நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
ஊறுகாய் உற்சாகம் !
ஊறுகாய் என்றாலே ஏதோ ஊறுதே !
ஏதேதோ ஞாபகங்கள் வந்து சேருதே !
தொட்டுக்க ஒன்றிருந்தால் எதுவும் இறங்குமே !
தொடத் தொடத் தொடரும் ஊறுகாய் பந்தமே !
தயிர் சாதம் என்றாலே ஊறுகாய் வேண்டும் !
சளக் பொளக்கென்று உள்ளே செல்லுமே !
உப்புமா பொங்கல் என்று அனைத்திற்குமே
ஊறுகாய் தொட்டுக் கொண்டால் ருசியும் கூடுமே !
அப்பப்பா எத்தனை வகை ஊறுகாய்களே !
அன்னை கையால் நானும் உண்ட ஊறுகாய்களே !
சின்ன வயதில் தின்று தீர்த்த கவளம் எத்தனை ?
கூடவே துணைக்கு சென்ற ஊறுகாய்கள் எத்தனை !
எண்ணெய் மாங்காய் என்ற ஒரு எளிய ஊறுகாய் !
எந்த கல்யாண விருந்தென்றாலும் இருக்கும் ஊறுகாய் !
சின்னச் சின்ன துண்டாக சுவைத்து உண்ணுவோம் !
சிறு பிள்ளை போல் கடித்து ரசித்து தின்னுவோம் !
வடு மாங்காய் என்றால் நாவில் எச்சில் ஊறுமே !
வெடுக்கென்று கடித்துக் குதைத்து சாப்பிடுவோமே !
தொக்கு மாங்காய் என்றால் கண்ணில் நீரும் ஊறும் !
சுவைக்க சுவைக்க கூட இரண்டு கவளம் போகும் !
மாகாணி என்ற ஒரு மகா ஊறுகாய் !
மாகாளி வந்தாலும் எங்கே என்பாள் !
போகாத ஊருக்குப் போக வேண்டாம் !
மாகாணி இருந்தால் வேறு எதுவும் வேண்டாம் !
நெல்லி ஊறுகாய் நாவில் ஊறும் ஊறும் !
உடல் மனதில் உற்சாகம் சேரும் சேரும் !
கோங்குரா சட்னி என்று ஆந்திரம் சொல்லும் !
புளிப்பும் உரப்பும் சேர்ந்த சுவை அள்ளும் அள்ளும் !
கிடாரங்காய் ஊறுகாய் என்று சொன்னால் போதுமே –
அடங்காது போகும் என் ஆசைத் தீயுமே !
நார்த்தங்காய் சாதாரண காயல்லவே !
உப்பு உரப்பு என்று பற்பல சுவை காட்டுமே !
வேப்பிலைக் கட்டி சிறிதளவு இருந்தால் போதும் !
தட்டு நிறைய சாதம் கூட காலியாகுமே !
பச்சை மிளகு ஊறுகாய் பாட்டிலைக் கண்டால்
பக பகவென அடி வயிற்றில் பசியைக் கிளறுமே !
எத்தனை வித மனிதர்கள் இந்த உலகினில் உண்டோ –
அத்தனை வித ஊறுகாய்கள் நம் ஊரினில் உண்டு !
அன்னை போல ஒரு தெய்வம் உலகில் உள்ளதோ !
அவளின் கை உணவு நமக்கு அமிர்தம் அல்லவோ !