தருப்பையை ஏந்தும் முனியின்
தகித்திடும் சாபம் வந்து
கருப்பையைத் தாக்கும் நேரம்
கதறிய வேதிகைக்குக்
கருவினைக் காத்துத் தந்த
கருணையே! முல்லைப் பூக்கள்
அரும்பிடும் கருகா வூரின்
அன்னையே, அழகே, போற்றி!
இல்லறம் பேணிக் காத்தும்
இன்னமும் மழலைச் செல்வம்
இல்லைஎன் றேங்குவோர்தம்
இதயதா பத்தைப் போக்கி
நல்லதோர் பிள்ளைச் செல்வம்
நல்கிடும் தாயே! வாச
முல்லைசூழ் கருகா வூரின்
முழுமுதற்பொருளே, போற்றி!
தாயவள் கருவில் ஜீவன்
தரிக்கின்ற நேரம் தொட்டு
சேயினைக் கர்ப்பத் திற்குள்
செவ்வனே புரந்தச் சேய்க்கும்
வாயுவும், உணவும் தந்து
வாழவைப் பாயே, தாயே!
வாயவிழ் முல்லைக் காட்டின்
வண்ணமே, பாதம் போற்றி!
சந்ததம் உந்தன் பாதம்
சரணமென் றடைவோர் வாழ்வில்
சந்ததி தழைக்கச் செய்வாய்!
சத்கதி அமையச் செய்வாய்!
சந்தனத் தென்றல் சூழும்
சந்தமே! தாய்மைப் பேறே!
வந்தனை செய்தோம் முல்லை
வனத்துறை வாழ்வே, போற்றி!
விரிதரும் வானம், ஆங்கே
விளங்கிடும் கோள்கள், மீன்கள்
எரிதழல் என்னச் சுற்றும்
எண்ணரும் தீக்கோளங்கள்
திரிதரும் அண்டம் யாவும் தேவியுன் கருவே அன்றோ? திரிபுர சுந்தரீ! எந்தன்
திருக்கரு காவூர்த் தாயே!
அருமையான வரிகள்
LikeLike