நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.
1. கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
2. இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
3. தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
4. அடைந்திடு சீசேம் !
அடைய வேண்டியது எது
என்று கேட்டுக்கொண்டே இரு.
அடையும் வரை
அடங்காதே !
அடை பட்டுக் கிடக்காதே.
தடைகளை உடைத்து வெளியே வா.
விற்போர் மற்போர் போல்
பற்போர் செய்.
அட என்னடா இது என
அலுத்துக் கொள்ளாதே.
ஆக வேண்டியதைக் கவனி.
அடைந்தே தீருவேன் என
அடை கரகோஷம் செய்.
அவியலும் வெல்லமும் சேர்ந்தால்
அடைக்கும் உண்டோ தடை.
ஒன்றாய் இரண்டாய்
கடகடவென அரைத்து
மொறுமொறு மொறுவென்று…..
ஆகா !
அடையின் சுவையே தனி.
அடே………ய் !
இன்னுமா புரியவில்லை —
இந்தக் கவிதை
கரமுர அடையைப் பற்றியது என்று !