மதன் திருமணம் அவன் பெற்றோர் பார்த்துச் செய்தது தான். வாய்த்த மனைவி ரூபவதி மீது அவனுக்கு மிகவும் பிரியமும், பெருமையும் உண்டு. தனியார் ஐ.டீ. அலுவலகத்தில் வேலை செய்பவன். மற்றவர்களைப் போல் தானும் பொறியியல் முடித்துவிட்டு வேலையில் இருப்பதைப் பெரிதாகக் கருதவில்லை.
தன் ரூபவதி செய்யும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் வேலையை மிக உயர்த்தியாக நினைப்பதுண்டு. அவள் விவரிக்கும், எடுத்துச் சொல்லும் விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் அணியும் ஆடைகள், அதற்கு ஏற்றாற்போல் அலங்கரித்து, நடப்பதை ரசனையோடு பார்ப்பது வழக்கமானது.
அவர்கள் அவனுடைய பெற்றோருடன் ஒரே வீட்டிலிருந்தார்கள். இவர்கள் இருவரும் வேலையிலிருந்ததால் நான்கு வயதுடைய மகள் நிலா பெற்றோரின் கவனிப்பில் அதிகம் இருந்தாள். ஒருவருக்கு ஒருவர் அவ்வளவு பாசம்!
திடீரென ஒரு நாள், மதன் வழக்கம் போல் தன் அலுவலக பேருந்தில் வீடு திரும்பி வரும் போது நெஞ்சு அடைப்பது போல் தோன்றியது. கூடவே தூக்கி வாரிப் போட்டது. உடனே பேருந்தை நிறுத்தச் சொல்லி, இறங்கி விட்டான். ரூபவதியை கைப்பேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்லித் தான் பக்கத்தில் இருக்கும் டாக்டரைப் போய் பார்ப்பதாகத் தெரிவித்தான். அவளும் ஆலோசிப்பது நல்லது என ஆமோதித்தாள்.
டாக்டரைப் பார்ப்பதற்குள் மதன் தனக்கு என்னவாயிற்று, ஏன் இவ்வாறு நேர்ந்தது என யோசித்து, விடை கிடைக்காததால் அமைதியற்ற நிலையிலிருந்தான். டாக்டரைப் பார்த்ததும் தன் நிலையை விவரிக்க முயன்றான். சொல்ல வந்த வார்த்தைகள் சிக்கிக் கொண்டு வந்தது. டாக்டர் ஆசுவாசப் படுத்தினார். அவன் நிலையைப் புரிந்து கொள்ளப் பல கேள்விகள் கேட்டார்.
இந்த முறை ஆனது போல் எப்போதாவது லிஃப்டில், விமானத்தில், நடந்ததா என விசாரித்தார். மதன் அப்படி எதையும் தான் அனுபவிக்கவில்லை என்றதும் டாக்டர் பயப்படத் தேவையில்லை என்றார். பல முறை இப்படிக் குறுகிய இடங்களில் நேர்ந்தால் அப்பொழுது அதற்காகச் சிகிச்சை தேவைப் படும் என்றார். எதனால் அப்படி என்று மதன் கேட்க, டாக்டர், அப்படி நடந்தால் அது “க்ளாஸ்ட்ரோ ஃபோபியா” (claustrophobia)வின் அறிகுறி என்றார். இப்போதைய நிலைமைக்கு ஓரிருநாளைக்கு மாத்திரைகள் எழுதிச் சாப்பிடச் சொன்னார்.
