சரித்திரம் பேசுகிறது – யாரோ

பாஹியான்-1

வாசகர்களே!

அடுத்து வருவது விக்ரமாதித்யன் என்கிற இரண்டாம் சந்திரகுப்தன் என்னும் மாமன்னனின் கதை.

அது வெகு விரைவில்…

அதற்கு முன் இன்னொரு மனிதன் செய்த செயல்களால் சரித்திரமே பெரும் பயன் அடைந்ததுடன் அவனைப் போற்றவும் செய்கிறது.

பொதுவாக…

‘மன்னர்கள்’ சரித்திரத்தில் இடம் பெறுவது என்பது சற்று எளிது.
ஆனால் ‘சாமானியன்’ சரித்திரத்தில் இடம் பெறுவது அரிது.
அதிலும் சரித்திரம் எழுதியே சரித்திரத்தில் இடம் பெறுவது என்பது வெகு அரிது.

(அட.. என்னைச் சொல்லவில்லை! ஹா ஹா !!)

அப்பேர்ப்பட்ட ஒருவன் அந்நாளில் இருந்தான்.
அவன் ஒரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’!

பாஹியான்!

அவன் கதை படிப்போம்:

அந்நாளில் சீனா நாடு  பாரதவர்ஷ  என்கிற பாரத நாட்டின்  சிறப்பையும், அறிவுச்செல்வதையும் அறிந்து அதன் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. தங்களுக்குப் பிடித்த புத்த மதத்தின் பிறப்பிடம் பாரதம் என்பதால் அதன் மீது சீனா பெரும் அன்பு கொண்டிருந்தது.

கி.பி. 400ல் அந்நாட்டில்  பாஹியான் என்ற அறிவாளி இளைஞன்  ஒருவன் இருந்தான்.

‘புத்த மதம் சீனாவில் சரியான கொள்கைகளால் அமைக்கப்படவில்லை. பாரதம் சென்று அந்தத் தத்துவங்களை அறிந்து கொள்ளவேண்டும்’ என்று முடிவெடுத்தான்.
தனது நாட்டின் அறிவு ஜீவிகளுடன் ‘பாரத  பயணம்’ செல்ல ஒரு குழு அமைத்து பயணத்தைத் துவங்கினான். அந்தப் பயணம் 15 வருடம் நீடிக்கும் என்று அவன் அன்று  கனவிலும் எண்ணவில்லை.

பாதையோ நெடியது!
பயணமோ கொடியது!
போகுமிடம் வெகு தூரம்!
புத்தர் பிறந்து வளர்ந்து ஒளியூட்டிய இந்தியா அவர்களை ஆகர்ஷித்தது!
மனத்திண்மையே அவர்களுக்கு சக்தி கொடுத்தது!

 

 

 

 

 

காரகோரம் நெடுஞ்சாலை வழியாக இந்தப் பயணிகள் பல மாதங்கள் நடந்து வந்தனர்.
பயணம் தொடர்ந்தது.
முதலில் ஷன்ஷன் (Shanshan) சென்றடைந்தனர்.
அங்கு நாலாயிரத்துக்கும் மேலான மக்கள் புத்த சமயத்தைக் கொண்டாடி வந்தனர்.

ஒப்பிடமுடியாத கடினமான பாதைகள்…
கோபங்கொண்டு தாறுமாறாய் ஓடும் நதிகள்…
பனிமழையும் பனிக்கட்டிகளும் மலை வழியைக் கொடூரமாக்கியது.
இவை அனைத்தையும் கடந்து பாஹியானும் நண்பர்களும் ‘கோடான்’- என்ற சீனாவின் எல்லைப்புற நகரத்தை அடைந்தனர்.
அது பட்டுச்சாலையின் (silk road) ஒரு கிளையில் இருக்கும் நகரம்.
அங்கு பத்தாயிரத்திற்கும் மேலான மகாயான புத்தப் பிக்ஷுக்கள் இருந்தனர்.

‘கோமதி’ என்ற புத்த விஹாரத்தில் அனைவரும் இருந்தனர்.
அங்கு மணி ஒன்று அடித்தவுடன் மூவாயிரம் பிக்ஷுக்கள் உடனடியாக உணவறையில் கூடினர்.
கோடானில் இப்படிப்பட்ட விஹாரங்கள் பதினான்கு இருந்தது.

வீதியில் நடந்து வந்த பாஹியான் ஒரு மாபெரும் விஹாரத்தைக்கண்டு மலைத்துப்போனார்.
அருகில் நடந்த வயோதிகரிடம்:
‘ஐயா! இந்த விஹாரம் இவ்வளவு அழகாக இருக்கிறதே.
இதன் சரித்திரத்தைக் கூறுங்கள்’ – என்றான்.
சீன மொழியில் தான் கேட்டான்.
ஆனால் அது ‘உங்களுக்கு’ புரியாதே!
அதனால் தமிழில் எழுதுகிறேன்! 

வயோதிகன்:
“இதைக் கட்டுவதற்கு 80 வருடங்கள் பிடித்தது. அதற்குள் மூன்று அரசர்கள் வாழ்ந்து மறைந்தனர். கட்டிடத்தின் மேல் ‘வெள்ளி’ – ‘தங்கம்’ இவற்றால் செய்யப்பட்ட தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.”

