“கவனிக்க வில்லையா? கண்டு கொள்ள வில்லையா?” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Related image

தலைவலி என்று  முரளி, அம்மா அப்பாவுடன் டாக்டரிடம்  வந்தான். அதிகமான உபாதை, பரீட்சை இருப்பதாகக் கூறியதில் தற்போதைய நிவாரணத்துக்கு மருந்து கொடுத்து, ஒரு வாரத்திற்குப்பிறகு வரச்சொன்னார். அவர்கள் சென்றபிறகு, நான் டாக்டர் அனுப்பி இருந்த க்ளையன்ட்பற்றி அவருடன் ஆலோசிக்க நுழைந்தவுடன், மூவரையும் பார்த்தாயா எனக்கேட்டு, அவர்கள் என்னைப் பார்க்க நேரிடும் என்று முன்னுரைத்தார்.

 

ஒரு வாரத்துக்குள் முரளி, அவன் அம்மா வித்யா, அப்பா சுந்தர் மூவரும் திரும்பிவந்தார்கள். முரளிக்குத் தலைவலி அதிகரித்ததாகத் தெரிவித்தனர். தலை முழுவதும் வலி என்றான், வகுப்பில் கவனிக்க இயலவில்லை, பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள்தான். எப்பொழுதும் செய்வதுபோல் டாக்டர் பல கோணங்களிலிருந்து அவர்களைக் கேள்விகள் கேட்டதில் முரளியின் தலைவலிக்குக் காரணம் உடம்பு உபாதை இல்லை, வேறு ஏதோ என்று கணித்தார்.  ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரான என்னை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார். சூழ்நிலை சிக்கல்கள், மனச் சஞ்சலத்தினாலும் தலைவலி வரலாம் என எடுத்து விவரித்தார். சுந்தர், வித்யா ஒப்புக்கொள்ள மறுத்ததும் இதில் வெட்கப்படவோ, அதிர்ச்சி அடையவோ ஏதும் இல்லை என்று புரியவைத்தார், பிரச்சினைகளுக்கு விடைதேட இதுவும் ஒரு வழி என்றார். தயங்கியதால், யோசித்து, முடிவெடுக்கச் சொன்னார்.

 

அடுத்த நாளே சங்கோசம் இருந்தும் மூவரும் டாக்டரிடம்  வந்தார்கள். அவர்களை ஊக்குவிக்கக் கைப்பேசியில் என்னை அழைத்து முரளிக்கு நேரம் குறித்து, “ஜஸ்ட் ஒன் லுக்” எனச் சொன்னார். அவர்களின் சங்கோசத்தைக் கையாளுகிறார் எனப் புரிந்துகொண்டேன்.

 

மூவரும் வந்தார்கள். முரளிக்கு 13 வயது, உயரமான தோற்றம், பருமன், வாராத தலை. கையைப் பிசைந்துகொண்டிருந்ததை அப்பா சுந்தர் தட்டிவிட்டு நிறுத்த முயன்றார். சுந்தர் டிப்-டாப்-ட்ரிம், நெற்றியில் சந்தனப் பொட்டு. அம்மா வித்யா, இடுப்பு வரை ஜடை, அதைப் பின்னி, பூ வைத்திருந்தாள், கஞ்சி போட்ட கச்சிதமான சேலை. இதுவரையில் பார்த்த டாக்டர்களின் சீட்டுகளை என் முன் வைத்தாள்.

 

முரளி தனக்குத் தலைவலி ஆறாம் வகுப்பிலிருந்து இருப்பதாகச்சொன்னான். இந்த வருடம் வகுப்பறைக்குள் போனதுமே வலி தொடங்குவதால், கவனம் சிதறியது, கணக்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம் வகுப்புகளில் வலி அதிகரித்தது. எந்த ஆசிரியரும் ஏனென்று கேட்கவில்லை.  மதிப்பெண்கள் குறைந்ததில் கடுகளவும் வேதனை இல்லை என்றான். சலிப்பை, அளவில்லா கோபத்தைப் பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிப்பதாகக் கூறினான்.

 

சுந்தர், முரளி இரண்டே நிமிடத்தில் சந்தியாவந்தனம் செய்வதையும் எவ்வளவு சொல்லியும்  நெற்றிப்பொட்டு வைத்துக் கொள்ளாததையும் தனக்குச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றார். இந்த வயதிலேயே இவ்வளவு “சோம்பேறி” என்றார். வித்யா இதை ஆமோதித்து, முரளி உடை, சாப்பிடும் விதம் எரிச்சல் மூட்டுவதாகச்சொன்னாள்.

