எண்ணை வியாபாரி கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எண்ணை வாங்குவதற்கு ஒருவன் தூக்குப் பாத்திரத்தோடு வந்தான்.
பாத்திரத்தில் எண்ணை ஊற்றிக்கொண்டிருந்த வியாபாரி இடையில் சற்று நிறுத்தித் தலை சாய்த்து எதையோ உற்றுச் செவி சாய்த்துக் கேட்டான்..
பின் கொல்லையில் அமைந்திருந்த செக்காலையிலிருந்து வந்த சலங்கை சப்தம் நின்று போயிருந்தது.. உடனே வியாபாரி நாக்கை மடக்கி வாயில் “டுர்…டுற்…” என்று சப்தம் செய்தான். சத்தம் எழுப்பியவுடன் சலங்கை சப்தம் தொடர்ந்தது.
எண்ணை வாங்க வந்தவன் இதைக் கவனித்தான்.
“அதென்ன திடீர்னு சத்தம் குடுத்தீங்க ?” ன்னு கேட்டான்
வியாபாரி சொன்னான்.
“ அது ஒண்ணுமில்லே… பின்னால எள் எண்ணையாட்டறதுக்கு செக்கு மாடு சுத்திக்கிட்டு வருது…அது ஒழுங்கா நிக்காம சுத்துதா இல்லையான்னு இங்கேருந்தே கவனிக்க அது கழுத்துலே மணியைக் கட்டித் தொங்கவிட்ருக்கேன்… மாடு நின்னா சத்தம் நின்னு போயிரும், உடனே நான் குரல் குடுப்பேன் … அது மறுபடியும் சுத்த ஆரம்பிக்கும்…” அப்படீன்னான்.
வந்தவன் சாதுரியமான மனிதன்.
அவன் சொன்னான்…” அதெல்லாம் சரிப்பா……ஆனா மாடுங்க ஒவ்வொரு சமயம் சாமர்த்தியமா ஓடாமயே ஒரே எடத்துலெயே நின்னுகிட்டுத் தலையைமட்டும் அப்பப்போ ஆட்டிக்கிட்டே இருந்தா மணிச் சத்தம் கேட்டு நீங்க ஏமாந்துடுவீங்க இல்லையா? “
பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி முடித்த வியாபாரி வந்தவனை உற்றுப் பார்த்தவாறு சொன்னான்..
“ அய்யா…நீஙக நெனைக்கிறது சரிதான்…..ஆனா…அந்த மாதிரி ஏமாத்து வேலையெல்லாம் மாடுங்க செய்யாது..!!.”
ஒரு சொற்பொழிவில் கேட்டது