் கண்டு, மரியாதையுடன் எழுந்து, வணங்கி நிற்கிறார் புலவர்.

மந்திரியார், அகமும், முகமும் மலர வணங்கி, “ வணக்கம் புலவரே, தங்கள் வரவு நல்வரவாகுக! எங்கள் நாட்டில் தங்கள் புனிதப் பாதம் படரக் கொடுத்து வைத்திருக்கின்றோம் – நான் இந்நாட்டின் முதன் மந்திரி!”

”வணக்கம்! மன்னரின் தரும குணமும், தயாள மனமும் கேள்விப்பட்டு அடியேன் வந்துள்ளேன். இந்த இடமும், காவலரின் பண்பும், விருந்தினரை உபசரிக்கும் விதமும் நான் கேள்விப்பட்டதை உறுதி செய்கின்றன! மிக்க மகிழ்ச்சி! மன்னரைக் காணும் ஆர்வத்தில் உள்ளேன் – அவரது செங்கொடையும், கொற்றமும் செழிக்கப் பாடல் இயற்றியுள்ளேன்!”

“மிக்க நன்று. தீந்தமிழையும், தெய்வப் புலவர்களையும் போற்றிப் பாராட்டுவதிலும், வாரி வழங்குவதிலும், வாழ்த்தி வணங்குவதிலும் பேரானந்தம் கொள்பவர் எம் மன்னர்! ஆனால்….. இன்று ஒரு முக்கிய அரசு ஆலோசனைக் கூட்டம்; அரசரால் உங்களை நேரில் காண இயலாது – வருந்துகிறேன். அவர் ஆணைப்படி, இந்தப் பரிசுகளை, எங்கள் நாட்டின் சீராக உங்களுக்களிப்பதில் பெருமையடைகிறேன்!”

புலவர் முகம் மாறுகிறது – கோபமா, வருத்தமா அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை!  பரிசு, பட்டம், பதவி என்றால் உடனே ஓடிச் சென்று வாங்கிக் கொள்வதுதானே முறை? அதுவும் அரசனே கொடுக்கும்போது தடை என்ன இருக்கமுடியும்? தொலை தூரத்திலிருந்து, கிழிந்த மேலாடையுடன் உதவி நாடி வந்திருக்கும் புலவன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே? என்ன தயக்கம்? 

அந்தக் காலத் தமிழன் தன் மீதும், தன் திறமை மீதும் மிகவும் நம்பிக்கையும், உவப்பும் கொண்டவன்.

குமுறுகிறார் புலவர் –

 ‘பெருங்குன்றுகளையும், மலைகளையும் கடந்துவந்து, மன்னரைக் கண்டு, போற்றிப் புகழ்ந்து, மகிழ்வித்துப் பரிசில் பெற வந்திருக்கும் எனக்கு என்ன பரிசு தகுதியானது என்பதனை,என்னைக் காணாமலே, எங்ஙனம் உங்கள் மன்னர் தெரிந்து கொண்டார்? எதற்காகப் பரிசு? நான் புலவன் என்பதாலா? என் புலமை என்னவென்றே அறியாமல் என் திறமைக்குப் பரிசை எங்ஙனம் நிர்ணயம் செய்யமுடியும்? நானென்ன வாணிகப் பரிசிலனா?

என்னைச் சிறிது நேரம் பார்த்து, அறிந்து, போற்றி, தினை அளவு பரிசு தந்தாலும் அதனைப் பெரிதாய் எண்ணி மகிழ்வேனே – அதுதானே இனிமையானதும் கூட!’

அரசனைக் காணாமல் பரிசை மட்டும் வாங்கிக் கொள்வதில் விருப்பமற்ற புலவர் – திறமைக்கேற்ற பரிசு, விருது – கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அந்நாளில் தெரிந்திருந்தது!

 

208 – புறநானூற்றுப் பாடல்

பாடியவர் – பெருஞ்சித்திரனார்
பாடப்பெற்றவர் – அதியமான் நெடுமான் அஞ்சி
திணை – பாடான் திணை
துறை – பரிசில்

பாடல்:

குன்றும் மலியும் பல பின் ஒழிய
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு’ என
நின்ற என் நயந்து அருளி ‘ஈது கொண்டு,
ஈங்கனம் செல்க,தான்’ என, என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அருங் காவலன்?

காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஒர்
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி,
தினை அனைத்து ஆயினும், இனிது – அவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.

இந்தப் புறநானூற்றுப் பாடல், அந்தக் காலத் தமிழரின் நேர்மை, தன்னம்பிக்கை, தகுதிக்கேற்ற பரிசு / விருது போன்றவை குறித்துப் பேசுகிறது. – (படித்ததில் பிடித்தது!!)

(பரிசு / விருதுகள் இன்று அளிக்கப்படுவது, பின்னர் ஒரு நிலையில் திருப்பப்படுவது, என்பதைப்பற்றியெல்லாம் யாராவது இன்று குழப்பிக்கொண்டால் அதற்குப் பொறுப்பு நானல்ல – சங்க காலப் புலர்கள்தாம்!)

 

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.