 

மொத்தத்தில் அம்மா அப்பா இருவரும் தலைவலியைத்தவிர மற்றவற்றைப்பற்றிப் பேசினார்கள்.

 

கடந்த இரண்டு வருடமாகப் பெரிய வகுப்பு என்பதால் விளையாடுவதற்குப் பதிலாக முரளியை வீட்டுப் பாடம், டியூஷன் போக வைத்தாள் வித்யா.  மதிப்பெண்கள் அதிகரிக்கவில்லை.  முரளியால், நடத்தப்படும் பாடங்களில் கவனத்தைச் செலுத்தமுடியவில்லை. மனதில் ஒரே போராட்டம். இதுவும் மார்க் குறையக் காரணியானது. என்ன ஏது என்று பெற்றோர் இருவரும் விசாரிக்கவில்லை.

 

தலைவலி வந்ததிலிருந்து டியூஷன் கட், டிவி பார்த்தான். இதைச் சொல்லும்போதே துள்ளல், சந்தோஷம் ததும்பியது.

 

சுந்தர் கறாரான பேர்வழி. முரளி எல்லாவற்றையும் முறையாகச் செய்யவேண்டும். ஏமாற்றக் கூடாது என விரும்பினார். இல்லத்தரசியான வித்யா பிள்ளை நன்றாக மதிப்பெண் எடுத்தால் மட்டுமேதான் தன் பொறுப்பைச் சரிவரச் செய்வதாக எண்ணினாள்.

 

முரளியின் எடை ஏறியது; “குண்டு”, “தொந்தி” எனக் கேலியாக அழைப்பதைப்பற்றி சர்வசாதாரணமாகக் கூறினான். வெட்கமாக இருந்தது ஆனாலும் சகித்துக் கொள்வதாகக்கூறினான். விசித்திரமான பதில்! மேலும் ஆராய்ந்தேன்.

 

முரளி ரகசியமாக இதுவரை யாரிடமும் சொல்லாத ஒன்றை அருவருப்புடன் பகிர்ந்தான். இரண்டு வருடமாக அவன் மாமா வேலைக்காக அவர்களுடன் தங்க நேர்ந்தது. மாமாவின் அருகில்போக, பயம் கலந்த கூச்சம் இருப்பதாகச்சொன்னான். முரளியை ஆசுவாசப்படுத்தி நடந்ததைச் சொல்லச்சொன்னேன். மாமா அவனை வருடித் தருவது, தொடும் இடம், விதங்கள், கொஞ்சுவது அனைத்தும் யாரும் இல்லா நேரங்களில்தான் செய்வாராம். முரளிக்கு மாமாவிடமும், தன்மேனியின் மேலும் அருவருப்பு வந்தது. முரளியின் எடை அதிகரிப்பு மாமாவிற்குப் பிடிக்கவில்லை. முரளி தன் எடையைக் கூட விட்டதற்கு இதுவே காரணியாயிற்று. வித்யா அவன் சொன்னதை மறுத்துவிட்டாள். என்ன செய்வது என முரளிக்குப் புரியவில்லை. விழித்தான்.

 

இதை அவனே கையாளலாம் என முரளியை ஊக்குவித்தேன். மாமா, போன்றவர்களை எதிர்கொள்ள, கண்களைப் பார்த்து “நோ”,“இப்படிச் செய்வதால் என்னைக் காயப்படுத்துகிறீர்கள்”, என்பதுபோல் பல செயல்முறை வழிகளைப் பட்டியலிட்டோம். முரளி பயில்வதற்கு ரோல் ப்ளே உபயோகித்துச் செய்யச்செய்ய, அவனுக்கு மனதிடம் கூடியது. சிறிது சிறிதாகப் பயின்ற கருவிகளைப் பயன்படுத்தி தன்னைப் பாதுகாக்கக் கற்றுக்கொண்டான். மாமா கோபப்பட்டு, என்னை வந்துபார்த்துக் கேள்வி கேட்டுப் பயமுறுத்த முயன்றதும், அவருக்கு மனநல சிகிச்சை மிகத் தேவை என்பதைத் தெளிவுபடுத்தினேன். அப்படிச் செய்யவில்லை என்றால் புகார் தரவேண்டி வரும் என எச்சரிக்கை செய்தேன். பிறகு மாமா அதை முறையாகச் செய்துவருவதைக் கேள்விப்பட்டேன். முரளி தன்னுடைய இக்கட்டான, அவதி சூழ்நிலையில் இருப்பதை வீட்டினர் பொருட்படுத்தவில்லை என வேதனைப்பட்டான்.

