குமார குப்தன்
காளிதாசன் மறைந்துவிட்டான்.
இரண்டாம் சந்திரகுப்தனும் மறைந்துவிட்டான்.
ஒவ்வொரு மன்னன் மறைந்தபோதும்…
அடுத்த மன்னனுக்கான அடிதடி என்பது – எழுதாத உலக நீதி ஆகிவிட்டது.
இதில் பொற்காலத்தைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்!
வென்றவர்கள் சரித்திரத்தில் பொன்னாகப் பதிந்தனர்…
தோற்றவர்கள் காலச்சக்கரத்தில் காணாமல் போயினர்…
யார் எப்படி வென்றார்கள் என்பதுபற்றி எப்போழுதுமே சரித்திரம் பல கதைகளைக் கூறுகிறது.
யார் வென்றாலும் அதில் நாம் சுவையான கதையை மட்டும் எடுத்து அசைபோடுவோம்!
சரி… நம் கதைக்குப் போவோம்..
கி பி 415:
நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான் இரண்டாம் சந்திரகுப்தன்.
மூத்த மகன் கோவிந்த குப்தன்!
பட்டத்து இளவரசன்!
மகாராணி துருவா தேவியின் மகன் அடுத்தவன் – குமார குப்தன்!
மன்னனுக்கு ‘கார்த்திகேயன்’ (நமது முருகப்பெருமான்) மீது அளவுகடந்த பக்தி.
அதனால் துருவாதேவியின் மகனுக்கு குமார குப்தன் என்று பெயரிட்டிருந்தான்.
சந்திரகுப்தனின் ஆட்சியில் கோவிந்த குப்தன், குமார குப்தன் இருவரும் பல போர் முனைகளில் வெற்றி சூடிக் கொடுத்தனர்.
சந்திரகுப்தனின் பொன்னான ஆட்சி அன்று ஒரு நாளில் முடிந்தது.
வழக்கம்போல நாடெங்கிலும் சோக வெள்ளம்..
எதிரி மன்னர்கள் ‘அடுத்து என்ன நடக்கும்’ என்று ஆவலுடன் காத்திருந்தனர்…
ஜகஜ்ஜோதியாக ஜொலிக்கும் உஜ்ஜயினி நகரம் – அன்று பொலிவிழந்து கிடந்தது.
மகாராணிகள் தங்கள் தங்கள் மகனுக்கு மன்னனாக என்ன வாய்ப்பு என்று ஆலோசித்திருந்தனர்.
அதை விட தங்கள் மகனுக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்தினர்.
ஏனென்றால்..
இளவரசர்களுக்கு…கிடைத்தால் அரியணை! கிடைக்காவிட்டால் கல்லறை!
பொதுவாக… மூத்தவனுக்கு வாய்ப்பு அதிகம்.
கோவிந்தன் மன்னனானான்!
நாட்கள் சில கடந்தது..
சரித்திரத்தில் ஒரு இடம் பிடிக்குமுன் கோவிந்த குப்தன் கல்லறையில் இடம் பிடித்தான்.
ஏன்.. எப்படி என்ற கேள்விகளுக்கு சரித்திரம் பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது..
நமக்கு எதற்கு வம்பு…சரித்திரம் அடுத்து என்ன சொல்கிறது என்று மட்டும் பார்ப்போம்..
துருவா தேவியின் மகன்… குமார குப்தன்… மன்னனானான்.
“குமாரகுப்தன் வெள்ளி நாணயம்”
விரைவில் குமார குப்தனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
குமார குப்தன் – கந்த பிரானின் பக்தன்- தன் மகனுக்கு ஸ்கந்தன் என்று பெயரிட்டான்.
30 வருடங்கள் நகர்ந்தது…
இளவரசன் ஸ்கந்த குப்தன் – மாவீரனாக வளர்ந்திருந்தான்.
போரில்லா வாழ்க்கை – காரணமாக மக்கள் பெருமூச்சுவிட்டுத் தங்கள் வாழ்வை மேம்படுத்திய காலம்..
