குப்தசாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களைக் கூறி இரண்டு மதிப்பெண் பெற்றோமல்லவா?
இன்னொரு காரணம் கூறினால் இன்னுமொரு மதிப்பெண் பெறலாம்.
பதில்: யசோதர்மன்.
இது என்ன புதுக்கதை?
சரித்திரம் சொல்வதையே நாம் பேசுவோம்..
குப்த மன்னர்கள் – பூர குப்தன், நரசிம்ம குப்தன், புத்த குப்தன், பாலாதித்யன், இறுதியில் பானு குப்தன்.
இவர்கள் காலத்தில் ஹூணர்கள் இந்தியாவில் படையெடுத்துப் பெரும் வெற்றியும் பெற்றனர்.
இதனால் மட்டுமல்ல – மாளவத்தின் மன்னன் யசோதர்மன் எழுச்சியும் – குப்தர்களின் முடிவுக்கு ஒரு காரணம்.
ஆக.. இந்த யசோதர்மன் யார்?
குமாரகுப்தன் காலத்தில் மாளவத்தை ஆண்டு, கப்பம் கட்டி வந்த மாளவ மன்னன் பந்துவர்மன். இவன் ஔலிகர ராஜ்யப் பரம்பரையைச் சேர்ந்தவன். அந்தப் பரம்பரையில் கி பி 500ம் ஆண்டு பிரகாஷ தர்மனுக்குப் பிறந்தவன் யசோதர்மன்!
யசோதர்மன், ‘விக்ரமாதித்யன்’ என்ற பட்டம் (அந்த கால ‘பாரத ரத்னா’) சூட்டிக்கொண்டான்..
சந்திர பஞ்சாங்கம் ஒன்று ‘விக்ரம் சம்வாத்’ என்ற பெயரில் தொடங்கினான்.
கஜிராகோவில் விஷ்ணு கோவில் கட்டினான்.
இரண்டாம் காளிதாசன் எனப்படும் மகாகவி, யசோதர்மன் அரசவையை அலங்கரித்தான்.
யசோதர்மன் ஆட்சி வடக்கே இமயத்திலிருந்து தெற்கே திருவிதாங்கூர் வரை இருந்தது.
வேறு என்னதான் செய்தான்?
எப்படி நமது ‘சரித்திரம் பேசுகிறது’ அத்தியாயமாக?
மேலே படிப்போம்.
வருடம்: கி பி 532:
ராமன் கதையென்றால் ராவணனின் மகத்துவம்பற்றி அறியவேண்டும்.
ராவணன் சிறந்த சிவபக்தன்….ராக்ஷசன்.
அதுபோல் மிஹிரகுலன் சிறந்த சிவபக்தன்….ராக்ஷசர்களுக்குக் குறைந்தவன் அல்லன்.
மிஹிரகுலன் ஹூணர் தலைவன் தோரமானாவின் மகன்.

(தோரமானா)
தோரமானா, பஞ்சாப் தேசத்தில் ஹூண சாம்ராஜ்யத்தை உருவாக்கி, குப்தர்களுடன் போரிட்டான். கி பி 510 ல் தோரமானா பானுகுப்தனைத் தோற்கடித்தான். மகதத்தை வெல்லும் ஆசையில் படையெடுத்துஅச் சென்ற தோரமானா வாரணாசியில் இறந்தான்.

(ஏரான் பன்றி – தோரமானா கல்வெட்டுகள்)
அவனுக்குப் பின்பு, அவன் மகன் மிஹிரகுலன் ஆட்சிக்கு வந்தான்.
மிஹிரகுலன் 530 வரை ஹூண அரசனாக இருந்தான்.
சகலா நகரை (இன்றைய சியால்கோட்) தலைநகராகக்கொண்டு ஆண்டான்.
பாரதத்தின் பல பகுதிகளை (காந்தாரம், காஷ்மீர்) கைப்பற்றினான். வெற்றிக்குமேல் வெற்றி அவனிடம் வந்து குவிந்தது.

(MIHIRAKULA- By Classical Numismatic Group, Inc. http://www.cngcoins.com, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=61258049)
புத்த சமயப் புத்தகங்கள் சொல்வது:
மிஹிரகுலன் குற்றம் இழைத்தான்!
கொடுமைகள் பல செய்தான்.
பௌத்த தலங்களை அழித்தான்.
பெளத்த விஹாரங்களைக் கொளுத்தினான்.
புத்த துறவிகளைக் கொன்று குவித்தான்.
1600 பௌத்த விஹாரங்களை, ஸ்தூபங்களை மற்றும் ஆசிரமங்களைதித் தரைமட்டமாக்கினான்.