 

முரளி என்னிடம் உரையாடும்போது திக்கிப் பேசுவதைக் கவனித்தேன். முதலில் இல்லாதது இது என்ன என்றேன். மாமா அவனிடம் தவறான முறையில் பழகியபின் இப்படி என்றான். அவன் வகுப்புத் தோழன் திக்கிப் பேசுவதால் பரிதாபப்பட்டு உதவுவார்களாம்.  திக்கினால், தன்னையும் கேட்டு உதவுவார்கள் என எண்ணி (ஏங்கி?) அதற்காகவே பழகிக்கொண்டதாகக் கூறினான். பரிதாப நிலை!

 

அடுத்தது உடற்பயிற்சிபோல் மனத்திட வளர்ப்பை ஆரம்பித்தேன். அவனுடைய பல வர்ணனைகளை எடுத்துக்கொண்டோம். ஒவ்வொன்றிலும் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறித்துக்கொண்டோம். அப்பொழுதெல்லாம் விடிவு தெரியாததால் அவன் கையாண்ட விதங்களை வரிசைப்படுத்தினோம். இப்படி ஏன் நடந்துகொண்டான் என்றும், மாற்று வழிமுறைகளையும் பல வாரங்களுக்கு ஆராய்ந்தோம்.

 

இதன் எதிரொலியாக முரளியின் எடை அதிகரிப்பை அவன் துணிச்சலாகப் பார்க்க ஆரம்பித்தான். எடையினால்மட்டும் தான் மாமாவைப் போன்றவர்களைத் துரத்துவதா என்ற கேள்வியை எழுப்பினேன். மற்றவர்கள் தன்னை தாழ்வாகப் பார்ப்பதை அறிந்தான். பெற்றோர், ஆசிரியர், தோழன் எல்லோரும் மதிப்பெண்  அதிகரிக்கச்சொன்னார்கள். அப்பா இதைச்செய், அப்படிஇரு என்றார், அம்மா மார்க்கில்மட்டும் குறியாக இருந்ததால் விடியற்காலையில் படிக்க வைப்பாள். பெற்றோர் ஆதரவு காட்டவில்லை, அவன் உணர்வை மாமா புண்படுத்துவதை அறியவும் இல்லை.

 

வீட்டிற்கு வருவோர் போவோரிடம்,  “முரளி மாதிரியான சோம்பேறி பார்க்கமுடியாது” என்று எப்போதும் சொல்வதால் அவனுக்கு அப்படியே இருக்கத்தோன்றியது.

 

இந்த தருணத்தில், டாக்டரும் நானும் அவர்கள் மூன்றுபேரிடமும் இதைப்பற்றிப் பேசினோம். டாக்டர், அவர்களுக்கு தலைவலி ஏற்படும் முறைகள், அவைகளின் மூல காரணம், எப்படி உடல்-மனம் கலவையாக இருக்கிறது என்பதை விவரித்தார். அதாவது மனதின் அவஸ்தை உடல் மொழி பேசும்.  வலிகள் என்ற உடல் மொழி நம்முள் இருக்கும் சஞ்சலத்தைக் காட்டும்.

 

கூடவே விடலைப் பருவத்தில், குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து வருவோருக்கு ஏற்படும் பல்வேறு மாற்றங்களைப்பற்றி விவரித்தோம். அதில் ஒன்றானதே “நான் யார்” என்ற தேடுதல். இதிலிருந்தே ஒவ்வொருவரின் தனித்துவம் உதயமாகும்.  இந்தப் பதிமூன்றாவது வயதில், எரிச்சல், சோம்பல், வியர்வை, பருவு, ரசாயன என்று எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் பெரியவர்கள் இதைப்புரிந்து, அனுசரித்துப்போனால் இதைக் கடந்துசெல்ல உதவும்.

 

இப்படி இல்லாமல் சுந்தரைப்போல் வற்புறுத்திச் செய்யவைப்பதில், பயனில்லை. அதற்குப் பதிலாக ஏன், எதற்காக என எடுத்துக்கூறினால் முரளி செய்வான். மாறாக இவர்களைச் சிறு குழந்தைபோல் எல்லாவற்றிற்கும் கண்காணித்து, சொல்லிக்கொண்டே இருப்பது பயனற்றது. விளக்கியதும் வீட்டில் பயிலவைத்தேன். பல வாரங்களுக்குப்பின்னர் பெற்றோரிடம் மாற்றம் தெரிந்தது.

