முதல் கதை: (சூரிய கதை )
சூரிய தேவனின் பற்றவைக்கும் நெருப்புச் சூடு காந்தசிகிச்சையில் முற்றிலும் குறைந்திருப்பதை ஸந்த்யாவின் உடம்பின் ஒவ்வொரு அணுவும் புரிந்து கொண்டது. அது காந்த சிகிச்சையா அல்லது காதல் சிகிச்சையா என்று புரியாமல் சூரிய தேவனும் ஸந்த்யாவின் உடலை இறுக்கப் பற்றினான். இருவர் இதயங்களிலும் காதல் என்ற அணை உடைந்து காட்டாற்று வெள்ளமாகப் பரவியது. பிற்காலத்தில் சூக்தி முக்தாவளி என்ற நூலில் காணப்படும் காதல் காட்சி இன்று ஸந்த்யா இருந்த கோலத்தை மனக்கண்ணில் பார்த்துத்தான் எழுதப் பட்டதோ என்னவோ?
அவளது கால்கள் புதிய மின்னல் போல் எழும்புகின்றன. அவளின் தாமரை மலர்கள் போன்ற பாதங்கள் வாழைத் தண்டுத் தொடைகளுக்குக் கீழே அழகாகப் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன. மின்னலைச் சுற்றி வட்டமான ஆகாயம் போல் அவளின் மெல்லிய இடை மறைந்து உள்ளது. . . வானத்தில் .படிந்த மலைகள்போல் அவளது மார்பகங்கள் உள்ளன. அந்த இரு மலைகளின் அருகேயே ஒரு சங்குக் கழுத்தும் அந்த சங்கிலிருந்து எழுகின்ற வட்டமான சந்திரன் போல் அவளது முகமும் அமைந்திருக்க அவளது அழகு சொல்ல முடியா வண்ணம் அமைந்து பொங்கிப் பிரவாகித்தது.
வேணிதத்தர் என்ற பிற்காகாலக் கவியும் ஸந்த்யாவின் அழகுக் கோலத்தைத் தன் கற்பனைத் தூரிகையில் இப்படி வரைந்தார்.
அழகிய புருவத்தை உடைய அந்த அழகி, தனது மார்புக் கச்சை உயர்த்தி, தனது ஆடையின் நுனியால் மார்பகங்களை மூடிக் கொண்டு, தனது முகத்திரையைச் சற்றே உயர்த்தி, மனதிலே பிறந்த காதல் கடவுளின் மனதைக் கூடச் சலனப்படுத்துகிறாள்!
சிவ – பார்வதியின் காதல் கனிவை வார்த்தையில் அள்ளிக் கொட்டிய காளிதாசன் ஏனோ சூர்யதேவன் -ஸந்த்யாவின் காதல் சங்கமத்தைச் சொற்களால் வடிக்க மறந்துவிட்டான். ஆனால் அவன் எழுதிய காதல் வரிகள் அனைத்தும் இவர்களது முக வரிகளையே சொல்லாமல் சொல்லுகின்றன.
மலைகளின் புதல்விகளான ஆறுகள் எப்படி கடல் எனும் காதலனை நோக்கி இயற்கையாகவே ஓடுகின்றன ? பெருக்கெடுத்து ஓடும் ஆறு கடலைத் தவிர வேறு எங்கு போக முடியும் ? .
“நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான் உன் இதயத்தைக் கொடுத்து இருக்கிறாய்! நீ அதிர்ஷ்டசாலிதான்!” என்று ஸந்த்யாவின் கமலவாய் முணுமுணுத்தது .
உண்மைதான்! ஸந்த்யா அன்று இன்பத்தின் உச்சியில் இருந்தாள்.
சூரியனை “ஹர்யஸ்வன்” என்று வேதம் கூறுவதற்கேற்ப, அவன் அன்று பசும்புரியாக இருந்தான். அவனது உடலில் வெப்ப உணர்ச்சிகள் காந்தக் கல் சிகிச்சையால் குறைந்து பசும் புல்லைப்போல் தேகம் சிலிர்த்து இருந்தான். கண்ணுக்கெட்டியவரை குவிந்து கிடக்கும் பசும் புற்களை வேண்டியமட்டும் பசுக்கள் தின்று மகிழட்டும் என்று காத்திருக்கும் புல்வெளியைப்போல் படுத்துக் கிடந்தான் சூரியதேவன்.
