ஒரு பிராமண ஐயர் ,,,தினமும் வீதி வழியாகக் கிருஷ்ண பஜகோவிந்தம் 11வது பாவத்தைப் பாடியபடியே வீடு வீடாகச் சென்று அன்ன யாசகம் பெற்று உண்பவர்.
ஒரு நாள் இப்படி வீதி வழியாக அவர் பாடிக்கொண்டு வரும்போது 10 வயது சிறுமி ஒருத்தி அந்த ஐயரை அழைத்தாள்,,,”சுவாமி என் வீட்டுக்கு வருகிறீர்களா உங்களுக்கு அன்னமிடக் காத்திருக்கிறேன்” என்றாள்.
ஐயர் அந்த சிறுமியை உற்று பார்த்தார்.
அவள் கிழிந்த ஆடையை நேர்த்தியாய் பெயர்த்து அழகாக உடுத்தி இருந்தாள். ஏழ்மையிலும் பால் மனம்கொண்ட அழகான முகம்.
ஐயர் –“யாரம்மா நீ ! என்னைக் குறிப்பாக உன் வீட்டிற்கு அழைத்து அன்னமிடக் காரணம் என்ன என்று சொல்லம்மா” என்று அன்புடன் கேட்டார் ,
சிறுமி –“சுவாமி நான் தினமும் உங்களது கிருஷ்ண பஜனைப் பாடல்களை ரசித்துக் கேட்பேன், இப்படி அனுதினமும் கேட்டுக்கேட்டு எனக்குத் தாங்கள் பாடிய முழுப்பாடலும் மனப்பாடம் ஆயிற்று ,,அதனால் உங்களை குருவாக நினைத்து என் இல்லத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள் சுவாமி” என்றாள் பணிவன்புடன்.
அவளது பேச்சில் இருக்கும் அன்புக்குக் கட்டுப்பட்டு அந்தச் சிறுமியின் இல்லத்திற்குச் சென்றார் ஐயர், (சின்ன குடிசை,மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்கள்.
அந்தச் சிறுமியின் தாயும் தந்தையும் நெசவாளர்கள். அந்த நேரம் அவர்கள் சந்தைக்குச் சென்றிருந்தார்கள் .
இந்தச் சிறுமியும் தனக்கு ஒரு சிறிய நெசவு இயந்திரத்தை வைத்திருந்தாள்).
ஐயர் சிறுமியின் இல்லத்திற்குள் நுழைந்ததும் அவரது பாதங்களுக்கு நீர் வார்த்துக் கழுவிப் பூக்களால் பூஜைசெய்து பின் தான் சாப்பிட வைத்திருந்த பழமும்,,பாலும் உண்ணக் கொடுத்தாள் அந்தச் சிறுமி ,
அவளது அன்பான விருந்தோம்பலில் ஆனந்தமாக உணவருந்திய ஐயர்,
பின் அவளது நெசவு இயந்திரத்தின் அருகே சிக்கலான நூல்கள் அறுந்து ஆங்காங்கே கிடப்பதைப் பார்த்து ,,”அம்மா ,,,சுத்தமான இந்த வீட்டில் எதற்கு இந்தச் சிக்கலான நூல்களை எல்லாம் குப்பைபோல் வைத்து உள்ளீர்கள்” என்று கேட்க,
சிறுமி –“ஐயோ சாமி அது குப்பை இல்லை! எல்லாம் கண்ணன் தன் பிஞ்சுக் கைகளால் அறுத்து அறுத்து எறிந்த நூல்கள்” .
ஐயர் திகைப்புடன் “என்னம்மா சொல்கிறாய் கண்ணன் அறுத்த நூல்களா”?
சிறுமி —“ஆமாம் சுவாமி நான் தினமும் நீங்கள் பாடிய கிருஷ்ண கீர்த்தனையைப் பாடிக்கொண்டே ராட்டினம் சுற்றுவேன். அப்பொழுது கண்ணன் சிறு குழந்தையாக இங்கு வருவான். நான் சொல்லச்சொல்லக் கேட்காமல் என் பாட்டை ரசித்தபடியே இந்த நூலை அறுத்து அறுத்து எறிவான், பின் மறைந்து விடுவான்”.
இதைக் கேட்டதும் ஐயர் திகைத்து, ‘இத்தனை நாள் நான் பாடிய பாடலுக்கு வராத கண்ணன் ,,,,நான் பாடிக் கேட்டு மனப்பாடம் செய்த இந்த சிறுமி பாடியா வந்திருப்பான் ,,,,,சரி பார்த்து விடுவோம் ,அதையும் ‘
ஐயர் அந்த சிறுமியைப் பார்த்து “அம்மா இப்பொழுது நீ பாடிக்கொண்டே ராட்டினம் சுற்று,கண்ணன் வருகிறானா என்று பார்க்கிறேன்” என்றார்.
சிறுமியும் பாடிக்கொண்டே ராட்டினம் சுற்றினாள்,,,,சிறிது நொடியில் ,,,,சந்தோசமாகக் கத்தினாள், “சுவாமி கண்ணன் வந்து விட்டான்” என்று.
ஐயர் —-“எங்கே என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லையே” என்றார்.
சிறுமி உடனே கண்ணனிடம் “கண்ணா என் குரு நாதருக்கு ஏன் நீ தெரியல” என்றாள்.
கண்ணன் – “உன் குருநாதர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே எனது கீர்த்தனைகளைப் பாடுகிறார் ,,,,அதில் ,,பக்தி,பாவம் ,,உள்ளன்பு ,,எதுவுமே கிடையாது ,,,,அதனால் அவர் கண்ணுக்குத் தெரியவே மாட்டேன் “என்றான் கண்ணன்.
கண்ணன் சொன்னதை அப்படியே சிறுமி தன் குருநாதரிடம் சொன்னாள்.
அதற்கு ஐயர் “நான் உன் குருதானே எப்படியாவது எனக்குக் கண்ணனைக் காணச் செய்யேன்” என்றார் கெஞ்சலாக சிறுமியிடம்.
குரு சொன்னதைக் கேட்ட மாயக் கண்ணன் ,சிறுமியிடம் “தோழியே நீ பாடு உன் பாடலில் நான் ஆடிக்கொண்டே நூல்களை அறுத்து எறிவேன் ,,நூல்கள் அறுவது மட்டும் அவர் கண்களுக்குத் தெரியும்படி செய்கிறேன், அதைப் பார்த்து அவரை மகிழச் சொல். இதுவும் நீ அன்பாகக் கேட்டதால்தான் செய்கிறேன் ,,ம்ம் நீ பாடு” என்றான் கண்ணன்.
சிறுமியும் கண்ணன் சொன்னதை குருவிடம் சொன்னாள்.
அவரும் .,”சரி நீ பாடம்மா இந்தப் பாவி அதையாவது பார்த்துப் புண்ணியம் தேடிக்கொள்கிறேன்” என்றார்.
சிறுமி பாட ஆரம்பித்தவுடன், நூல்கள் தானாக அறுந்து விழுவதைப் பார்த்தார் ஐயர் ,,,,அப்படியே பரவசமாகித் தான் செய்த தவறுக்குக் கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சிறுமியை வாழ்த்தி ,வீதியில் இறங்கிப் பாடிக்கொண்டே சென்றார்.
இப்பொழுது அவரது கைகள் யாசகம் கேட்கவில்லை.
பக்திக்கு மட்டுமே கட்டுப்படுவான் கண்ணன் .
“ஸ்ரீ கிருஷ்ணா! உன் திருவடிகளே சரணம்”