அட ராஜாராமா…! (சென்ற இதழ் தொடர்ச்சி) நித்யா சங்கர்

காட்சி – 5

(ஒரு வீடு. இரவு நேரம். பார்வதி கட்டிலில் உட்கார்ந்து
கொண்டிருக்கிறாள். ராஜாராமன் வருகிறான்)

 

Image result for leela samson in o kadhal kanmani

ராஜா : (வந்து கொண்டே, நாடக தோரணையில்) மந்திரி..! அண்டாவில் தினமும் நீர் பொழிகிறதா..? குண்டாவில் அரிசி நிறைகிறதா..? உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பாய்கிறதா..?

பார் : (சிரித்துக் கொண்டே) ஓ… எல்லாம் அப்படியே ஆகிறது
மன்னவா… !

ராஜா : (மனம் விட்டுச் சிரிக்கிறான்) அம்மா.. மகன் முகம் மலர மகிழ்வுற்றாள் தாய் என்று சொல்வாங்க… இந்தத் தாயின் முகம்
மகிழ்ச்சியடையும்போது பையன் மனம் அடையும் ஆனந்தம்
இருக்கிறதே…. ஊஹு ம்.. என்னால் விவரிக்க முடியாதம்மா..
அதை அனுபவிக்கிறவங்களுக்குத்தான் தெரியும்… ஆமா.. நீ
இன்னுமா தூங்கலே… மணி  பன்னெண்டு ஆச்சே..?

பார் : தூக்கமே வரலேடா… அதுதான் இந்த புத்தகத்தைப் படிச்சிட்டு
உட்கார்ந்திருக்கேன். ஆமா மனோரமா சௌக்கியமா
இருக்காளா..?

ராஜா : ஏனம்மா.. வந்ததும் அவளைப்பத்திக் கேட்கறே..?

பார் : (திடுக்கிட்டு) ஏண்டா..? அவ சௌக்கியம்தானே..?

ராஜா : அவ சௌக்கியமாத்தான் இருக்கா.. நான்தான் இப்போ தர்ம-
சங்கடத்துலே மாட்டிட்டிருக்கேன்…

பார் : என்னடா..? என்ன ஆச்சு..?

ராஜா : உன் பேச்சையும், அந்தப் பாழாப்போன மாதவன் இருக்கானே.. என் ப்ரண்டு.. அவன் பேச்சையும் கேட்டதனாலே வந்த
வினை…

பார் : (பரபரப்போடு) என்னடா நடந்தது..? விளக்கமாச் சொல்லு..

ராஜா : நான் வாரா வாரம் இங்கே வரேன்லே… என் தாயைப் பார்க்க
வரேன் இல்லே… அதை மனோ கண்டு பிடிச்சிட்டா…

பார் : (திடுக்கிட்டு) என்ன கண்டு பிடிச்சிட்டாளா..?

ராஜா : இன்னும் முழுதும் கண்டு பிடிக்கலே..ஞாயிற்றுக் கிழமை ஞாயிற்றுக்கிழமை எங்கே போறீங்கன்னு இன்னிக்கு காலையிலிருந்து  துளைக்க ஆரம்பிச்சுட்டா.. அம்மா !அனாவசியமா எனக்கு வரும் அவஸ்தையைப் பார்…

(தாயின் மடியில் முகத்தைப் புதைத்து வைத்துக்
கொண்டு அழுகிறான்)

பார் : சீ.. சீ.. நீ ஆண்பிள்ளைடா… அழலாமா…?

ராஜா : நான் ஆண்பிள்ளையா இருக்கலாம்.. ஆனா மனசு கல் இல்லையே அம்மா.. இரங்கக் கூடிய மனசா இருக்கே.. எல்லாத்துக்கும் நீதான் காரணம்…

பார் : என்ன..?

ராஜா : ஆமா.. நியாயத்துக்கு இரங்கர மனசை என்னோடு வளர்த்து
விட்டிருக்கே பார்… அன்னிக்கே சொன்னேன்.. அம்மா.. நீ தனியா
போகவேண்டாம்… உன் வயத்திலேருந்து பிறந்த இந்தப் பாவி
உன்னைக் கவனிக்காம இருக்கற மாதிரி செஞ்சுடாதேன்னு
சொன்னேன். மனோக்கும் உனக்கும் மன வேற்றுமை இருக்கலாம்
அதுக்காக நீ தனியாப் போயிடறதான்னு கேட்டேன். அப்ப
நீயும் மாதவனும்தானே இப்படி ஒரு யோசனையைச் சொன்னீங்க..
ஸன்டே, ஸன்டே இங்கே நான் உன்னை வந்து பார்த்துட்டுப் போற மாதிரி ஏற்பாடு பண்ணினீங்க,,,

