உழுகிற மாடு வயலை – தன்
உழைப்பால் உயர்த்திப் பார்க்கும்
அழகிய எங்கள் கிராமம் – மலை
அருகில் அமைந்த சொர்க்கம்.
கொக்குடன் மைனா, கிளிகள் – சிறு
குருவி பறக்கும் வயல்கள்
திக்குகள் எங்கும் இளமை – நமைத்
தேடி அழைக்கும் எழில்கள்.
ஓட்டது கூரை மேலே – தினம்
துள்ளிக் குரங்கு ஓடும்
வீட்டது பின்னே நன்கு – குளிர்
வீசும் வாய்க்கால் பாயும்.
பம்பரம், கோலி, கிட்டி – கபடி
பந்தும் ஆடும் இளையோர்
கம்பினைச் சுற்றி வீச -உயிர்க்
காதல் புரிவர் வளையோர்.
பண்டிகைக் கால மெல்லாம் – இசைப்
பண்ணும் கூத்தும் சேர்த்து
கண்களுக் கின்பம் கூட்டும் – நற்
கலைஞர் நிறைந்த நல்லூர்.
அலைநிறை பொருநை நதியில் – மீன்
அலையும் காட்சி கண்டால்
அலைகிற எண்ணம் நிற்கும் – உள்
அமைதி மேலும் ஊறும்.
நெல்லிடை ஓங்கும் செல்வம் – அங்கு
நித்தம் வாசம் செய்யும்
கல்லிடைக் குறிச்சி ஊரை – நாம்
கல்யா ணபுரி என்போம்.