காந்தாரத்திலிருந்து (இன்றைய ஆப்கானிஸ்தான்) பல்லாயிரம் பிராமணர்களை அழைத்து, காஷ்மீரில் குடியமர்த்தினான்.
மிஹிரகுலன் ஒரு சிறந்த சிவபக்தன்..காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் மிஹிரேஸ்வரர் ஆலயத்தை கட்டினான். மேலும், மிஹிரகுலனின் நாணயங்களின் பின்னால் ரிஷபச் சின்னமும் திரிசூலமும்,”ஜயது வ்ருஷப” (ரிஷபமே வெல்லும்) ,”ஜயது வ்ருஷத்வஜ” என்று பொறிக்கப்பட்டிருக்கும்.
ஒரு காட்சி சரித்திரத்தைப் புரட்டி எடுத்தது:
இடம்: மாளவ நாட்டு தலை நகரம் – அரண்மனை.
வருடம்: கி பி 528
மன்னன் யசோதர்மன் ஒரு மாவீரன்.
27 வயது இளைஞன்.
வீரன் மட்டுமல்ல …
மாபெரும் படைத்தலைவன்..
தனது வீரப் பிரதாபங்களைக் காட்டித் தனது படைகளை ஊக்குவித்து வெற்றிகண்ட மன்னர்கள் சரித்திரத்தில் பல உண்டு.
யசோதர்மன் அந்த ஜாதி!
இளம் வயதிலே மன்னன் ஆனான்.
ராக்ஷச குணம் கொண்ட ஹூணர்களின் அரிப்பு அவன் நெஞ்சை வாட்டியது.
மந்திரிமார்களுடன் மந்திராலோசனை செய்தான்.
யசோதர்மன்:
“அமைச்சர்களே! நாம் இன்று சரித்திரத்தின் விளிம்பில் இருக்கிறோம்.
இந்தியாவை இந்த புல்லுருவிகளிடமிருந்து காப்பது நமது ஒவ்வொருவரது கடமையாகும்.
மாபெரும் குமாரகுப்தனும், ஸ்கந்தகுப்தனும் – இதை முழுமையாக செய்யவில்லை.
அந்த மாமன்னர்கள் காந்தாரத்தைவிட்டு வெகு தொலைவில் இருந்தது – ஒரு காரணம்.
மேலும் அவ்வளவு தொலைவில் இருந்து படைகளை நடத்தியது அவர்கள் நிதி நிலைமையையும் சீரழித்தது.
நம் நாடு ஹூணர்களின் ராஜ்யத்திற்கு அருகில் உள்ளது.
குப்த மன்னன் நரசிங்ககுப்தன் இன்று ஒரு சிறு குறுநில மன்னன் போல ஆகிவிட்டான்.
நாம் தான் ஏதாவது முடிவு செய்ய வேண்டும்..
அதுவும் இன்றே!”
சபையில் பயங்கர மௌனம்..
மிஹிரகுலனைத் தாக்குவதா?
அனைவரது முகமும் திக்பிரமையில் ஆழ்ந்திருந்தது.
யசோதர்மன் சிரித்தான்.
“மந்திரிகளே! யசோதர்மன் என்றொரு மன்னன் இருந்தான்.. இறந்தான் என்பதை விட ..
யசோதர்மன் என்றொரு மன்னன் இருந்தான்… ஹூணர்கள் எனும் வியாதியை இந்தியாவிலிருந்து ‘அடியோடு ஒழித்தான் … என்ற பெயர் சரித்திரத்தில் வரவேண்டும்…
அல்லது..
அந்த முயற்சியில் இறந்தான் என்ற பெயர் வரவேண்டும்”
சபையினர் மெய்சிலிர்த்தனர்.
மன்னன் தொடர்ந்தான்:
“அந்த வெற்றியை மாபெரும் தூண் ஒன்று நிறுவி அதில் பொறிக்கச் செய்வேன்… இது சத்தியம்”
சபை அமைதி இழந்தது..
ஆரவாரம் அடைந்தது..
யசோதர்மன்:
“இந்த வெற்றிக்காக நான் இன்னொரு முயற்சி செய்துள்ளேன்.. நரசிங்ககுப்தனை நான் சந்தித்திருக்கிறேன். குப்தா நாடு இன்று சிறியதாக இருந்தாலும் அவனது மனம் பெரியது…திடமானது.. ஸ்கந்தகுப்தன் தொடங்கியதை முடிவுக்குக் கொண்டுவர அவன் துடித்ததை நான் கண்கூட பார்த்திருக்கிறேன். அவன் தாய் மகாராணி இந்த விஷயத்தில் பெரும் உறுதியோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பியிருக்கிறேன்”
ஆஹா… ஆஹா … என்று ஆரவாரம் சபையில் அலை மோதியது..
