வலியோடு வாழ்க்கை பயணம்
ஆங்காங்கு புதுமுகங்கள்
சலிப்போடு நகர்ந்தாலும் மாறுதல்
புதிதில்லை – ஏனோ மனம் ஏற்கவில்லை
புதியவர் நடுவே தனியாக
வழியேதும் புலப்படாது
பலநூறு மனிதர் இருந்தும்
தனிமரமாய் தென்பட்டேன்
மனமெங்கும் படபடப்பு ஓரத்தே
சிலீரென எதிர்பார்ப்பு
இதமாக பேசி அமைதிதர
தனிக்காட்டில் யாருமில்லை
எல்லோரும் எனக்குத் தென்பட்டாலும்
யாருக்கும் நான் தெரியவில்லை
அவரவர் வேலையை அவர்செய்ய
என்தேவை அரிதானது
கூட்டத்தே புகுந்து என்பங்கு
உரிமை கொண்டாடினேன்
யாரும் தரவில்லை – என்னுரிமை
பறிபோனது பதட்டமானேன்
அந்தக் கூட்டம் எனைசாடியது
எனைத் தேடியது
நையப் புடைத்து புண்ணாக்கி
ஓரம் போட்டது
என்னுரிமை எனக்கில்லை என்றபின்னே
நான்யார் – கயவர் கூட்டத்தே
நானாக நானில்லை வெட்கி
தலை குனிந்தேன்
என் அடையாளம் அவர்களுக்கு
தெரியாமல் போகலாம் புதியவரன்றோ
எனக்கே ஏன் தெரியாமல் போனது
புதிராகத்தான் போச்சு