இன்பமெனும் நினைவூற்றை யெழுப்பிவிடும் மென்காற்றே
துணையின்றி நிற்குமெனைக் கேலிசெயு மிளந்தென்றல்
அன்பே ஆரமுதே கற்கண்டே நற்கனியே
அன்னநடை மின்னிடையா லுளங்கவருந் தண்மயிலே
பொன்னே பொற்றொளிரே நெறிதவறாப் பெட்டகமே
பேதையெனைப் பித்தனாய்ச் செய்துவிட்ட பெண்ணெழிலே
என்றெல்லாங் கூறிடவே துடிக்கின்ற வுள்ளத்தை
என்னருமைக் கன்னியிடம் நீகூற மாட்டாயோ!
தவிப்புதருந் தனிமை எங்குமிலை இனிமை
தொலைதூரங் காதலியும் போவதிது புதுமை
புவனமதை எழிலாக்கும் வெண்ணிலவைக் காண்கையிலே
பளிங்குபோல் சிரிக்குமென் னல்லிமுகம் பார்க்கின்றேன்
உவகையொடு புத்தகமும் கருத்துடனே படிக்கையிலே
உளங்கவரும் மீன்விழியாள் பார்வையினா லழைக்கின்றாள்
செவ்வியதாய் கண்மூடி அரைத்தூக்கம் போடுகையில்
கனவில்வருங் கன்னியவள் தொட்டுதொட்டு எழுப்புகிறாள்!
என்னிதயங் கொளைகொண்ட பெண்மானைப் பிடித்தற்கு
இவ்வுலகில் பயின்றுவரும் போலீஸின் துணையில்லை
என்னுயிரின் நிம்மதியைக் குலைத்துவருங் கன்னிக்கு
ஆயுள்சிறை கொடுத்திடவே நீதிபதி இங்கில்லை
தனிமையிலே மனம்நோக படுத்திருக்கும் வேளையிலே
தண்கையு மென்னுடலில் பட்டதுபோ லிருந்திடவே
அன்புடனே ஆவலொடு அவள்கரத்தைப் பிடித்தற்கு
எழுந்தெழுந்து பிரமையென்று ஏமாற்றம் கொள்கின்றேன்!
கயல்விழி கொடியிடை நன்னுதல் பூங்குழல்
தண்கரம் பவளவாய் மென்னுடல் மலரிதழ்
மயக்குநல் மதிமுகம் ஈர்த்திடும் முன்னழகு
தயங்காது என்நினைவி லகலாது நின்றிடவே
ஐயகோ பூங்கொடியே சோதனைகள் போதாதோ
என்மனதை வாட்டுதலும் உனக்கென்ன விளையாட்டோ
மெய்யன்பன் ஓர்கணமும் பொறுத்திடவே முடியாது
தேன்சுவையு மளித்திடவே யோடியோடி வாராயோ!
போதுமுன் சோதனை நான்படும் வேதனை
பைங்கிளியே என்னருகு விரைந்துநீ வாராயோ
பேசுதற்கு பலவுண்டு தேன்குரலைத் தாராயோ
பிர்ந்துநிற்குங் கொடுமைதனை யழித்திடவே வாராயோ!