நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
ரசமாயம் ஜூலை மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
போளி புராணம் ஆகஸ்ட் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அன்னை கைமணக் குறள்கள் செப்டம்பர் மாதம் 2௦18 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
கலந்த சாதக் கவிதை !
வாழ்க்கை என்பது வரப்பிரசாதம் – அது
இன்பமும் துன்பமும் கலந்த சாதம் !
வாய்க்கு வாய் ருசியோ ருசிதான் – அது
வாழும் விதத்தில் இருக்குது மனிதா !
குழந்தை பருவம் இனிக்கும் காலம் – நமக்கு
இயற்கை வழங்கிய இனிப்பு சாதம் !
மழலை பேசியும் மரங்களில் ஏறியும்
மண்ணில் புரண்டும் மகிழும் காலம் !
வளரும் பருவம் வசந்த காலம் – அது
உப்புகாரம் ஏறிய எலுமிச்சை சாதம் !
சுறுசுறுவென்றும் விறுவிறுவென்றும்
துள்ளித் திரியும் இளமைக் காலம் !
காளையர் கன்னியர் காதல் காலம் – அது
மனதில் வெடிக்கும் அப்பளம், வடகம் !
நன்றாய்ப் பொரிந்தால் நல்லது நடக்கும்
சரியில்லையென்றால் சோகத்தில் முடியும் !
நடுவிலே வந்ததோர் பெற்றோர் காலம் – அது
நெடுநாள் நிற்கும் புளியஞ்சாதம் !
பொறுக்கி எடுத்து கடலைகள் தின்போம் !
பொறுப்புகள் சுமக்கும் கமகம காலம் !
அனைத்தையும் சமன்செயும் கடைசிக் காலம் – அது
குளிர்வித்து அமைதி தரும் தயிர் சாதம் !
அப்போதும் நமக்கு ஊறுகாய் வேண்டும் –
தொட்டுக்கத் தொட்டுக்கத் தொடரும் காலம் !
வாழ்க்கை என்பது வரப்பிரசாதம் – அது
இன்பமும் துன்பமும் கலந்த சாதம் !
வாய்க்கு வாய் ருசியோ ருசிதான் – அது
வாழும் விதத்தில் இருக்குது மனிதா !