யாருமே அற்றவர்க்கும் –உன்
அருளினை நம்பியே உற்றவர்க்கும்
நேரிடும் துயர்கண்டு — நீ
நேரினில் ஓடியே வருவதுண்டு.
போரினை மிகவிரும்பி — மகன்
புகன்றவோர் அறவுரை தனைப்பழித்தான்
சீறிடும் சிங்கமெனத் — தூணில்
சென்றுநீ அரக்கனின் உடல்கிழித்தாய்.
தோழனாம் வறியவனின் — அவல்
சுவையென உண்டுஅவன் மிடிகளைந்தாய்.
ஆழமாம் கடலினையே — ஓர்
அணையினால் கடந்தபின் இகல்மலைந்தாய்.
வேழமும் அழைத்திடவே — அன்று
விரைந்தனை அதனுயிர் பிழைத்திடவே.
சூழுமக் களம்நடுவே — கீதை
சொல்லினை அடியவன் மருள்கெடவே.
மாந்தரில் கொடியவனின் — தம்பி
மங்கையின் உடையினை உரித்தெடுத்தான்
வேந்தனாம் துருபதனின் — மகள்
விம்மினாள், வேண்டினாள், உனைஅடுத்தாள்.
ஆந்துணை ஆகவந்தாய் — கடல்
அலையென ஆடைகள் அவைதந்தாய்.
ஏந்தலே வடமதுரைக் — கண்ணா
என்குறை தீர்த்திட வாஉடனே !