மதன் வீடு திரும்பும் வழியிலேயே தன்னுடைய ஸ்மார்ட்போனில் க்ளாஸ்ட்ரோ ஃபோபியா பற்றி குறிப்புகளைத் தேட ஆரம்பித்தான். தற்சமயம் டாக்டரிடம் போகும் முன்னும், அதன் பின்னும் வலைப்பூ (Google) பார்த்து விளக்கம் தேடுவது, கௌண்டமணி சொல்வது போல், “இதுவெல்லாம்…சகஜம்ப்பா” என ஆகிவிட்டது. எதையோ படித்து என்னமோ புரிந்து கொள்வது, இதனால் பயன் உண்டோ இல்லையோ, துன்புறுத்தல் அதிகம்
மறுநாள் எழுந்ததும் மதன் வலைப்பூவில் படித்த குறிப்புகள் தன்னிடம் இருக்கிறதா எனக் கவனித்துப் பார்த்தே ஆக வேண்டும் என முடிவு செய்தான். கவனிக்கக் கவனிக்க,”இது இருக்கிறதோ?”, “இதுவும்?” என்று, வார முடிவில் “ஆம் எல்லாமே இருக்கிறதே” எனத் தோன்றியது. வியந்து, ஸ்தம்பித்துப் போனான். பயம், கலக்கம் மேலோங்கியது. தனக்கு க்ளாஸ்ட்ரோ ஃபோபியா உண்டு என்று தானே தீர்மானித்துக் கொண்டு விட்டான்.
ரூபவதி மதன் சொல்வதைக் கேட்டதும் வழக்கமாகப் போகும் குடும்ப டாக்டரிடம் போகலாம் என ஆலோசனை சொன்னாள். நிராகரித்து விட்டான் மதன். தான் படித்ததைப் பட்டியல்போட்டு அடுத்த வார முழுவதும் கவனிக்கப் போவதாகக் கூறினான். மறுபடியும் எல்லாமே இருக்கிறது என்ற முடிவிற்கு வந்தான். உடனே, திடீரென்று, அன்று போல் அதே பீதியை உணர்ந்தான். ரூபவதி மதனைப் பார்த்ததும் பயந்து விட்டாள். இரவை எப்படியோ கழித்தார்கள்.
மறுநாள் அவர்கள் எப்போதும் பார்க்கும் டாக்டரிடம் வந்து விவரித்தார்கள். விவரங்களைக் கேட்டவுடன் மதனுக்கு “க்ளாஸ்ட்ரோ ஃபோபியா” இல்லை என்றார். பயம் மேலோங்கி இருப்பதைப் புரிந்து கொள்ள என்னைப் பார்க்கப் பரிந்துரைத்தார்.
மதனும் ரூபவதியும் சிலை போல் உட்கார்ந்து என்னை உற்றுப் பார்த்தார்கள். நடந்ததை முழுமையாக விவரிக்கச் சொன்னேன். ஆரம்பித்தான் மதன். குறிப்பாக அந்த முதல் அனுபவத்தை உன்னிப்பாகக் கவனித்துப் பல கேள்விகள் கேட்டேன்.
ஆலோசிப்பவர்களின் அனுபவங்களை, உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொண்டு உட்கொள்வது எங்கள் கடமையாகும். இதிலிருந்து எங்களுக்குப் பல ஆதாரங்கள் கிடைக்கும், அவர்கள் அனுபவித்ததை வைத்தே அவர்களுக்குப் புரிய வைக்க உதவும். நடந்த சூழல், அதற்கு முன் நடந்தவை, அவர்களின் சூழ்நிலை (context) எல்லாம் முக்கியமானவை.
மதனுடைய டீம் லீட் ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் மற்றவர்கள் செயல்களின் ஒருங்கியக்குனர் (coordinator) என்ற பொறுப்பை அவரிடம் தந்திருந்தார். தன் உழைப்பிற்கு இது ஒரு சான்றிதழ், கவனமாகச் செய்து தர வேண்டும் என மதன் எண்ணினான். மனதின் ஓரத்தில் “தன்னால் செய்ய இயலுமா” என்ற கவலை ஒலித்துக் கொண்டே இருந்தது.
