“வான்பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” என்று பாடிய தமிழ் நாடு
“காவிரித்தாயே கைவிரித்தாயே”
என்று இன்று சோககீதம் பாடுகிறது.
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காவிரியில் இன்று மணலும் கொள்ளை போகிறது.
நீர்வழிப்பாதைக்குள்ள உரிமையின் (Riparian Rights) அடிப்படையில்தான் உலக அளவில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ஐ நா சபையும் ஹெல்சின்கி விதிகளும் ஒப்புக் கொண்ட உண்மை.
அதன்படி காவிரியின் முதல் மடையிலிருக்கும் கர்நாடகத்தைவிடத் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது என்பது தமிழகத்தின் வாதம்.
தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும் என்கிறது கர்நாடகம்.
வாதம், தர்மம், வழக்கம், பிடிவாதம், அரசியல் என்ற பஞ்ச சீலத்தை ஒதுக்கிவிட்டு நடு நிலைமையுடன் ஆராய்வோம்.
நாட்டின் தலைமை நீதிமன்றம் இட்ட ஆணையை அனைவரும் ஒப்புக்கொண்டு செயல்படுத்தவேண்டும்.
அதைச் செயல்படுத்த ஒரு நிரந்தர அமைப்பை – வாரியமோ, செயல்திட்டமோ (ஸ்கீம் ) ஏற்படுத்தவேண்டியது மத்திய அரசின் கடமை.
இந்திய நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிப்போம்!
இந்த நிலையில் தமிழகம் என்னென்ன செய்யலாம்?
உரிமைக்காகப் போராடுவோம். கழகங்களும் கண்மணிகளும் அந்த வேலையைச் செய்யட்டும்.
திட்ட வல்லுனர்கள், கிடைக்கும் தண்ணீரை எப்படித் திறமையாக உபயோகப்படுத்தலாம் என்று திட்டமிடட்டும்.
வேளாண் விஞ்ஞானிகள், குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்று கண்டுபிடிக்கட்டும்.
விவசாயப் பெருமக்கள், எந்தப் பயிர்களை வளர்த்தால் நாட்டுக்கும் தங்களுக்கும் நல்லது என்று தீர்மானிக்கட்டும்.
பொதுமக்களும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதோடு தங்கள் உணவுப்பழக்கங்களையும் மாற்றிக்
கொள்ளவேண்டும்.
ஊர் கூடி இழுக்கவேண்டிய தேர் இல்லை இது.
ஊர் கூடிப் போற்ற வேண்டிய தெய்வம் நீர்.
நீரைப் போற்றுவோம்!