மணி மணியா சம்பா நெல்லு….
(உழவர் பாட்டு)
ஏர்பிடிச்சு மாடுகட்டி
எருவடிச்சு மண் உழுது
பதுக்கிவெச்ச வெத நெல்லால்
நாத்து வெச்சு பாத்திகட்டி
மூச்செறைக்க நீரெறைச்சு
நாள்பாத்து நடவு செஞ்சு
மழைசெதும்ப பேயணும்னு
மாரியாத்தாவ வேண்டிக்கிட்டு
கருக்கலில் வயக்காடுவந்து
கம்மாத்தண்ணி வரத்திருப்பி
உரமடிச்சு மருந்தடிச்சு
உறங்காம களபறிச்சு
பட்டினியோ பழஞ்சோறோ
பாராமலே கிடந்துண்டு
கதிர்முத்தி தல சாஞ்சா
காவலுக்குத்தானிருந்து
கருத்த மேகம் பாத்துப்புட்டா
பதபதச்சு நாள்குறிச்சு
கருப்பசாமி துணைவேண்டி
களமெறங்கி வாளெடுத்து
கதிரறுத்து கட்டுகட்டா
இடுப்பொடிய கதிர்சுமந்து
களத்துமேடு கொண்டுவந்து
மாடுகட்டி போரடிச்சு
முறமெடுத்து புடைக்கயிலே
தங்கம்போல தகதகக்க
மணிமணியா சம்பா நெல்லு (என்)
மனசுபோல சம்பா நெல்லு
பதரில்லாத சம்பா நெல்லு
அளஞ்சளஞ்சு சம்பா நெல்லு
அளந்தளந்து மூடகட்டி
அள்ளிக்கொண்டு போகையிலே
கெடய்க்கும் சுகம் வெளங்கலியே
பட்டபாட்டுக்கு நட்டமில்லாம
வெலைகிடைக்குமா தெரியலியே
கந்துவட்டி கைமாத்து
பாங்குல வாங்கின நகைக்கடனு
ஆளான புள்ளய கட்டிக் குடுக்கணும்
ஆம்புளப்புள்ளய படிக்க வைக்கணும்
கருப்பசாமிக்கு படியளக்கணும்
மாரியாத்தாளுக்கு படையல் செய்யணும்
மிஞ்சுமா என்னமும்
ஏங்குதே ஏம்மனம்
சாப்பிட ஒக்காந்தா
சோறு எறங்கல
பெஞ்சாதி சொல்லுது
வீணாக்காதே சோறன்னு!?!