பலருடன் பேசி, ஒவ்வொருவர் செய்வதையும் அறிந்து கொண்டு மற்றவரின் செயலுடன் ஒற்றுப் போகிறதா என்று ஆராய்ந்து, இடுக்குகளையும் முட்டல்களையும் கண்டெடுத்து, கலந்து பேசி சரி செய்வது எனப் பல பொறுப்புகளைக் கையாள வேண்டி இருந்தது. ஆரம்பக் கட்டத்தில் தனக்குக் கிடைத்த பரிசு போல் உற்சாகமாக மதன் செய்தான். போகப் போக ஓரிரு இடையூறுகள் சந்தித்ததில் சந்தேகங்கள் எழ ஆரம்பித்தது. “அடடா, இதைச் சரியாக முடிப்போமா?” போன்ற கேள்வி மனதைக் குடைந்தது.
குறிப்பாக, ஒவ்வொருவரிடமும் தன்மையாகப் பேசி புரியவைப்பது மதனை வதைத்தது. சுபாவத்தில் மற்றவரிடம் அதிக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாதவன். இப்போது நிறையப் பேச வேண்டியதாயிற்று. தன்னிடம் பேச்சுக்குறை எனக் கருதியவன் மதன். கல்யாணம் செய்ததிலிருந்து ரூபவதியின் பேசும் திறன் அவனை ஈர்த்தது. இந்த ப்ராஜெக்ட் செய்ய ஆரம்பித்ததும் அவள் பேசுவதை உற்றுக் கவனிப்பான். அவள் இவ்வளவு எளிதாகப் பேசுகிறாளே என்பதே அவனை வாட்டியது. சட்டென்று அவளை ஏசுவான்.
கடந்த சில நாட்களாக அவன் பெற்றோர் சொல்வதும் மதனை வாட்டியது. கல்யாணம் ஆனதிலிருந்து அவர்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றை ரூபவதி செய்து முடிப்பாள். ஒரு உரையாடலில் அவர்கள் “ரூபவதியிடம் சொன்னால், அலட்டிக்காம செய்வா” என்றார்கள். மதனை இது சுருக்கெனக் குத்தியது.
அன்றைக்குத் தான் மதனும் கவனித்தான், வீட்டில் யாரும் அவனிடம் எந்த வேலையையும் தருவதில்லை என்று. இதை உணர்ந்ததும் தன்நம்பிக்கை ஊசலாடியது. தன் மேல் சந்தேகங்கள் அதிகரித்தது. அப்போதிலிருந்து தினசரி வேலைகளைச் செய்யவே “முடியுமா?” என்றே ஆரம்பித்தான். சமீபகாலமாக எதையும் முழுதாகச் செய்ய இயலவில்லை.
மொத்தத்தில் மதனுக்கு தன் அவநம்பிக்கை, சந்தேகம் இவை தென்பட்ட விதங்கள் தாம் பதட்டம், வியர்வை, கை நடுக்கம், படபடப்பு. இந்த கலவையை மதன் புரிந்து கொள்ள, முதல் அனுபவத்தில் ஆரம்பித்தோம்.
டாக்டர் வர்ணித்ததை வைத்து, “இது எனக்கு இருக்கா?” என்ற தேடலில் “ஆம், இருக்கிறது” என்றே மதன் முடிவெடுத்தான். எதனால் இப்படி நேர்ந்தது என்று புரிய அவன் வலைப்பூவில் தேடியதை, பட்டியலிட்டதை வைத்துக் கொண்டு அவற்றை எவ்வாறு கணித்தான் என்று ஆராய்ந்தோம்.
முன் போலவே தான் செய்வதைக் கூர்ந்து கவனித்து, அவைகளில் எது இருக்கிறது என்றும், எது இருக்கக் கூடும் என்றும் பதிவிடச் சொன்னேன். அரை மணி நேரத்தில் முடிந்தவரைக் குறித்ததில், பதட்ட நிலைக்குப் பிறகு ஆனதை குறித்துக் கொள்ளப் பரிந்துரைத்தேன்.
