DYING SWAN
1962 என்று நினைக்கிறேன். ரஷ்யாவின் புகழ் பெற்ற Bolshoi Ballet நடனக் குழு இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சிகளை அளித்தது, அந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிரசித்தி பெற்ற அமர காவியம் என்று இன்றும் சொல்லப்படும் நிகழ்ச்சி DYING SWAN என்கிற நாட்டிய நாடகம்.
நீண்ட கால்களும் மிக நளினமான உடல்வாகும் கொண்ட பெண்கள் அன்னப் பறவைகள்போல் உடலை அலங்கரித்துக்கொண்டு மேடையில் ஒரு கவிதையையே நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த நாடக நீரோட்டத்தின் மையப் பொருளாக இரண்டு அன்னங்களின் காதல் சரித்திரம் மிக நேர்த்தியாக நெகிழ்ச்சியுடன் நடனங்களில் பிரத்யட்சமாகும்.
காதலினால் இரு உயிர்களுக்கிடையே தோன்றும் நேசம்…ஏக்கம் பரிவு ஊடல் பிரிவை நினைந்த சோகம் மரணம்…மரணமும் வெல்ல முடியாத அந்த உயிர்களின் பிணைப்பு இப்படி எல்லாவித உணர்வுகளையும் பிரதிபலித்து அருமையான சங்கீதப் பின்னணியில் நிகழும் இந்த நாட்டிய நாடகம் பார்ப்பவரின் நெஞ்சத்தை மௌனமான துக்கத்தில் ஆழ்த்தும்.
இந்த நாட்டிய காவியத்தைப் பார்த்தபின்பு இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. அப்போது எனக்குள் எழுந்த சில கவிதை வரிகள் இப்போது மீண்டும் கிடைத்தது. இப்போது அது உங்களுக்காக… ……அன்புடன்…..
An afterthought of DYING SWAN
——————————————–
மூப்பின் முடிவே!
பிறப்பை நோக்கி
விரையும் பெருந்துடிப்பே!
அரச கம்பீரத்துடன்
சாவைத் தழுவிக் கொள்ளும்
வாழ்வின் உன்னதமே!
மௌனத்தில் துயில் கொள்ளும்
உயிரின் பேரிசையே!
அன்னமெனும் வெண்மைக்குள்
விம்முகின்ற ஆனந்தப் பூங்காற்றே!!
………………………
உன்னால் சாவு வாழ்கிறது!