“கதை சொல்லும் கலை” ( இதை கிளிக் செய்தால் அந்தப் புத்தகத்தை இணையதளத்தில் படிக்கலாம்) என்ற புத்தகத்தை முருகபூபதி அவர்கள் எழுதி பாரதி புத்தகாலயம் மூலம் வெளியிட்டிருக்கிறார்.
அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் . அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான கருத்துக்கள் நம் பார்வைக்கு:
கதைசொல்லல், கதை வாசிப்பு இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தமிழகத்தில் மேடைப்பேச்சு கேட்க வரும் கூட்டம் ஏன் வாசிப்புக்கு இல்லை, மேடைப்பேச்சாளர்கள் அளவுக்கு வருமானமும் புகழும் ஏன் எழுத்தாளர்களுக்கு இல்லை, ஏன் எழுத்தாளர்களை மேடைப் பேச்சாளர்களாக ஆக்க இடைவிடாது முயல்கிறார்கள் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டால் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளமுடியும். ஏறத்தாழ அனைவருமே குழந்தைப் பருவத்தில் பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள். கோயில்களிலும் கூத்தரங்குகளிலும் கதைகளைக் கண்டு, கேட்டு ரசித்தவர்கள். அவர்களிலிருந்து ஏன் வாசகர்கள் மிகமிகக் குறைவாக உருவாகி வருகிறார்கள்?
கதை கேட்பதென்பது ஒரு செவியனுபவம். கதை வாசிப்பது விழியனுபவம், மொழியனுபவம். இரண்டும் முற்றிலும் வேறு. மாறுபட்ட மூளைத் திறன்களால் எய்தப்படுபவை. மாறுபட்ட பயிற்சிகளைக் கோருபவை. கதை வாசிப்பு என்பது குழந்தைக்கு வாசிப்பை நேரடியாக அறிமுகம் செய்வது. நாம் வாசித்துக் காட்டி மிக மெல்லக் குழந்தையை வாசிப்புக்கு இட்டுச் செல்வது. கதை சொல்வது கேள்வியாளனாகவே குழந்தையை வடிவமைப்பது.
கதை வாசிப்பு, கதை சொல்லல் இரண்டுமே ஆரம்ப. கட்டத்தில் கதை என்ற வடிவை, கதையை கற்பனையில் விரித்தெடுக்கும் அனுபவத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்வதற்கு அவசியமானவை. ஆனால் எப்போது குழந்தை கதைச் சுவையை அறிந்துவிட்டதோ அதன்பின் அதை வாசிப்பை நோக்கிக் கொண்டுசெல்லவேண்டும். அதுவே அமர்ந்து அந்தரங்கமாக வாசிக்கப் பயிற்சி அளிக்கவேண்டும். அக்குழந்தையே வாசகனாக ஆகும். கதைமட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தை வாசிப்பில் சுவையிலாது போகக்கூடும்
ஏனென்றால் கதை சொல்லும்போது நம் உணர்வுகளையும் நாமே அளிக்கிறோம். அது ஒரு நிகழ்த்துக் கலையென்று ஆகிவிடுகிறது. கதை வாசிப்பின்போது அது உணர்வற்ற மொழிவெளிப்பாடாக மட்டுமே உள்ளது. அதை உணர்வாகவும் காட்சியாகவும் மாற்றிக்கொள்ளும் பொறுப்பு குழந்தைக்கு வருகிறது. கதை சொல்லும்போது ஓர் உரையாடல் நிகழ்கிறது. குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப கதை வளர்கிறது. அது நிகழ்த்துக் கலையின் இயல்பு. கதை வாசிப்பில் அம்சம் இல்லை. அது புத்தகம்போலவே முடிந்துவிட்ட வடிவம். வாசகனுக்கேற்ப அது மாறாது. அதை வாசகன்தான் மீட்டி வளர்த்துக் கொள்ளவேண்டும்.
ஆகவே ஆரம்ப நிலையில் கதை சொல்லல், பின்னர் கதை வாசிப்பு, அதன்பின் நேரடி வாசிப்பு என்பதே குழந்தையை வாசிப்புக்குப் பயிற்றுவிக்கும் வழியாக இருக்கமுடியும்.
என்ன அழகான கருத்தோவியம் ! நம் குழந்தைகளுக்கு முதலில் கதை சொல்லப் பின்னர் அவர்களையே வாசிக்கத் தூண்டுவோம்.
இதுதான் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் அனைவரும் செய்யவேண்டிய பணி !
செய்வோம் !
கதை சொல்லுதல் கேட்டல் பற்றிய சிறப்பான பதிவு.
LikeLike