 

முரளி அவன் வயதைப்பற்றி அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தோம். டாக்டர் எழுதிய “தலைவலி” புத்தகத்தின் பக்கங்களை, அவனுடன் படித்து தலைவலியின் உடல்-மனம்-மூளை கலவையைப் புரியவைத்தார்.

 

அடுத்தபடியாக தலைவலி, வரும் சூழலைக் குறித்துவரச்சொன்னேன். அதிலிருந்து எவ்வாறு இது அவன் சுயமதிப்பீட்டை பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டினேன். சூழலைச் சமாளிக்கத் தெரியாததால் வரும் தலைவலியைச் சட்டென்று அடையாளம் கண்டான்.

 

சுயமதிப்பைச் சரிசெய்வதற்குப் பலபேருடன் படிக்க, பேச, பழக, குழுவாகச்செய்ய நேச்சர் வாக், பர்டிங் (Birding), மலையேற்றம் (ட்ரெக்கிங் Trekking) தேர்வுசெய்தோம். இவற்றில் கூட்டாகப்போவது, பகிர்வது நேரும். உடலுக்கும் பயிற்சி நேர்ந்ததால் ஒரே மாதத்தில் வித்தியாசம் தெரிந்தது.

 

குழுவாகச் செயல்படுவதால் மற்றவர்களின் பரிந்துரைப்புகளும், அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாலும் முரளியிடம் வெவ்வேறு மாற்றங்கள் தெரிந்தது. சுந்தர்-வித்யா வியந்தார்கள், தாங்கள் சொல்லிக் கேட்கவில்லை என. இந்த வயதினருக்கு இதுதானே விசேஷம்- அவர்கள் நண்பர்கள் கூறுவதே வேதவாக்கு!

 

தன் வீட்டின் அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுடன் சனி-ஞாயிறு சைக்கிளில் போவதும் தொடங்கியது. வீட்டில் உள்ளவர்களுடன் இதையெல்லாம் செய்யாததால் சுந்தருக்கு முரளி சரியாகச் செய்வான் என்ற நம்பிக்கை பிடிபடவே இல்லை.

 

முரளி பல விதங்களில் உடல்-மனம் நலம் தரும் வழிகளைப் பின்பற்றியதால் ரசாயன மாற்றங்களில் அலுப்பைச் சலிப்பை வெகுவாக சமாளித்தான். வித்யாவே மூக்குக்குமேல் விரல்வைக்கும் அளவிற்கு மதிப்பெண்கள் அதிகரிக்க ஆரம்பித்தது.

 

இந்த மாற்றங்களைப்பார்த்து முரளி தங்களைவிட்டு விலகிவிட்டானோ எனச் சுந்தர்-வித்யா அஞ்சினார்கள். தன் தனித்துவத்தை முரளி உருவாக்குவதில் ஈடுபடுவதை இவ்வாறு கணித்தார்கள்.

 

வித்யா தான் நல்ல அம்மா இல்லை என்றே முடிவு செய்தாள். இவள் தன்  அப்பாவின் முதல் மனைவியின் மகள். அம்மாவின் மறைவிற்குப் பிறகு அப்பா மறுமணம் புரிந்தார். வந்தவள் பாசக்காரி. சின்னம்மாவை வித்யாவிற்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. அவளுடைய தாத்தா பாட்டி  இதை அவள் அம்மாவிற்குச் செய்யும் துரோகம் என அவளைக் கண்டிப்பார்கள். புது அம்மா அவளுக்கு எதைச் செய்தாலும் “ம்? சரியா இருக்கா? சந்தோஷமா?” எனத் தெளிவுபடுத்திக்கொள்வாள். இவர்களைப் பிடித்ததாலும் அவர்களின் செயலைப் பிரியமாகப் பார்த்ததாலும் நாளடைவில் வித்யாவிற்கும் அதேபோல் இருக்கத்தோன்றியது. அவளுக்கு மற்றவர்கள் உறுதி கூறினால்தான் சரி என எடுத்துக்கொள்வாள். இந்த மனப்பான்மையினால், தான் அம்மாவாகச் சரியாகச் செயல்படுகிறோமா என்ற கேள்வி அவளுக்கு மனதில் எழுந்தது. இதைத் தெளிவுபடுத்திச் சரிசெய்ய அவர்களுடன் பல ஸெஷன்கள் தேவைப்பட்டது. பிள்ளைக்காக வந்தார்கள். தங்களுடைய பல  பிரச்சினைகளைக் கண்டுகொண்டு சுதாரிக்க வாய்ப்பானது. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.