எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

சூரிய பகவான் வரலாறு

விதி என்ற ஒன்றைப் படைத்தது யார்? விதிக்கு இவ்வளவு சக்தியைக் கொடுத்தது யார்?  இது மனிதர்களை மட்டுமன்றி கந்தர்வர்கள், தேவர்கள் ஏன் மும்மூர்த்திகளையும் ஆட்டிப்படைப்பது எப்படி? விதி என்ற மாய வலைக்குள் சிக்காதது எதுவும் இல்லையா ?  மனிதனைப் படைக்கும் முன்னே – உலகத்தைப்  படைக்கும் முன்னே – கோள்களைப் படைக்கும் முன்னே –  பிரும்மனைப் படைக்கும் முன்னே விதி என்று ஒன்று இருந்திருக்கிறது.  விதியை மதியால் வெல்ல முடியுமா? இந்த  விதியை மதியால் வெல்லலாம் என்று ஒரு விதி இருந்தால்தான் அந்த விதியை மதியால் வெல்ல  முடியும்.  அதுதான் விதி.

அந்த விதி ஸந்த்யாவின் நிழலில்  மறைந்து கொண்ட ராகுவின் வடிவில்  சூரியதேவனை எப்படியெல்லாம் பிற்காலத்தில் ஆட்டிப் படைக்கப் போகிறது என்பது அந்தக் கணத்தில் யாருக்கும் தெரியவில்லை.

ராகுவை எரிக்க வேண்டும் என்று கோபாவேசத்தில் எரிவளையத்தைப் படைத்த சூரியதேவன் ஸந்த்யா வருவதைப் பார்த்ததும் ராகுவை மறந்தான். ஸந்த்யாவின் அருகில் நின்ற விஷ்வகர்மா அவன் புலன்களுக்குப் புலப்படவில்லை. அந்த அளவுக்கு அவள் அழகு அவனை ஆக்ரமித்திருந்தது.  அந்த எழிலைப் பரிபூரணமாக அடையவேண்டும் என்பதற்காகத்தானே அவன் காந்த சிகிச்சைக்கே ஒப்புக்கொண்டான்.

ஸந்த்யாவின் நிலைமையோ இருதலைக்கொள்ளி எறும்புபோல இருந்தது. தந்தையின் கண்டிப்பான கட்டளையை மீறி காந்த சிகிச்சையின்போது சூரியதேவனுடன் உறவு கொண்டதால் என்னென்ன ஆபத்துக்கள் வருமோ என்ற பயத்தில் அவள் அழகு முகம் மேலும் வெளுத்தது.

தேவசிற்பியான விஷ்வகர்மாவிற்கு அந்த அறையைப் பார்த்த ஒரு கணத்திலேயே எல்லாம் விளங்கிவிட்டது.   அவர் போட்ட கணக்கு தவறிவிட்டது. எதையும் திட்டமிட்டபடி  செய்பவர்  என்று பெயர் வாங்கிய விஷ்வகர்மா தன் திட்டத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

சூரியதேவனுக்காகத்தான் அவர் ஸந்த்யாவைப் பெற்றெடுத்தபோதிலும் அவர்கள் திருமணம்பற்றி மாபெரும் திட்டம் வைத்திருந்தார். அவர்கள் திருமணம் நடக்கவேண்டிய காலம் நேரம் இடம் எல்லாவற்றையும்  துல்லியமாகக் கணித்து வைத்திருந்தார். அவர் எதிர்பார்த்திருந்த அந்தக் காலம் கனிந்து வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருந்தன. தனுர் மாதத்திலிருந்து  தை மாதம்  என்று அழைக்கப்படும்  மகர மாதத்திற்குப் போகும் ஸங்கராந்தித் திருநாள் தேவர்களின் இரவுப் பொழுது முடிந்து பகல் பொழுது ஆரம்பமாகும் புண்ணிய காலம். சங்கரம் என்றாலே நகர்தல் என்று பொருளல்லவா? சூரியனும்  தக்ஷிணாயனத்தை முடித்துவிட்டு உத்தராயனத்துக்கு நகரும்  புண்ணிய நாள். தெற்கின் பக்கம் சாய்ந்து இருந்த சூரியன் வடக்குப் பக்கம் சாயும் புனித நாள். தேவர்களுக்குப் பகல்பொழுது ஆரம்பிக்கும் புனிதமான உத்தராயனப் புண்ணியகாலம்.

