கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

இசைப் பிரியர்களுக்கு டிசம்பர் மாதம் எப்படியோ, அப்படியே புத்தகப்பிரியர்களுக்கு ஜனவரி மாதம் – இவ்வருடமும் புத்தகக் கண்காட்சி YMCA மைதானத்தில் கோலாகலமாக நடக்கிறது. இந்த 42 ஆவது கண்காட்சியில் 800க்கும் அதிகமான அரங்கங்கள், இலட்சக் கணக்கான புத்தகங்கள், ஆடியோ புக்ஸ் இத்தியாதிகள்.

எல்லா அரங்குகளிலும் அநேகமாக எல்லா பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கின்றன. பெரிய பதிப்பகங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில் விற்பனை செய்கின்றன – எல்லோர் கைகளிலும் ஏதாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் – மகிழ்ச்சியான வாசகர்கள்!

பிரபல எழுத்தாளர்கள், அரங்குகளில் வாசகர்களுடன் அளவளாவிக் கொண்டும், புத்தகங்களில் கையொப்பம் இட்டுக்கொண்டும், புத்தகங்கள் வாங்கிக்கொண்டும் உலா வருகிறார்கள்!

முகநூல் நண்பர்கள் நேரில் முகம் பார்த்துப் பேசி மகிழ்கிறார்கள்.

ஆங்காங்கே, சிறுசிறு கூட்டங்களில் புதிய புத்தக வெளியீட்டு வைபவங்கள் நடந்தவண்ணமிருக்கின்றன.

ஊடகங்கள், பிரபலங்களையும், வாசகர்களையும் பேட்டி எடுப்பதும், ‘வீடியோவில்’ பிடிப்பதும் இடையிடையே நடந்துகொண்டிருக்கின்றன!

துணை இயக்குனர், எழுத்தாளர் சரசுராம் அவர்களின் ‘ராஜா வேசம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா அரங்கு 49ல் நடந்தது. இயக்குனர் சற்குணம் வெளியிட முதற்பிரதியை நான் பெற்றுக் கொண்டேன் – மிக்க மகிழ்ச்சியுடன்!

Zero Degree Publishing (எழுத்து பிரசுரம்) அரங்கில் அமர்ந்துகொண்டு, நேரத்தை வீணாக்காமல் ப்ரூஃப் கரெக்‌ஷன் செய்து கொண்டிருந்த எழுத்தாளர் சாருவுடன் சில நிமிடங்கள் – அவரது ‘நாடோடியின் நாட்குறிப்புகள்’ அவர் கையொப்பமிட்டு வாங்கிக்கொண்டேன்!

நற்றிணையில் எம்.எல். (வண்ணநிலவன்), ஆகாயத் தாமரை (அசோகமித்திரன்), மகா நதி (பிரபஞ்சன்), மற்றும் எஸ் ரா வின் சாகித்திய அகாடமி விருது பெற்ற ‘சஞ்சாரம்’, சுதாங்கனின் ‘இன்று’ டன் ‘நான்’, ஆ.மாதவனின் ‘மொழிபெயர்ப்புக் கதைகள்’, ‘சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ’, வேணு வேட்ராயனின் ‘அலகில் அலகு’, பரிபாடல் (புலியூர்க்கேசிகன்) என்னுடன் சேர்ந்து கொண்டன – இது முதல் சுற்று!

இரண்டாவது சுற்றில், ‘கடல்புரத்தில்’, ‘தெரிந்த பாரதம், தெரியாத பாத்திரம்’ (இந்திரா சவுந்தர்ராஜன்), ’முற்றுப்பெறாத தேடல்’ (லா.ச.ரா), சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மூன்றாம் தொகுதி), விருட்சத்திலிருந்து, ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்’ (அரவிந்த் சுவாமிநாதன்), ‘ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்’ (அழகிய சிங்கர்) புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன்!

இவை தவிர, கிருஷ்ணா கிருஷ்ணா (இ.பா), சிதம்பர நினைவுகள் (கே.வி.ஷைலஜா), பீரோவுக்குப் பின்னால் (பாக்கியம் ராமசாமி), ‘சிவப்பு ரிக் ஷா’ (தி.ஜானகிராமன்), ‘நிறக்குருடு’ (சுதாகர் கஸ்தூரி) ஆகியவையும் நட்புகளுக்குக் கொடுப்பதற்காக!

விருட்சம் அரங்கில் ‘சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்’ புத்தகத்தை அறிமுகம் செய்து ஓரிரு வார்த்தைகள் நான் பேச, சிங்கர் அதை ஓளிப்பதிவு செய்தார். சுற்றிலும் எழுந்த பேச்சு, மைக் அறிவுப்புகள் மற்றும் சப்தங்கள் பதிவு செய்யமுடியாமல் படுத்தவே, பிறகு தனியாக பதிவு செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம்! தப்பித்தோம் என பெருமூச்சு விடும் அன்பர்கள், ‘தேடும் புத்தகம் கிடைக்காமல் போகக் கடவது’ என சபிக்கப்படுகிறார்கள்!

புத்தக ஆசையும், வாசிக்கும் காதலும் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் போலும் – புத்தகங்கள் உள்ளவரை நாம் தனியாக இல்லை என்ற உணர்வு இருப்பதென்னவோ உண்மை!

வெளியே அமைக்கப்பட்டிருந்த பெரிய அரங்கத்தில் நாள்தோறும் சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள் என நடந்தவண்ணம் இருக்கின்றன!

கண்காட்சியில் சுற்றிய களைப்பு தீர, வெளியே ஸ்டால்களில், காபி, டீ. ஜூஸ், ஸ்னாக்ஸ் கிடைக்கின்றன – எப்போதும்போல் அங்கு எல்லா அரங்குகளையும் விட அதிகக் கூட்டம்!

1977 ல் முதன்முதலில் ஆரம்பித்தது புத்தகக் கண்காட்சி – காயிதே மில்லத் கல்லூரியில் பன்னிரண்டே ஸ்டால்களுடன் – 42 வருடங்களாகப் புத்தகக் கண்காட்சியில், விடாமல் கலந்து கொண்டிருக்கும் திரு பாலசுப்பிரமணியன்பற்றிய முகநூல் பதிவில் ஆர் வி எஸ் (பினாக்கிள் பதிப்பகம்) !

“தமிழர் புத்தகங்கள்” ஓர் அறிமுகம் – தொகுப்பாசிரியர் ‘சுப்பு’ (விஜயபாரதம் பதிப்பகம்) – அருமையான இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு வாசகனும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.