painting by Salvador Dali
ரயில் ஜன்னலில்
என்னோடு பயணிக்கும் மலைகள்
உருமாறிக் கொண்டே இருக்கின்றன.
என் காதலியே என்று எழுதிக் கொண்டிருக்கும்போதே
அவள் கொடுத்த முத்தங்கள்
பாம்புகளாய் மாறி
விஷத் தீண்டலுக்காய்
என்னைத் துரத்தத் தொடங்கி விடுகின்றன.
இன்று என்பது விடிந்து
படுக்கையிலிருந்து புரண்டு எழும்போதே
அது நேற்று என்பதாய் மாறி
என் ஞாபக அடுக்கில் சென்று சிக்கிக் கொள்கிறது.
சிரியாவில் செத்த குழந்தைகளுக்காக
என் முகநூலில்
ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்போதே
என் தங்கை பதிவிட்ட
பிறந்தநாள் வாழ்த்துக்கு
நான் ரோஜாப்பூ ஏந்திய நாயின்
சிரிக்கும் படத்தைப்
பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
உண்மையாகச் சொல்வதெனில்
ஒவ்வொரு துக்கத்தின் பின் ஒளிந்திருக்கும் நிழலிலும்
ஒரு சந்தோஷம் கண்ணாமூச்சி விளையாடுகிறது.
ஒவ்வொரு மகிழ்ச்சியும் தன் கையில்
கண்ணீரில் நனைந்த ஒரு கைக்குட்டையை.
மறைத்து வைத்தே இருக்கிறது
அபாரம் அற்புதம் சுந்தர்
LikeLike