ஒவ்வொரு  மாதமும் ஒவ்வொரு  சங்கராந்தி வருவது வழக்கம். சித்திரையில் தொடங்கி பங்குனிவரை சூரியன் ஒவ்வொரு ராசியில் நுழையும்போது  வரும் நாளை  தான்ய  சங்கராந்தி, தாம்பூல சங்கராந்தி, மனோரத சங்கராந்தி,   அசோக சங்கராந்தி, ரூப சங்கராந்தி, தேஜ சங்கராந்தி, ஆயுள் சங்கராந்தி , சௌபாக்ய சங்கராந்தி, தனுஷ் சங்கராந்தி, மகர சங்கராந்தி, லவண சங்கராந்தி, போக சங்கராந்தி  என்றே விஷ்வகர்மா கணித்து வந்தார். அதில் மகர சங்கராந்தியில் வரும் பலன் அபரிதமாக இருந்தது. பரமேஸ்வரன் தட்சிணாயனம் முழுவதும்  புலிபோலக்  கோபமுடன் இருந்து வருவார். உத்தராயனத்தில்  அவர் அமைதிகொண்டு அனைவருக்கும் அள்ளித் தருவார்.

பிற்காலத்தில் பாரதப்போரில் பீஷ்மரும் இந்தப் புண்ணிய நாளில்தான் தன் உயிரைவிடக் காத்திருந்தார்.  கும்பமேளாவும் இந்தப் புண்ணிய நன்னாளில்தான் துவங்குகிறது.

Image result for vishvakarma and his daughter and suryadevஆஹா! அந்தக் காலத்தில் மட்டும் அவர்கள் உறவு நிகழ்ந்திருந்தால் அவர்களுக்கு மும்மூர்த்திகளுக்கு இணையான மகன் பிறந்திருப்பான். அவன் சூரியனைவிடப் பலமடங்கு பெருமை வாய்ந்தவனாக இருந்திருப்பான்.  மும்மூர்த்திகளின் படைத்தல் காத்தல் அழித்தல்  என்ற மூன்றையும் இவன் ஓருவனே செய்யும் அளவிற்கு உயர்ந்தவனாக இருந்திருப்பான். அவனுடைய தேஜஸ் மகாவிஷ்ணுவைவிடப் பிரகாசமாக இருந்திருக்கும். அவனுடைய மகோன்னதம் பரமேஸ்வரனைவிட  அதிகமாக இருந்திருக்கும். அறிவு பிரும்மனைவிடப் பல மடங்கு சிறப்பாக இருந்திருக்கும். உண்மையில்  அவன் மகாபிரும்மருத்ரனாக விளங்குவான்.

இந்தக் கனவை நிறைவேற்றவே விஷ்வகர்மா தன் வாழ்நாளெல்லாம் ஆவலோடு காத்திருந்தார். தன் மகள் ஸந்த்யாவைப்                பொத்திப்பொத்தி வளர்த்தார்.   யாருடைய கண்களிலும்படாதவாறு அவளை வளர்த்து வந்தார்.   தங்கப் பொய்கையில் சூரியதேவன் தன் மகளுடன் காந்தர்வ விவாகம்போன்று கலந்து உறவாடியதில் அவருக்கு மனதில் சற்று வருத்தம் இருந்தாலும் அவர்  அதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல்  சூரியனுக்குக் காந்த சிகிச்சை செய்வதுபற்றிய எண்ணத்திலேயே மூழ்கியிருந்தார்.  அதற்குக் காரணம் சூரியனின் குறைபாட்டை அவர் நன்கு  அறிந்ததுதான்.  அதிகப் பிரகாசமும் வெப்பமும் அவனுள் குழந்தையை உண்டு பண்ணும் தாதுக்களை  அழித்து விடுவதால் ஸந்த்யாவிற்குக் குழந்தை தரும் வீரியம் அவனிடம் இல்லை என்பதை உணர்ந்திருந்தார்.  அதனால்தான் அவனுக்கு உடனே  நிச்சயதார்த்தத்தை  நடத்தி முடித்துவிட்டு  அவனது அதீத பராக்கிரமத்தைக் காந்த சிகிச்சை மூலம் குறைத்து அவனை ஸந்த்யாவிற்கு மணமுடித்தால் அவர் எதிர்பார்க்கின்றபடி வீர பராக்கிரம புத்திரன் கிடைப்பான் என்ற நம்பிக்கை  விஷ்வகர்மாவுக்கு இருந்தது.

இன்று  ஸந்த்யாவும் சூரியதேவனும் அந்தக் காந்தப்படுக்கை அறையும்  அவர்கள் இருவருக்கும் உறவு நிகழ்ந்தது என்பதைத் தெளிவாகக் காட்டியது. அதுமட்டுமல்லாமல் காந்தசிகிச்சை முடிந்ததால் சூரியனின்  வீரியமும் சரியான அளவில் இருக்கும்.  அதனால் அவர்களின் இந்த சம்பந்தமே முதல் குழந்தைக்கு வித்தாக அமைந்திருக்கும் என்பதையும் விஷ்வகர்மா முழுதும் உணர்ந்திருந்தார்.