அவர்கள் சங்கமத்தில் மேகங்கள் ஒன்றோடொன்று மோதின. மின்னல்கள் மின்னின. இடி போன்ற கூக்குரல்கள் எழும்பின. ஆசைக்காற்று அனல் மூச்சாக வந்தன. மகிழ்ச்சி வெள்ளம் உடல்கள் இரண்டிலும் அலை அலையாய்ப் பாய்ந்தன. நதி நதியோடு இணைந்தது. நதி கடலோடு கலந்தது. மலையிலிருந்து வெள்ளம் வழிந்தது. புயலில் சிக்கிய மரங்கள் ஒன்றோடொன்று எப்படிப் பின்னிப் பிணைந்து கொள்ளுமோ அது போல இடைவெளியின்றி நான்கு கரங்களும் நான்கு விழிகளும் நான்கு இதழ்களும் இரண்டு இதயங்களும் ஒன்றில் மற்றொன்று என்று வித்தியாசம் காண இயலாத அளவில் இணைந்து திளைத்தன.
எல்லா சுகங்களுக்கும் ஒரு உச்சம் இருக்கும். அது முடிந்ததும் சம நிலைக்கு வருவதுதானே இயற்கை. இயற்கையின் தலைவன் சூரியதேவனும் தலைவி ஸந்த்யாவும் புயல் அடித்து ஓய்ந்த கடல்போல, பொங்கி வழிந்த பிரவாகம் அடங்குவதுபோல, துள்ளிக் குதித்த அருவி சமதளத்துக்கு வந்ததும் இரு கரைகளுக்கிடையே அமைதியாக உறங்கும் நதியைப்போல மயக்கம் தீர்ந்து கிறக்கத்தில் கிடந்தார்கள்.
ஸந்த்யாதான் முதலில் மயக்கத்திலிருந்து விடுபட்டாள். எந்தத் தவறு நடந்துவிடக்கூடாது என்று என்று தந்தை விஷ்வகர்மா எச்சரித்தாரோ அந்தத் தவறு நடந்துவிட்டது. இது தவறல்ல, இயற்கையின் வெளிப்பாடு என்று அவள் மனம் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் தந்தை வந்து விடுவாரோ என்ற பயம் அவள் உள்ளத்தைப் பீடித்தது. அவசர அவசரமாக எழுந்தாள். தன்னைப் பிடித்திருந்த சூரியனின் கரங்களிலிருந்து விடுவித்துக் கொண்டாள். சூரியதேவனுக்கு அவனுடைய ஆடையைப் போர்த்த்திவிட்டுத் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் செல்லப்புறப்பட்டாள். ஆனால் அந்த அவசரத்தில் கழற்றிவைக்கப்பட்ட சூரியனின் மணிமுடி உருண்டு விழுந்தது. அதைக் கவனிக்காமல் தரையில் இருந்த தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு ஸந்த்யா விரைந்து ஓடினாள்.
உருண்ட மணிமுடி மயங்கி விழுந்த சந்திரனின் மீது மோதி அவனைத் தள்ளிவிட்டது. அதனால் சந்திரனால் பொந்திலே மறைத்து வைக்கப்பட்ட ராகுவிற்கு விடுதலை கிடைத்தது.
ராகு மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான்.
சூரியனும் மயங்கிக் கிடந்தான்.
ராகு சூரியனை விழுங்கும் நேரமும் கூடி வந்தது
(தொடரும்)
இரண்டாம் கதை ( எம கதை)
நாரதர் கொஞ்சமும் கலங்காமல் பார்வதி தேவியிடம், “தேவி, தங்கள் இரு புதல்வர்களும் மிகவும் சிறப்பாக எந்தக் காரியத்தையும் செய்யக் கூடிய வலிமை பெற்றவர்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
ஆனால் இந்த எமபுரிப்பட்டணம் பிராஜக்டைச் செய்வதற்குப் போட்டி மிகவும் பலமாக இருக்கிறது.
தேவேந்திரன் தன் மகன் ஜெயந்தனுக்கே இந்த பிராஜக்டைக் கொடுக்கவேண்டும் என்கிறான். தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்ராசாரியர் இருவரும் எழுத்து மூலமாகவே தங்களுக்கே இதைத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வியாசரும் வால்மீகியும் கூட களத்தில் குதிக்கப் போவதாக நமக்கு ஒரு செய்தி வந்தது.
நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னை ஒருங்கிணைப்பாளராக நியமித்து விட்டீர்கள். அதனால் என் வேலை மிகவும் அதிகமாகி விட்டது.
இதனால் இந்த பிராஜக்டை யார் செய்வது என்பதற்கு ‘அனைத்துலக டெண்டர் ‘ அழைப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதுதான் முறை என்று நான் கூறினேன். அதற்கு சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் என் தந்தை பிரும்மாவும் ஒப்புக் கொண்டனர்.
இருந்தாலும் , இது மிக முக்கியமான பிராஜக்ட். ஆகையால் பத்து பேர் அடங்கிய முழு கமிட்டியும் சேர்ந்து முடிவெடுக்கவேண்டும் என்று தீர்மானித்து அனைவரையும் கூட்டியுள்ளோம்.
இந்தக் கமிட்டியில் இருப்பவர்கள் பிராஜக்டுக்கு ஆலோசனைகள் சொல்லவேண்டுமேதவிர அவர்கள் முழுப் பொறுப்பும் ஏற்று நடத்தக்கூடாது.
இப்போது இந்தத் திட்டத்தை எப்படி யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைக் கூறலாம். அதன் பின்பு நாம் அனைவரும் திட்டத்திற்கான சிறந்த முடிவை ஒரு மனதாக எடுப்போம். முதலில் இந்தத் திட்டத்தின் செயல் தலைவர் என்ற முறையில் சித்திரகுப்தன் தன் கருத்தைக் கூறட்டும் ” என்று கூறினார்.
சித்திரகுப்தன் எழுந்தான்.
“ என் பொருட்டு இந்தத் திட்டத்தை செயலாற்ற முதல் அனுமதியைத் தந்த என் தலைவர் எமனுக்கும் மற்ற அங்கத்தினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகமிக முக்கியமான திட்டம். இத வெற்றிகரமாச் செய்தால் தான் நமது கடமையைச் சரியாகச் செய்தவர்கள் ஆவோம்” என்று கூறினான்.
எமனும் இந்ததத் திட்டத்துக்குத் தன் முழு ஒத்துழைப்பையும் தருவதாக வாக்களித்தான். மேலும் தன் சகோதரி எமியும் இதன் அமைப்புக் குழுவிற்கு செயலராகப் பணிபுரிய விரும்புவதாகவும் கூறினான்.
நாரதர் இந்தக் குழுவில் இருப்பவர்கள் நேரடியாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறியதன் மூலம் தங்கள் கருத்து இனிமேல் எடுபடாது என்பதைப் பிள்ளையாரும் முருகனும் உணர்ந்துகொண்டார்கள். அதனால் இந்தப் பிராஜக்டை யார் செய்தாலும் அது சரிவரச் செயல்படுகிறதா என்று டெஸ்ட் செய்யும் குழுவிற்குப் பிள்ளையாரும், அதன் செயல்பாடுகளை மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் டிரெய்னிங் குழுவிற்கு முருகனும் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்.
லக்ஷ்மிதேவி குபேரனுடன் சேர்ந்து பிராஜக்டுக்குத் தேவையான நிதி வசதிகள் செய்து தருவதாக ஏற்றுக் கொண்டார். கலைமகள் டாகுமெண்ட் சமாசாரங்களையும், பார்வதி தேவி இதற்குத் தேவையான கட்டமைப்புப் பணிகளைத் தயார் செய்வதாகவும் ஒப்புக் கொண்டனர்.
சிவன் விஷ்ணு பிரும்மா மூவரும் ஹை பவர் குழுவாக இருந்து பிராஜக்ட்டின் எல்லா செயல்பாடுகளையும் கண்காணித்து வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்பதும் தீர்மானமாயிற்று.
அனைவரும் ஏகமனதாக சித்ரகுப்தனை பிராஜக்ட் மேனேஜராக நியமித்தனர்.
அப்போதுதான் நாரதர் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு பூலோகத்திற்கு அவுட்சோர்சிங் செய்யவேண்டும் என்ற தன் திட்டத்தை மெல்லக் கொண்டுவந்தார்.
நாரதர் எதிர்பார்த்தபடி அதற்கு முதல் எதிர்ப்பு எமனிடமிருந்து வந்தது.
(தொடரும்
PMP qualified Manager?
LikeLike