சில காரியங்கள் நடக்கவேண்டும் என்றால் .. அதற்குத் தேவையான அனைத்தும் தானே சேர்ந்து வரும்…
அதுவும் அன்றே நிகழ்ந்தது!
மந்திராலோசனை கதவு மெல்லத் திறந்தது..
படைத்தலைவன் ஒருவன் உள்ளே நுழைந்து மன்னனின் காதில் ஏதோ சொன்னான்…
மன்னன் முகம் மலர்ந்தது..
“மந்திரிகளே … என் ஓலைக்கிணங்கி …குப்த மகாராணியும்… குப்த சேனாதிபதியும் வந்திருக்கிறார்கள்…வீரனே… உடனே அவர்களை அழைத்து வா”.
இருவரையும் ராஜ மரியாதையுடன் வரவேற்று ஆசனத்தில் அமரவைத்தான்.
மகாராணி:
“யசோதர்மா ! உனது வீரத்தையும் துடிப்பையும் நான் நன்கு அறிவேன்… சரித்திரத்தில் முக்கியக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.. நாம் – குமாரகுப்த சக்கரவர்த்தி மற்றும் ஸ்கந்தகுப்த சக்கரவர்த்தி போல பெரும் சக்தி கொண்டவர்கள் அல்ல. இருந்தாலும் நாம் இணைந்து செயல் பட்டால் ஹூணர்களை இந்தியாவிலிருந்து ஒரேயடியாகத் துரத்த முடியும்…”
யசோதர்மன் :
‘மகாராணி! எங்கள் எண்ணமும் அதுவே… தங்கள் சேனாபதியுடன் சேர்ந்து நாங்கள் திட்டமிடுவோம்…சரித்திரத்தில் ஹூணர்கள் என்ற பெயர் இனி இருக்கக்கூடாது.”
திட்டமிட்டபடி.. குப்தர் படை கிழக்கிலிருந்து மிஹிரகுலனின் படையைத் தாக்கியது.
அதே நேரம் யசோதர்மனின் படை தெற்கிலிருந்து தாக்குதல் தொடங்கியது.
இந்த கிடுக்கிப்பிடியில் ஹூணர்கள் சிக்கி சின்னாபின்னமாகினர்.
யசோதர்மன் வாள் ஹூணர்களை கொன்று குவித்தது.
ஈசல் கூட்டத்தை நெருப்பு அழிப்பது போல ஹூணர்கள் மாண்டனர்
மிஹிரகுலன் ராக்ஷசன் போல் போராடினான்.
ராம-ராவண யுத்தம்போல தோற்றமளித்தது.
முடிவில் .. மிஹிரகுலன் – யசோதர்மன் தாக்குதலில் பெருங்காயமுற்று வீழ்ந்தான்.

(யசோதர்மன் – மிஹிரகுலன் சண்டைக் காட்சி)
யசோதர்மன் மிஹிரகுலனைஅச் சிறைப்பிடித்தான்.
ஹூண சைன்னியம் ஒழிந்தது…
எஞ்சியது காஷ்மீர் பகுதிக்கு ஓடி ஒளிந்தது…
மாண்டசோர் சிறையில் மிஹிரகுலன் அடைக்கப்பட்டான்.
மாதம் ஒன்று சென்றது.
அரண்மனையில் யசோதர்மன், நரசிங்ககுப்தன், அவன் தாய் மகாராணி பெரும் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
கொண்டாட்டம்!
கும்பலே கொண்டாட்டம்!
யசோதர்மன் மிஹிரகுலனை சிறையிலிருந்து கொண்டு வந்து அரண்மனையில் நிறுத்தியிருந்தான்.
கைகள், கால்கள் கட்டப்பட்டுத்- தூணில் கட்டப்பட்டிருந்தன.
உடலெங்கும் காயங்கள்.
தவறு.
காயங்களில் உடல் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அவ்வளவு காயங்கள்.
யசோதர்மன் அவனிருக்கும் இடத்தை நெருங்கினான்.
அவன் பெரும் தலையில் தனது சக்தி கொண்ட கை வைத்து அழுத்தினான்.
அவன் தலை குனிந்தது.
யாருக்கும் தலை குனியாத அந்த ராக்ஷஸத் தலை குனிந்திருந்தது.
யசோதர்மன்:
“சபையோரே, குப்தமன்னரே, மகாராணி அவர்களே!
நமது வெற்றியை இன்று தூண் ஒன்றில் பறைசாற்றிக் கல்வெட்டாகக் குறிக்கிறேன்.”
யசோதர்மனின் ஒரு கல்வெட்டு இவ்வாறு குறிப்பிடுகிறது :
“ஸ்தானுவைத் (சிவபிரான்) தவிர,வேறு எவர் முன்பும் தலை வணங்காத மிஹிரகுலன்..இன்று யசோதர்மன் முன் அவன் தலை சாய்கிறது” .