‘ஆஹா! புத்தர் பெருமை அகில உலகிலும் பொன்னொளி போல் வீசுகிறதே’ – பாஹியான் புளகாங்கிதம் அடைந்தார்.

அதன் பிறகு சில நகரங்கள் தாண்டி, மிகவும் சிரமப்பட்டு, ஆயிரக்கணக்கான பாறைப்படிகளைக் கடந்து சிந்து நதியின் தீரம் வழியாக நடந்தனர்.
கயிற்றுப் பாலம் மூலம் சிந்து நதியைக் கடந்தனர்.
கரணம் தப்பினால் மரணம்.

நதியைத் தாண்டியவுடன் அவர்களை அங்கிருந்த புத்த பிக்ஷுக்கள் வரவேற்றனர்.

“நீங்கள் வரும் கிழக்கு நாட்டில் புத்தரை வழிபடும் மக்கள் உளரா?’ என்று வினவினர்.

பாஹியான்: “எங்கள் நாட்டில் மட்டுமல்ல. வழி எங்கும் கண்டோம்”

சென்ற இடங்களில் எல்லாம் ‘புத்தம் சரணம் கச்சாமி’- என்ற முழக்கம்.

பாஹியான் காந்தாரம் வந்தடைந்தான்.

தக்ஷசீலா நகர் வந்தடைந்தனர்.

அங்கு கனிஷ்கர் அமைத்த 400 அடி உயரமான கோவிலைக் கண்டனர்.

நகரெங்கும் புத்தர் பிரான் வாழ்க்கை பற்றிய பொருட்கள் காணப்பட்டன.

அவரது காலடித் தடயங்கள்..
அவரது துணிகளைக் காய வைத்த கல்..
அவரது பிச்சைப் பாத்திரம்..
இப்படிப் பலப்பல பொருட்கள்…

அனைத்தும் கண்டு பாஹியான் கண்களில் நீர் மல்கினான்…

அடுத்து நகரஹரா (இன்றைய ஆப்கானிஸ்தானத்தில் ஜலாலாபாத்) என்ற நகரத்தை அடைந்தனர்.
அங்கு புத்த கோவிலில் புத்தரின் மண்டையோடு வைக்கப்பட்டிருந்தது.
அதற்கு அண்டை நாட்டு மன்னர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி காணிக்கைகளைச் செலுத்திவந்தனர்.
கோவிலில் புத்தரின் ஆடைகள் வைக்கப்பட்டிருந்தது.
நாட்டில் எப்பொழுது பஞ்சம் வந்தாலும் அந்த ஆடைகளை வெளியே எடுத்துப் பூஜை செய்தால் – பஞ்சம் அகன்று விடுமாம்.- இது அந்த நாட்டு மக்களின் நம்பிக்கை…

பாஹியான் கூட வந்த குழுவில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் சீனாவுக்குத் திரும்பிச் சென்றனர்.

பாஹியான்கூட இருந்த இருவரில் ஒருவன் ‘ஹுய் சிங்’..

பனி மலையைக் கடக்கும் போது…
ஒரு பயங்கர குளிர் காற்று வீசியது.
உறைந்து போன யாத்திரிகர்கள் பேச முடியாமல் தவித்தனர்.
ஹுய் சிங்-ஐ குளிர் நோய் தாக்கியது..
அவன் வாயில் வெள்ளை நுரை வந்தது..
“பாஹியான்! இங்கிருந்தால் நாம் எல்லோரும் செத்துப்போவோம்.
உன் உடல் வலு இருக்கும் போதே இந்த மலையைக் கடந்து சென்று விடு..”
பேச்சு முடியும் போது.. அவன் மூச்சும் நின்றது.
“விதியை யாரே வெல்ல வல்லார்” – பாஹியான் நொந்தான்.

காந்தாரத்தைக் கடந்து மீண்டும் சிந்து நதியைக் கடந்து இன்றைய பஞ்சாப் பகுதி வந்தடைந்தான். அங்கும் புத்த மதம் பெருவாரியாகக் கொண்டாடப்பட்டது.

பஞ்சாப் முழுதும் புத்தரின் தாக்கம் பெரிதும் இருந்தது.
யமுனை ஆற்றங்கரையில் பல புத்த விஹாரங்கள் இருந்தன.

மெல்ல மெல்ல … மதுராபுரி வந்தனர்.

அப்பாடா! ஒரு வழியாக  குப்த சாம்ராஜ்யம் வந்தாயிற்று..
புத்த மதத்தின் ஆதிக்கம் குறைந்து- இந்துக்கள் நிறைந்த நாடு துவங்கியது…

(மதுரா)

பாஹியான் பிறகு எங்கெங்கு சென்றார்?
கண்ட காட்சிகள் என்ன?
இனியாவது அவர் பயணம் இனிதாக இருக்குமா?

சரித்திரம் அந்த விடைகளுடன் உங்களுக்காகக் காத்திருக்கும்.
நீங்கள்?

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.