ஆயினும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை.

இந்த உறவில் ஏற்பட்டுள்ள குழந்தையை அழித்துவிட்டால் பின்னால்  அவர் எதிர்பார்க்கும் மகா பிரும்மருத்ரன்  உதிப்பான் என்ற எண்ணம் தோன்றியது.

அதைச் செயல்படுத்தும் திட்டங்களை யோசிக்க ஆரம்பித்தார் விஷ்வகர்மா .

அதை உணர்ந்துகொண்ட  மூன்று உயிர்கள் ஸந்த்யாவின் கருவில்  அளவற்ற வேதனையில் துடித்தன.

(தொடரும்)

இரண்டாம் பகுதி

Image result for sage narada and computer

நாரதர் வாக்குச் சாதுர்யத்தில் அன்றைக்கு முழு வீச்சில் இருந்தார். எப்படியாவது அனைவரையும் குழப்பி காரியத்தை முடிக்கவேண்டும் என்ற தீவிரமான எண்ணமும் அவருக்கு இருந்தது உண்மை.

அதுமட்டுமல்லாமல் அவர் இதைப்போலப் பல பிராஜக்டுகளைப் பார்த்திருந்தவர்.  அதிலும் குறிப்பாக கிளையண்ட்டின் மனோபாவத்தைப்பற்றி நன்கு அறிந்தவர்.

இந்த கிளையண்ட்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதே தெரியாது.  புது விஷயங்களும் புரியாது. வெகு காலமா  ஒரு வேலையை ஒரே மாதிரி செய்து வந்ததால் அதுதான் சிறந்தவழி என்பது அவர்கள் மனதில் ஆழமாய்ப்  பதிந்திருக்கும்.  மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் அவர்களுக்குக் கிடையாது. மற்றவர்கள் எல்லாரும் கம்ப்யூட்டரை உபயோகிக்கிறார்களே என்று தாமும் அதை உபயோகிக்காவிட்டால் நம்மைப்பற்றி மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்களே என்றுதான் அவர்கள் மாற்று வழிக்கு யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் அவர்கள் இதுநாள்வரை உபயோகித்த அதே வழியைத்தான் கம்ப்யூடரும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

எல்லாவற்றையும்விட  மிகப் பெரிய கொடுமை என்னவென்றால்  அவர்களுக்கு எல்லாம் தெரிந்தமாதிரி  காட்டிக் கொள்ளவேண்டும் என்பது மட்டும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.  அது தாங்கள்தான் எஜமானர்கள்  என்பதில் வரும் ஒரு அசட்டு ஆணவம்.

அவர்களின் இந்த அறியாமைக்கு அவர்களை மட்டும் குற்றம் சொல்லிவிடமுடியாது.  அவர்களிடம் பிராஜக்ட் செய்ய வரும் கம்பெனிகளும் முதலில்  அவர்களை  ஆஹா ஒஹோ என்று புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். நீங்க செய்றவேலையைச் சுலபமாக முடிக்கத்தான் எங்கள்  சிஸ்டம்; மற்றபடி உங்க அறிவுக்கும் திறமைக்கும் எந்த சூப்பர் கம்ப்யூட்டரும் கிட்டேநிற்கமுடியாது என்று டெண்டர் வாங்குவதற்காகப் புகழ்ந்து தள்ளுவார்கள்.  அவர்களிடம் எது இருக்கிறதோ இல்லையோ பிராஜக்டுக்குக் கொடுக்க நிறையப் பணம் இருக்கிறது என்பதை நன்றாக அறிந்தவர்கள்.

முதலில் குழி வெட்டுவோம் ; அதில்  கரும்பு தென்னை ஓலையைப் போட்டு மூடுவோம். காட்டுயானை வந்து அம்ஸமா கரும்பைத்தின்னக்  காலை  வைக்கும்; அப்புறம் என்ன ‘ம்ம் . மாட்டிக்குச்சு’ குழிக்குள்ளே விழவேண்டியதுதான்.  குழிக்குள்ளே விழுந்த யானையை வெளியே எடுக்கிறோம் அப்படின்னு வர்ரவங்கதான் இந்தத் திட்டமேலாண்மை, கணினி மேலாண்மை கும்பல்.