(யசோதர்மனின் மாண்டசோர் கல்வெட்டு)

(யசோதர்மனின் மாண்டசோர் கல்வெட்டு)
யசோதர்மன் :
“வெற்றியைக் கொண்டாடும் இந்நாளிலே…
இந்தக் கொடியவனுக்குத் தகுந்த தண்டனை தர விழைகிறேன்.
என்ன தண்டனை வழங்கலாம்”
‘மரணம்… மரணம்… ‘ – என்று சபையோர் முழங்கினர்.
யசோதர்மன்:
‘ உத்தமம். இந்தகிக் கொடியவன் மிஹிரகுலனை சிரச்சேதம் செய்ய ஆணையிடுகிறேன்!”
சபையில் ‘ஆஹா.. ஓஹோ ‘ என்று கோஷம் பொங்கியது.
மகாராணி முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை.
சோகம்தான் இருந்தது.
எழுந்தாள்.
“யசோதர்மா! நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மிஹிரகுலன் போரில் மாண்டிருந்தால் அது சரி. இன்று அவன் காயப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய் … செத்த பிணத்தைப்போல இருக்கிறான். இவனை சிரச்சேதம் செய்வது கீழான படுகொலை. இதை செய்வது நமக்குத் தகுமா?
நாம் ஹூணர்களல்ல.. நமது கலாசாரம் இந்தக் கொலையை அனுமதிக்காது”
அவள் குரல் பணிவாகவும் அதே சமயம் திட்டவட்டமாகவும் இருந்தது.
யசோதர்மன்: “மகாராணி… உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்… மிஹிரகுலன் இரண்டு மாதம் சிறையில் இருந்து உடல் சற்று நலமானதும்… காஷ்மீருக்கு அப்பால் நாடு கடத்துகிறேன்”
சில மாதங்கள் கழித்து மிஹிரகுலனை யசோதர்மன் விடுதலை செய்தான்.
மிஹிரகுலன் காஷ்மீரத்தின் மன்னனைக் கொலைசெய்து அரியணையைக் கவர்ந்து – காந்தாரத்தைத் தாக்க முற்பட்டான்.
ஒருசில மாதங்களிலே அவன் தனது காயங்கள் காரணமாகவே காலமானான்.
அத்துடன் ஹூணர்கள் இந்திய சரித்திரத்திலிருந்து மறைந்தனர்.
ஒரு சில வருடங்களில் யசோதர்மன் தனது நாற்பது வயதில் காலமானான்…
மாளவ அரசும் மெல்ல அழிந்தது…
நரசிங்ககுப்தனுக்குப்பிறகு…பானுகுப்தா, குமாரகுப்தா III , விஷ்ணுகுப்தா … என்று பத்து வருடங்கள் கடந்தது. அந்த அரசர்கள் ஆண்டபின் …
குப்த ராஜ்யமும் அழிந்தது…
பொற்காலம்… போர்க்காலமாயிற்று…
‘சரித்திரம் படித்து என்ன பிரோயஜனம்’ – என்று பலர் நினைப்பதுண்டு.
அரசியலாளர்கள் சரித்திரத்திலிருந்து படிக்கவேண்டிய பாடங்கள் பல உண்டு.
இந்த ‘யசோதர்மன்’ சரித்திரத்தில் அறியப்படவேண்டிய பாடம் என்ன?
குமாரகுப்தன், ஸ்கந்தகுப்தன் சாதிக்க முடியாததை யசோதர்மன் எப்படிச் சாதித்தான்?
கூட்டு முயற்சி இருந்தால் எந்த எதிரியையும் வெல்லலாம்.
இந்திய மன்னர்கள் ஒற்றுமையாக இருந்தால் வெளிநாட்டு எதிரிகள் ஒன்றும் செய்யமுடியாது..
அந்த ஒற்றுமை இல்லாததால் – சரித்திரத்தின் பாடத்தை மறந்ததால்– பின்னாளில் வெளிநாட்டு அரசுகள் இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்தனர்.
இனி என்ன நடந்தது… காலம் பதில் சொல்லும்… சரித்திரம் பேசும்…காத்திருப்போம்…
நன்றி:
https://www.jatland.com/home/Yasodharman
https://en.wikipedia.org/wiki/Eran_boar_inscription_of_Toramana
https://kalvisolai.files.wordpress.com/2012/12/tet-paper-2-history-7th-kc.pdf
http://www.ensyklopedia.com/purugupta-of-gupta-dynasty-step-brother-and-successor-of-skandgupta-467-ad-473-ad/
https://en.wikipedia.org/wiki/Yashodharman