உலக மென்னடா பாழு முலகம்
உறவு என்னடா பாசமில் லுறவு
உயிர்க ளென்னடா நஞ்செனு முயிர்கள்
நட்பு என்னடா புறத்தின் நட்பு?
பணமெனும் பேயை இறைவன் படைத்தான்
பசிக்கும் மாதை கூடவே வைத்தான்
‘பணமா நெறியா’ போட்டி போட
பணமே வெல்லும் பாழும் உலகம்!
உற்றார் என்னும் எண்ணமும் இல்லை
உரியவர் என்னும் பந்தமும் இல்லை
துன்புறு முற்றார்க் குதவியும் செய்யா
தன்னலங் கொண்ட பாசமில் லுறவு!
இருப்பதை வைத்து மகிழ்வான் இல்லை
இணைந்து சென்று வாழ்வான் இல்லை
திறனைப் பார்த்து வஞ்சம் கொள்ளும்
உயிர்க ளென்னடா நஞ்செனு முயிர்கள்!
செல்வம் கண்டால் வாயைத் திறப்பான்
செல்வம் இலையேல் தூரவே நிற்பான்
நட்பின் உயிராம் உள்ளன் பில்லா
நட்பு என்னடா புறத்தின் நட்பு!