குழிக்குள் விழுந்த யானை வெளியே வரவேமுடியாது.  இந்த மேலாண்மைக் கூட்டம் குழியைப்  பெரிசா செஞ்சு யானை குழியிலேயே இருக்கறதுதான் முன்னேற்றத்துக்கான வழின்னு அவர்களை நம்பவைப்பாங்க. வெளியே வரமுடியாத யானைக்கு அதை நம்புவதைத்தவிர வேற வழியும் கிடையாது.

ஒரு காலகட்டத்தில அவங்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி இருப்பதுதான் அறிவுப் பாதையின் அடுத்தகட்டம் என்றெல்லாம் அறிக்கை விடுவார்கள்.

இப்படியே தங்கள் பணியைத் தொடரலாம் என்று அவர்கள் இருக்கும்போது இந்த மேலாண்மைக் கூட்டம்  பக்கத்திலேயே இன்னும் கொஞ்சம் ஆழமா அகலமா  பெரிய குழியைத் தோண்ட  ஆரம்பிப்பாங்க. ஏன்னா யானை இருந்தாலும் இறந்தாலும்  சொளையா வர்ற ஆயிரம் பொன்னு அவங்களுக்குக் கிடைக்குமே!

இந்தத் தத்துவங்களையெல்லாம் நன்றாகப் படித்தவர் நாரதர்.  அதனால் முதலில் சித்திரகுப்தனைப் பிடித்து அவர் வலையில் விழவைத்தார். வேலைப் பளுவில் வெந்து சாம்பலாகிக்கொண்டிருந்த அவனுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. அவனை பூலோகம், சத்யலோகம், மகரலோகம் என்று பல இடங்களுக்குக் கம்பெனி செலவில் திட்ட ஆய்வு என்ற பெயரில் ஜாலி டூருக்கும் ஏற்பாடு செய்தார். சில இடங்களுக்கு சித்திரகுப்தன்  குடும்பத்தோடும் சென்றுவந்தான். டூர் முடிந்து வந்த பின்னர்தான்  அவன்  எமன் மூலமாக சிவபெருமானிடம் இந்தத் திட்டத்திற்கான முதல் அனுமதியைப் பெற்றான்.

அதுதான் இப்போது ஆதார் வரைக்கும் வந்துள்ளது.

” ஆதார்  என்பது இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய திட்டம். இதன்படி ஒவ்வொருவருக்கும் ஒரு  தனி எண் தரப்படும். அந்த எண்ணோடு அந்தக் குடிமகனின் அடையாளக் குறிப்புகள் அனைத்தும் இணைந்திருக்கும். அந்த எண்ணைக் கொண்டு அவரது பெயர், பிறந்ததேதி, கைரேகை, புகைப்படம் விலாசம் அலைபேசி எண், மின்னஞ்சல் எல்லாம் அறியமுடியும்.

நம்முடைய திட்டப்படி உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் எமபுரிப்பட்டணம் திட்டத்திற்கான எமதார் என்ற எண்ணை சேர்க்கவேண்டும்.  இதைச் செய்துவிட்டோம் என்றால் நம்முடைய  டேட்டா பேஸ் தயாராகிவிடும். அதன்பின் யார் என்னென்ன பாவம் புண்ணியம் செய்கிறார்கள் என்பது ஆட்டமேடிக்காகவே இந்த டேட்டா பேசில் ஏறிக்கொண்டே போகும்.  அதன்பின் எம கிங்கரர் உயிரைப் பறிக்கும்போது ஒரு பட்டனைத் தட்டினால் போதும் . அந்த நரனுடைய கணக்கு அனைத்தும் சப்ஜாடா வந்துவிடும். “

நாரதர் திரிலோக சஞ்சாரி என்பது அவர் பேசிய ஸ்லாங்கிலிருந்து நன்றாகப் புரிந்தது. அவரால் மெட்ராஸ் பாஷையும் பேசமுடியும், தேவ பாஷையும் பேசமுடியும் என்பதை சித்திரகுப்தன் புரிந்துகொண்டான்.

ஆதார் எமதார் என்று நாரதர் எவ்வளவு குட்டையை குழப்பினாலும் எமன் ஏமாறத் தயாராயில்லை.

“அதெல்லாம் சரி தேவமுனி! டேட்டா பேசில் இருக்கும் டேட்டாவிற்கு என்ன  பாதுகாப்பு? என்று ஆணித்தரமாகக் கேட்டான் எமன்.

” அதற்கு நீங்கள் சற்றப் பொறுக்க வேண்டும். இதைப்பற்றி விளக்க ஆரக்கிளிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார் . இதோ அவரை அழைக்கிறேன்” என்று நாரதர் கூறவும்  அதுவரை  அந்த அறையில் அரைத் தூக்கத்திலிருந்த அவை உறுப்பினர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகக்  கவனிக்க ஆரம்பித்தனர்.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.