பார் : ராஜாராமா.. நீ தெரியாம பேசறே.. மனோரமாக்கு நான் சொல்றது  ஒத்துக்கறதில்லே… என்னாலேயும் சில விஷயங்களைப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியறதில்லே… நான் ஏதாவது சொல்ல, அவ ஏதாவது சொல்ல வார்த்தை முற்றிப் போயிடுது.. நீ ஆபீஸிலிருந்து வந்ததும் அவ கண்ணைக் கசக்கிட்டு நிக்கறா.. உனக்கு மனது வேதனைப்படாதா..?

ராஜா : அவளுக்கேன்மா நான் உன்மேல் வெச்சிருக்கிற அன்பு
தெரியறதில்லெ…

பார் : அவளுக்கு அந்த சக்தி இல்லைடா பாவம்…

ராஜா : (ஆத்திரத்தோடு) சக்தி இல்லைன்னா அவள் வீட்டைவிட்டுப்
போகட்டும்…

பார் : சீச்சீ.. ஆத்திரத்துலே எதை வேணும்னாலும் பேசிடறதா..?
நான் என்ன இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கேன்.. இனிமே
நீ அவள் கூடத்தானேடா குடும்பம் நடத்தணும். உன்னையே
நம்பி வந்து இருக்கற பெண்ணுக்கு அப்படி ஒரு கதி ஏற்படுத்-
தலாமாடா..?

ராஜா : (கலக்கத்தோடு) மன்னிச்சுக்கம்மா… ஏம்மா என்னை இப்படி
ஆளாக்கி விட்டிருக்கே. கல் மனசை ஏற்படுத்தி விட்டிருக்கக்-
கூடாது..? அம்மாவை வெளீலே போகச் சொல்லித் திரும்பிக்
கூடப் பார்க்காம இருக்கற மாதிரி ஒரு மனசை ஏற்படுத்தி இருக்கக்
கூடாது..? இல்லைன்னா பெண்டாட்டியை வெளியிலே துரத்திவிடக்
கூடிய தைரியத்தைக் கொடுத்திருக்கக் கூடாது..? அம்மாவின்
மனசு துன்பப்படக்கூடாதுன்னு அரை மனசு புலம்ப, நம்மையே
நம்பி வந்தவளின் மனசு வேதனைப்படக்கூடாதுன்னு அரை
மனசு புலம்ப நாடகம் ஆட வேண்டியிருக்கே… ஐயோ.. அம்மா
ஏன் இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலையில் மாட்டிட்டிருக்கேன்..

பார் : டேய் நல்லவனுக்குத்தான் எப்பவுமே சோதனை வரும்.. சோத-
னையை எதிர்த்து நிற்கணும்.. அவன்தான் ஆண்மகன்.. ஆமா..
நீ ஸன்டேதானே வருவே… என்ன இன்னிக்கு… அதுவும் இந்த
அர்த்த ராத்திரியில்…

ராஜா : மனோக்கு சந்தேகம் வந்துடுத்து.. நான் எப்படி இனி ஸன்டே
வர முடியும்..? அதனாலேதான் மாதவன் யோசனைப்படி
மனோ தூங்கினப்புறம் வந்தேன்.. இது எங்கே போய் முடியும்னே
புரியலே…

பார் : எல்லாம் காலப் போக்கிலே சரியாப் போயிடும்…

ராஜா : அம்மா.. எனக்கு ஆபீஸிலே ப்ரமோஷன் கெடச்சு, சம்பளம்
ஜாஸ்தியானதையோ, இன்க்ரிமென்ட் கெடச்சதையோ அவள்
கிட்டே  நான் சொல்லவே இல்லே… அந்தப் பணத்தைத்தான்
உனக்கு இங்கே கொண்டு வந்து தரேன்.. இனி மனோ இதைப்
பத்தி விசாரிக்க ஆரம்பிச்சா….

பார் : டேய்.. அவ்வளவு தூரம் ஒண்ணும் போகாது.. கவலைப்படாதே..
அதுக்கு ஒரே வழிதாண்டா இருக்கு.. நீ என்னை மறந்துடு..
இனி இங்கே வராதே….

ராஜா : (திடுக்கிட்டு) அம்மா… என்னம்மா சொன்னே.. நான் இங்கே வரக்கூடாதுன்னா சொன்னே…?

