நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.
இட்லி மகிமை
இட்டளித்தாய் நீ இட்டளித்தாய் – நீ
பட்டாய் இட்டளித்தாய் !
குட்டளித்தாய் நீ குட்டளித்தாய் – மற்றவை
குட்டிக் குனியவைத்தாய் !
பஞ்சு போல் இட்லி என்று சொன்னதெல்லாம்
இந்தப் பணியாரம்தானோ ?
மிஞ்சிடுமோ இன்றிட்ட இட்லியை –
இனிய நளபாகம் இதுதானோ ?
தஞ்சைக் காவிரித் தண்ணீரால்
தனிசுவை வந்ததுவோ?
தாமிரபரணித் தண்ணீரால்
தேன்சுவை சேர்ந்ததுவோ?
மிளகாய்ப் பொடியால் சட்டினியால்
சிறந்திடும் இட்லிதான் !
ஒன்றும் இல்லாமல் உண்டு விட்டாலும்
அதுவும் தனி சுவையே !
சாம்பாரிலே மிதக்க விட்டு நான்
சாயுஜ்யம் பெறவேணும் !
சரிபாதி இரண்டும் சேர்த்தடித்தால்
வேறென்ன சுகம் வேணும்?
எத்தனை ஓட்டல்கள் சென்றாலும் – இந்த
வீட்டு சுவை வந்திடுமா?
அன்னையே இது இட்லியில்லை – உன்
அன்பினை இட்டளித்தாய் !
பிறந்து வர வேண்டும் உனை மிஞ்ச – வரம்
பல பெற்று வர வேண்டும் !
இன்னும் தர வேண்டும் – எனக்கென்றும்
உன் கை உணவு மட்டும் வேண்டும் !
@@@@@@@@@@@@@@