ஏ கே ராமானுஜம் (1929-1993) உலக அளவில் அறியப்பட்ட ஒரு பெரிய மொழி வல்லுனர்
பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்.
தமிழ் சங்கக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
அவர் எழுதிய ஒரு கட்டுரைதான்: 300 ராமாயண வடிவங்கள், ஐந்து உதாரணங்கள், மூன்று எண்ணங்கள்
அது டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் 2006 இல் மாணவர்களுக்குப் பாடமாக இருந்தது.
அது இந்து மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும் அதனால் அது பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்றும் 2008இல் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.
மேல் முறையீட்டுக்காக உயர் நீதி மன்றத்துக்கு 2011இல் சென்றது.
ஒரு குழு அமைத்து அதன் பரிந்துரைப்படி பல்கலைக்கழகம் தீர்மானிக்கவேண்டும் என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
அறிஞர் குழு (3:1) அந்தக் கட்டுரையை நீக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது.
பல்கலைக்கழகம், குழுவின் அறிக்கைக்கு எதிராக அந்தப் பாடத்தைப் பாடத்திட்டதிலிருந்து நீக்கியது.
தீவிரவாத இந்துத்துவத்தின் கட்டளையால் இது நீக்கப்பட்டது என்று நூற்றுக் கணக்கான பேராசிரியர்கள் போராடினர்.
வேறு ஒரு அமைப்பு புத்தகப் பதிப்பாளர் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பிரஸுக்கு அந்தக் கட்டுரையை நீக்கி பிரசுரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. பதிப்பகமும் அதை ஏற்று அந்தக் கட்டுரையின்றி மறு பதிப்பு வெளியிட்டது.
ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பிரஸ் , தனது புத்தகத்திலிருந்து இந்தக் கட்டுரையை எடுத்தது தவறு, இது எழுத்தாளர்களின் உரிமையை மீறும் விதம் என்று அறிஞர் பலர் அதை குரல் கொடுக்க இந்தப்பிரச்சினை உலக அளவிலும் சென்றது.
அவர்களின் கருத்தை ஏற்ற பதிப்பகம் அடுத்த பதிப்பில் அந்தக் கட்டுரையையும் அச்சிடுவதாக உறுதி கூறிப் பிரச்சினையை முடித்தது.
அதெல்லாம் சரி.. அவர் கட்டுரையில் என்னதான் எழுதியிருந்தது என்று கேட்கிறீர்களா?
பி பி சி செய்தியைப் பாருங்கள்:
பேராசிரியர் ஒருவர் இராமாயணத்தில் வரும் ‘அகல்யையின் சாபம்’ என்ற கிளைக் கதையில் வரும் சம்பவம் தொடர்பாக ஏ கே ராமானுஜத்தின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களால் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
வால்மீகி இராமாயணத்தில் அகல்யை தானே விரும்பி இந்திரனை அழைத்ததாகவும், அதன்பின் இந்திரனின் உடல் ஆயிரம் பெண் குறிகளாக மாறட்டும் என்று சாபமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் இது வேறு சில இராமாயணங்களில் ஆயிரம் கண்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏ கே ராமானுஜன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பெண் பேராசிரியர்கள் இது போன்ற விடயங்களை வகுப்பறையில் பேசுவது தர்மசங்கடத்தை விளைவிக்கும் என்று கருதுவதாகவும் அ. மாரியப்பன் தெரிவித்தார்.
ஆனால் இந்த கட்டுரையை நீக்கக் கூடாது என்று தெரிவித்த பேராசிரியர் ஒருவர், பெரும்பான்மை முடிவு என்ற பெயரில் பெரும்பான்மயினர் ஆதரிக்கும் சிந்தாந்தங்கள் மட்டுமே பல்கலைக்கழகத்தால் ஆதரிக்கப்படும் என்ற தவறான செய்தியை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளதாக சாடியுள்ளார்.
ஏ கே ராமானுஜம் இராமாயணம் குறித்து எழுதிய சிறப்பான கட்டுரை டில்லி மத்தியப் பல்கலைக்கழகத்தால் தடை செய்யப்பட்டுள்ளமை அனைவருக்கும் வெட்ககரமான செய்தி என்று சாகித்ய அக்காடமி விருது பெற்றுள்ள முன்னணி கன்னட எழுத்தாளர் யு ஆர் அனந்தமூர்த்தி கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.