அமைதியான நதியிலே ஓடம்- என்பதுபோல் அரசாங்கம் நடந்து வந்தது.
ஓடம்.. அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்.
அது போல் நர்மதைக்கரையில் மால்வா நாட்டில் ஒரு புரட்சி வெடித்தது.
மேற்கில் ஊழிக்காற்றுபோல் ஹூணரென்ற புயல் தாக்கத் துவங்கியது.
குப்தப்பேரரசின் பெரும்படை மேற்கைப் பாதுகாக்க அனுப்பப்பட்டது.
போர் மேகங்கள் குப்த நாட்டில் வானத்தை ஆக்கிரமித்தது..
குமார குப்தன் – வயோதிக குப்தன் ஆயிருந்தான்..
ஆனால் அவனுக்கு இருந்த ஒரு பெரும் பலம் … ஸ்கந்த குப்தன்
“ஸ்கந்தா! எதிரிகள் நாற்திசையிலும் சூழ்ந்திருக்கின்றனர்” குமாரகுப்தன் குரலில் வருத்தத்தை விட ஆதங்கம் மேலோங்கியிருந்தது.
“சரித்திரம்..குப்தரது தங்க காலத்தைத் தொலைத்தவன் நான் என்றா என்னைப் பற்றிச் சொல்லும்?”
ஸ்கந்த குப்தன்: “தந்தையே! எந்த ராஜ்யமும் அழியாமல் வாழ்ந்ததில்லை.. ராம ராஜ்யமும் ஒரு நாள் முடிந்தது.. மௌரியர்களும் அழிந்து போயினர். அது போல் குப்தர்களும் ஒரு நாள் காணாமல் போவர்…”
குமார குப்தன்: “….”
ஸ்கந்த குப்தன்: “இதனால் என்னை பயந்தவன் என்றோ .. கோழை என்றோ எடை போடவேண்டாம். சுற்றி வரும் பகை போகப் போர் புரிவேன். உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன்”
குமார குப்தன் : “….”
இப்பொழுது ஸ்கந்த குப்தன் கூறிய வார்த்தைகள் சரித்திரமாகியது..
ஸ்கந்த குப்தன்: “இன்னும் இரண்டு வருடங்களில் பகையனைத்தையும் தொலைத்து விடுவேன்..பிறகு, ஒரு மந்திரித்த ராஜ குதிரையை நாடு முழுதும் வெற்றிகரமாக உலவவிட்டு…அதை பலிசெய்து …நீங்கள் அஸ்வமேத யாகம் செய்வீர்கள். இப்படிதான் உங்கள் பெயர் சரித்திரத்தில் இடம்பெறும். அத்துடன் நமது குல தெய்வம் கார்த்திகேயன் உருவத்துடன் தங்க நாணயம் வெளியிடுவீர்கள். அத்துடன் மகேந்திராதித்யா என்ற பட்டப் பெயருடன் விளங்குவீர்கள். உங்கள் காலத்தில் அகில உலகும் புகழும்படி ஒரு பெரிய பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும். அது நாளந்தா பல்கலைக்கழகம் என்று பேர்பெற்று விளங்கும். மேலும் சுத்தமான தேனிரும்பினால் செய்யப்பட்ட பெரும் தூண் ஒன்று எழுப்பப்படும் . காலத்தில் அழியாத அந்தத் தூணில் உங்கள் வீரதீரங்கள் பறைசாற்றப்படும்…இவை அனைத்தும் நடைபெறாமல் என் உயிர் போகாது.”
(பின்னாளில்…
- குத்புதீன் ஐபக் என்ற சுல்தான் அந்த பெரும் தூணைச்சுற்றி மசூதி எழுப்பினான்.
- நாளந்தா பல்கலைக்கழகம், ஆப்கானிஸ்தானிலிருந்து வட இந்தியாவின்மீது படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய படைத் தளபதியால் சூறையாடாப்பட்டு, முற்றிலும் தீக்கிரையானது.
குமாரகுப்தனது கண் கலங்கியது – உள்ளம் நெகிழ்ந்தது..