பார் : ஆமா.. நான் சாப்பாட்டுக்கு என்னவோ செஞ்சுக்கறேன்.. நீ
கவலைப்படாம போய் நிம்மதியா சுகமா இரு…

ராஜா : அம்மா..!

பார் : டேய்.. எனக்கு இனிமேல் என்னடா..? நீதான் வாழப்போறவன்..
ரெண்டுபேரும் நிம்மதியா, ஒற்றுமையா, சந்தோஷமா வாழுங்கடா..
உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்.. நீங்க எங்கேயாவது
சந்தோஷமா இருந்தாப் போதும்.. நீ அவதிப்படறதப் பார்த்து
நான் என்ன சந்தோஷமாவா இருக்க முடியும்..?

ராஜா : அம்மா.. நீ உன் பிள்ளையை அவ்வளவு தூரமா எடை போட்டு
வெச்சிருக்கே… நான் நாளைக்கு இரண்டுலே ஒண்ணு முடிவு
பண்ணிட்டு வந்துடறேன்.. இந்த இரட்டை வேடம் வேண்டவே
வேண்டாம்… என்னடா பொழப்பு இது.. சே…

(போகிறான்)

பார் : டேய் ராஜாராமா… நான் சொல்றதைக் கேள்… கோபத்துலே
ஒண்ணுக்கு ஒண்ணு செஞ்சு வெச்சுடாதேடா… நில்லு… தேவி
நீதாம்மா எங்க குடும்பத்தைக் காப்பாத்தணும்…

(கண்ணீர் மல்க நிற்கிறாள்)

காட்சி — 6

(ராஜாராமன் வீடு. காலை நேரம், ராஜாராமன்
ஹாலில் உட்கார்ந்திருக்கிறான். மனோரமா காபி
கொடுத்துவிட்டு அருகில் அமர்கிறாள்)

மனோ: என்ன உங்க கண்ணெல்லாம் சிவந்திருக்கு. ராத்திரி சரியா
தூங்கலியா என்ன..?

ராஜா : ச்… தூக்கமே வரலை…

மனோ: ஏன்..?

ராஜா : ச்… ஏதோ கவலை..

மனோ: ஏன்..? நான் நேத்து ஏதோ பேசிட்டேன்.. அதப் பத்தியே கவலைப்பட்டுட்டு இருந்தீங்களா..? நான்தான் அதைப் பத்தி இனி பேசமாட்டேன்னு சொல்லிட்டேனே..

ராஜா : சரி.. விடு..

மனோ: ஆமா.. ராத்திரி வெளியிலே போயிருந்தீங்களா..?

ராஜா : (திடுக்கிட்டு) ஏன்..? என்ன..?

மனோ: இல்லே… எனக்கு நடுவிலே விழிப்பு வந்தது. மணியைப் பார்த்தேன். மணி பதினொன்று.. பக்கத்திலே பார்த்தேன். நீங்கள்
இல்லெ.. அப்போ நீங்க வெளியிலே போயிருப்பீங்களோன்னு
நெனச்சேன்..

ராஜா : (சமாளித்துக் கொண்டு) ஓ.. அதுவா.. ஆமா.. தூக்கமே வரலையா.. சரி.. கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்னு போய் அடுத்த தெருவிலேயுள்ள கடையிலே ஒரு டீ குடிச்சிட்டு வந்தேன். நீ நல்லா
தூங்கிட்டு இருந்தே.. உன்னை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்னுதான்…

மனோ: அது சரி.. இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேனே.. நேத்து
ராத்திரி உண்மையாவே எனக்குப் பயமாப்போச்சு.. திடீர்னு பூனை
ஏதோ சமையலறையில் உருட்டி விட்டுடுத்து.. உங்ககிட்டே
சொல்லலாம்னு பக்கத்தில் பார்த்தால் உங்களைக் காணோம்.
போய் சமையலறையில் பார்த்துவிட்டு வந்து படுத்தேன். அப்போ
மணி மூணு…

ராஜா : அப்படியா…?

மனோ: என்னங்க… உங்க முகத்தைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. கண் வேறே கலங்கி இருக்கு. இப்படி ராத்திரியெல்லாம் கண் விழிச்சா உங்க ஹெல்த் என்னத்துக்கு ஆகிறது..? (அவன் முகத்-
தையே உற்று நோக்கிக் கொண்டு) உங்க சந்தோஷத்துக்கும்,
மகிழ்ச்சிக்குமே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்க அம்மா எத்தனை
வருத்தப்படுவாங்க…?

