தலைவனிடம், தலைவி ,”உலகத்திலேயே சிறந்த பரிசு வேண்டும். தருவாயா ? “என்று கேட்டாள்.
அதற்கு அவன் விடையாகக் கூறிய கவிதை இது :
மீனொத்த விழிக்குக் கருநிற முகிலை
மென்’மை’யாய்த் தீட்டிட அளிப்பேன்.
வானத்தில் மின்னும் உடுக்களைப் பறித்து
மாலையாய்ப் போட்டுநான் சிரிப்பேன்.
சீனத்துச் சுவரைச் சிறியதாய்ச் சுருக்கிச்
சிற்றிடை மேகலை தொடுப்பேன்
மோனத்தில் இருக்கும் முழுநிலவு அதனை
மோதிர மாகவே விடுப்பேன்.
சூரியச் சுடரின் சூட்டினைக் குறைத்துச்
சூட்டுவேன் நெற்றியில் திலகம்.
சீரிய வான வில்லினை எடுத்துச்
செங்கையில் வளைஅணி விப்பேன்.
பாரினில் சிறந்த நதியினை வனைந்து
பாதத்தில் சிலம்பெனத் தருவேன்.
பேரிம யத்தைப் பெயர்த்தெடுத்து அதனைப்
பேணிடும் கட்டிலாய்ப் புரிவேன்.
கருங்கடல் அலையைக் காஞ்சியில் நெய்து
கட்டுடல் புடைவையாய்க் கொடுப்பேன்.
நெருங்கிய கோள்கள் இரண்டினை நெகிழ்த்தி
நிகரிலாக் குண்டலம் வடிப்பேன்.
மருங்குள இயற்கைப் பொருட்களை இயைத்து
வனப்புடன் அணிகலன் இழைப்பேன்.
அருங்குண அணங்கே, ஆயினும் என்றன்
அன்பினுக்கு ஈடுஇவை ஆமோ?
கவிதை மிக மிக அருமை.இத்தகைய வளரும் கவிஞர்கள் ஊக்குவிக்க ப்பட வேண்டும்.வாழ்த்துக்கள்
LikeLike
நன்றி
LikeLike