‘மகன் என்றால் இவனன்றோ மகன்- இதைவிட எனக்கு வேறு பாக்கியம் என்ன இருக்கிறது’!
மகனை ஆரத் தழுவிக்கொண்டான்.
(நாளந்தா பல்கலைக்கழகம்)
நர்மதா பள்ளத்தாக்கு…
ரம்யமான மாலை நேரம்.
குப்த ராஜ்யத்தின் விளிம்பில் இருந்த நாடு.
நாடு என்பதைவிட காடு அது என்றுதான் சொல்லவேண்டும்.
நர்மதா கரையோரக் காடுகளில் வாசித்த காட்டு வாசிகளின் தலைவன் பெயர்:
புஷ்யமித்ரன்.
முகத்தில்.. சந்தன வீரப்பன் போல புதர் மீசை..
கண்களில் .. அனல் பறக்கும் கொடிய பார்வை..
நெஞ்சில்.. குப்தப் பேரரசையே விழுங்க ஆசைக் கனல்..
அவன்..
குப்த தானியக் கிடங்குகளை சூறையாட்டம் ஆடுவான் ..
குப்த ராணுவக் கிடங்குகளை அவர்கள் அறியாத இரவு நேரம் வேட்டையாடி ஆயுதங்களைக் கைப்பற்றுவான்..
குப்தர்களின் கருவூலங்களைத் தாக்கித் தங்க நாணயங்களை அபகரித்துக் கொள்வான்.
பணமும், பலமும் சேர்ந்ததால்… அனைவரும் அவனைக்கண்டு நடுங்கினர்..
அருகில் இருந்த நாடு ‘வகடக ராஜ்ஜியம்’ .
அங்கு குமாரகுப்தனின் சகோதரி பிரபாவதி குப்தா மகாராணி. அவளும் அரசாண்டு காலமானாள். அவளது மூத்த மகன் திவாகரசேனா – அரியணை ஏறுமுன் அகால மரணமடைந்தான். அடுத்த மகன்கள் தாமோதரசேனா- மற்றும் பிரவாரசேனா இருவரும் கூட்டு அரசராயினர்.
அவர்களுக்கு குமார குப்தன் சொந்த மாமன்தான்… ஆனாலும் வகடக அரசர்களுக்கு மண்ணாசை விடவில்லை..
புஷ்யமித்திரனை வைத்துக் குப்த ராஜ்யத்தைக் களவாடத் திட்டமிட்டனர்.
காலம் எப்படி யாரைக் கொல்லும் என்பதை யாரோ அறிவர்!
இரு வகடக மன்னர்களும் ஒரு விபத்தில் காலமாயினர்.
இளவரசன் ஒருவன் மன்னனானான்.
மாதம் ஒன்று தாண்டவில்லை..
அவனும் பூமியைத்தாண்டி காலன் கோட்டை சென்றான்!
இப்பொழுது அவனுடைய மகன்..
புத்தம்புதிய இளவரசன் தேவசேனா..
அவனுக்கோ வயது 8.
மந்திரி ஹஸ்திபோஜன் அரசாங்கத்தைக் கவனித்துக்கொண்டான்.
அவன் நர்மதா நதிக்கரையில் மால்வா நாட்டில் புஷ்யமித்திரனைச் சந்தித்தான்.
கூட்டணி அமைந்தது…
கொள்ளை … கொள்ளை… கொள்ளை..
அது குப்தராஜ்யத்தைக் கரையான் அரிப்பதுபோல் அரிக்கத் தொடங்கியது.
குப்த கருவூலம் மெல்லக் கரையத் தொடங்கியது.
ஒரு நாள் இரவு:
அமாவாசை நாள்.
காரிருளைக் கிழித்து நட்சத்திரங்கள் மினுமினுத்தது.
புஷ்யமித்திரன் காட்டு மாளிகையில் பெரும் யோசனையில் இருந்தான்.
‘அடுத்த குப்த ராஜ்யத்தின் சூறையாடல் எங்கு’ என்பதுபற்றி.
அதே நேரம்.. காட்டின் விளிம்பில் சிறு கூடாரம்.
