( நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.) “ஜி.பி.சதுர்புஜன்”
கடவுள் வாழ்த்து
ஆனைமுகன் தாள் போற்றி
அறுசுவையைப் பாடுகிறேன்!
தமிழ்க் கடவுள் தாள் போற்றி
தமிழுணவைப் பாடுகிறேன்!
நம் வீட்டு சமையல்தனை
நற்றமிழில் பாடுகிறேன்!
அன்னை தாள் போற்றி
அவள் ஆசி வேண்டுகிறேன்!
- கொழுக்கட்டை மகாத்மியம்
ஆனைமுகனின் தொந்திக்கு
அடி முதல் காரணமாம்;
அடிவயிறுவரை வழுக்கும்
அரிசிக் கொழுக்கட்டையாம்.
பிள்ளையார் சதுர்த்தி வரை
பொறுக்க முடியலையே!
ஆண்டிற்கொருமுறை
காத்திருக்க முடியலையே!
பார்த்தாலே கொழுக்கட்டை
பரவசமூட்டுதடா!
எத்தனை எடுத்தாலும்
விழுங்கிவிடத் தோணுதடா!
சுத்தமான அரிசியிலே
பதமான மாவு செய்து
நல்லெண்ணெய் தொட்டு தொட்டு
நறுவிசாய் சொப்பு செய்து
தும்பைப்பூத் தேங்காயும்
தெளிவானபாகு வெல்லம்
ஏலக்காய் மணமணக்க
பதமான பூரணமாம்!
பூரணத்தை சொப்பிலிட்டு
பிடித்து மூடி வேக வைத்தால்
அழகழகாய்க் கொழுக்கட்டை
ஆசையைக் கிளறுதடா!
வெல்லக் கொழுக்கட்டை –
வேகமாய் சாப்பிடுவோம்!
எள்ளுக் கொழுக்கட்டை –
எத்தனையும் சாப்பிடலாம்!
உப்புக் கொழுக்கட்டை
அவசியம் வேணுமடா!
அம்மிணிக் கொழுக்கட்டை
அள்ளி அள்ளி சாப்பிடலாம்!
அம்மா கை கொழுக்கட்டை
ஆயுள் முழுதும் வேணுமடா!
எதைக் கொடுத்தாலும் அதற்கு
ஈடு இணை இல்லையடா!
Nice narration..
LikeLike