ராஜா : (திடுக்கிட்டு) மனோ நான் போனது…. ஓ ஐயாம் ஸாரி…

மனோ: ஏன் வாய் தவறி வந்துடுத்தா..? சொல்லுங்களேன் தைரியமா…எங்க ரெண்டு பேர் மனஸ்தாபத்துலே அம்மாவை வெளியே அனுப்பிச்சிட்டீங்க… அம்மாவை திரும்பிக்கூடப் பார்க்க
மாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடுத்தீங்க… அதிலிருந்து
தவறி எனக்குத் தெரியாம ஸன்டே ஸன்டே அம்மாவைப் பார்க்கப்
போனீங்க… ஏன்..? நமக்குள்ளே மனஸ்தாபம் வந்துடுமோன்னு
பயந்து… உங்க ஸன்டே டிரிப் அம்பலமானதும் இனி ஸன்டே
போகக் கூடாதுன்னு சொல்லி நேத்தே புறப்பட்டுட்டீங்க.. எல்லாம்
எனக்குத் தெரியும்..

ராஜா : உனக்கு எப்படித் தெரியும்…

மனோ: நேத்து ராத்திரி நீங்க புறப்பட்டதும். நானும் உங்க பின்னாலேயே வேறு ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு வந்தேன். எல்லாத்தையும் தெரிஞ்சு கொண்டேன்.. ஏன் இதை என்கிட்டே மறைச்சீங்க..?

ராஜா : ஆமா… நான் மறைச்சது தப்புதான்… என்னை மன்னிச்சிடு…

மனோ: மன்னிப்பா..? இதுக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்…

ராஜா : எனக்கு தண்டனை கொடுக்கப் போறியா..? நானல்லவா இதுக்கு ஒரு முடிவைத் தேடணும்னு நெனச்சிட்டிருந்தேன்…

மனோ: உங்க தண்டனைக்கு முன்னாலே நான் தண்டனை கொடுக்கப் போறேன்… போய் அம்மாவைக் கையோடு கூட்டிட்டு வந்திடுங்க.

ராஜா : (ஆச்சரியத்தோடு) என்ன..! என்ன சொன்னே..!

மனோ: (தணிவாக நெகிழ்வோடு) ஆமாங்க.. ஆத்திரத்துலே அன்னிக்கு என்னவெல்லாமோ பேசி உங்ககிட்டெ சத்தியமும் வாங்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் என் மனசு உறுத்தின உறுத்தல் எனக்குத்தான் தெரியும்.. வறட்டு கௌரவம் வேறே உங்களை அனுப்பி அம்மாவைக் கூட்டிட்டு வரச் சொல்ல விடாம தடுத்தது. ‘சே..
கேவலம்.. ஏதோ ஒரு அற்ப விஷயத்துலே மனஸ்தாபம்..
அதுக்காக உங்களையும், அம்மாவையும் பிரிச்சு வெச்சுட்டேனேன்னு வருந்தின வருத்தம் எனக்கு மட்டும்தான் தெரியும்.
நீங்கதான் கட்டாயமா உங்க அம்மாவை அழைத்து வந்திருக்கக்
கூடாதா…?

ராஜா : மனோ நீயும் வருத்தப்படக் கூடாது. அம்மாவையும் வருத்தக்
கூடாதுன்னுதான் இந்தத் திட்டத்தையே நான் ஒப்புக்கிட்டேன்.
நீ என்கிட்டே அம்மா இருக்கிற இடத்துக்கே போகக் கூடாதுன்னு
சத்தியம் வாங்கிக்கிட்டதாலே உண்மையாவே உன் எண்ணம்
அதுதானோன்னு நெனச்சுட்டேன்..

Image result for leela samson in o kadhal kanmani

மனோ: என்னை உங்களுக்குத் தெரியாதா..? நான் என்ன அத்தனை
கொடுமைக்காரியா..?

ராஜா : ஆல் ரைட்.. எப்படியோ என்  பிரச்னைக்கு முடிவு வந்துடுத்து..
எல்லாம் சுபமஸ்து…

மனோ: (சிரித்துக் கொண்டே) உங்க  பிரச்னைக்கல்ல.. நம்ம பிரச்னைக்கு.. அப்புறம் இன்னிக்கு விருந்து வெச்சிடவா…?

ராஜா : பின்னே… காளன், ஓலன். அவியல், கிச்சடி, பச்சடி, பாயஸம்
கறின்னு ஜமாய்ச்சுடு.. நான் புறப்படறேன்…

(உள்ளே போகிறார்கள்)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.