அதில்..மண் தரையில் ஒருவன் பாய் விரித்துப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.
நடு இரவுதாண்டி இரண்டு சாமம் கடந்தது.
உறங்கிக் கொண்டிருந்தவன் கண் விழித்தான்.
கூடாரத்தை விட்டு வெளியே வந்து- தீப்பந்தத்தை லேசாக ஆட்டினான்.
காட்டிலிருந்து அருவிபோல படைவீரர்கள் திரண்டனர்.
காட்டு மாளிகையைச் சுற்றி வளைத்தனர்.
சிறிது நேரத்தில் காட்டு மாளிகை தீப்பிடித்து எரிந்தது..
புஷ்யமித்திரன் உறக்கத்தைவிட்டு வாளை எடுத்தான்.
அவனது வீரர்களும் திரண்டனர்.
அந்த இரவில்- தீப்பற்றி எரிந்த மாளிகையின் வெளிச்சத்தில் போர் நடந்தது.
புஷ்யமித்திரன் காயப்பட்டான்.. பிடிபட்டான்..
“ஸ்கந்த குப்தா! நீயா” –என்று புஷ்யமித்திரன் வியப்புடன் கூவினான்.
அஞ்சாநெஞ்சன் என்று அறியப்பட்ட புஷ்யமித்திரன் முகம் அன்று அச்சத்தைக் காட்டியது…
காயம்பட்ட புஷ்யமித்திரன் கீழே விழுந்து கிடந்தான்.
ஸ்கந்த குப்தனின் கால் புஷ்யமித்திரன் மீது பதிந்தது…
ஸ்கந்த குப்தன்: “புஷ்யமித்திரா! சரித்திரத்தில் உனது ஆட்டம் இன்றுடன் முடிந்தது.. இனி குப்த நாட்டுக்கு உன்னால் ஒரு தொல்லையும் இல்லை. கல்லறை செல்லும்வரை உனக்கு இனி சிறைதான். மேலும் உன்னுடன் கூட்டு சேர்ந்த வகடக மன்னன் இனி என் வாளுக்கு இரையாவான். வகடக ராஜ்ஜியம் இத்துடன் முடிந்தது”!
ஸ்கந்தன் உஜ்ஜயினி சென்று தந்தையிடம் விபரம் அனைத்தையும் கூறினான்.
“தந்தையே! ஒரு பிரச்சினை தீர்ந்தது.. இனி காந்தாரம் சென்று ஹூணரது படையெடுப்பை முறியடிப்பேன்”
சொன்னதைச் செய்தான்!
தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினான்.
ஒரு மகன் உறுதியுடன் தந்தைக்கு உதவி செய்தால்… எந்த தந்தை தான் வெற்றியாளராக மாட்டார்?
மன்னன் மனம் அமைதியடைந்தது…
“இனி நான் நிம்மதியாக உயிர் விடுவேன்” – என்றான் குமார குப்தன்.
இருப்பினும்..
ஹூணர்களைத் தோற்கடிக்க ஸ்கந்தன் படையெடுப்புகள் குப்தரது கஜானாவை காலி செய்தது- அவனது நினைவுக்கு வந்தது..
‘இனி குப்தரின் எதிர்காலம் என்னவாகுமோ?’
இறக்குமுன் – குமார குப்தனுக்கு – ஸ்கந்த குப்தன் அன்றொரு நாள் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது:
“ராம ராஜ்யமும் ஒரு நாள் முடிந்தது”
‘குப்த நாட்டின் முடிவும் அதுபோல முடியும்’ என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது.
அந்த நினைவுடன்… அவன் உயிரும் பிரிந்தது!
அடுத்து வரும் கதைகள் என்னவாயிருக்கும்?
விரைவில்…
ஸ்கந்த குப்தன் காலத்தைப் பற்றி சாண்டில்யன் எழுதிய மலைவாசல் -உபாத்தியாயன் -அடிலன் -தோரமானா – பல்தேவ் ஞாபகம் வருகிறது. அந்தக் கதையும் இதில் வருமா?
LikeLike