முதலில் பதிவுகள் சடசடவென செய்ததில் பூரண தகவல்கள் இல்லாததால் உபயோகப் படவில்லை. இதன் காரணி எங்கள் உரையாடலில் புரிய வந்தது.
மதன் செய்து வந்ததை உன்னிப்பாகப் பார்த்து வர்ணிப்பு கூட்டி விவரிக்க ஆரம்பித்தான். இதை ஒவ்வொரு ஸெஷன்களில் எடுத்துப் பார்க்கையில் மதனுக்குத் தன்னை மனக்கண்ணாடியில் பார்ப்பது போல் தோன்றியது என்றான். இதில் தெளிவாகியது, எவ்வாறு வலைப்பூவில் படித்ததைத் தீவிர ஆராயாமல், பொதுவான அனுபவத்தையும் ஏதோ என எண்ணி, “ஆம், தனக்கு மெய்யாக அந்த ஃபோபியா உள்ளது” என்று தீர்மானித்து விட்டோம் என்று. இவ்வாறு செயல் பட்டான் என உணரப் பல வாரங்கள் ஆயிற்று. கொஞ்சம் மெதுவாக நடந்தாலும், தெளிவு பிறந்தது.
இப்போது ஏற்றுக்கொள்ள மதன் தயாராக இருந்தான். குறுகிய இடங்களில் சிலருக்கு உபாதை இருக்க நேரிடலாம். அதன் ஒரு தோற்றம் ஃபோபியா. மதனுக்கு நேர்ந்ததோ சஞ்சலம், அதிலிருந்து பதட்டம். படித்ததை ஒரு வகையில் புரிந்து கொண்டுஅவை எல்லாம் தனக்கு இருக்கிறது எனத் தவறாக ஒப்புக் கொண்டு விட்டான். நோய்களைப் பற்றிப் படிக்கும் போது சிலருக்குப் படிப்பதெல்லாம் தங்களுக்கு இருப்பதாகத் தோன்றுவதுண்டு. வலைப்பூவில் பார்த்து கோளாறு, சிகிச்சை முடிவு செய்வது சரியல்ல.
மதனுக்கு தன்னிடம் குறைகள் இருப்பதாகத் தோன்றியது. தன்னால் எதுவும் செய்ய முடியாது என நினைத்தான். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கி நின்றது. அடுத்ததாக, இதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டோம்.
தனக்கு வரும் மனைவியை எல்லோரும் புகழ வேண்டும் என்பது மதனின் விருப்பம். அப்படியே நிகழ்ந்தது. அதனால் தன் பெருமையும் மேலோங்கும் என்று நினைத்தான். தற்சமயத்தில் தன் திறமைகளைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்து, தன்னை ரூபவதியுடன் ஒப்பிட்டுப் பார்த்து மனம் தளர்ந்தான். இதை மையமாக வைத்து ஆராய்ந்தோம்.
அவனுடைய எதிர்பார்ப்பு என்ற கண்ணாடியில் இப்படிப் பட்ட மனைவி வேண்டும் என்றான், கிடைத்தாள். அவள் அழகு, திறமை, எல்லாம் ஏ ஓன்! எல்லா வேலையையும் அருமையாக முடித்ததில் எல்லோரும் அவளைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.
இப்போது மனதிற்குள் பொறாமை. இந்த நேரம் பார்த்து தன் வேலைக்குத் தேவையான திறன் சற்றுப் பின்தங்கி இருந்ததால் வேலையைச் சமாளிக்கச் சிரமப்பட்டுத் தளர்ந்து போகையில் பயந்தான், வேதனை அடைந்தான். தான் ரூபவதி அளவிற்கு இல்லை என்று முடிவெடுத்துக் கொண்டு அந்த கண்ணோட்டத்திலேயே இருந்தான். மதன் தன்னுடைய இந்த உணர்வையும் எதிர்பார்ப்புடன் சேர்த்துப் பார்க்க வைத்தேன். வாரங்கள் ஓடின.
உணர்வுகள் நம் நிலையைக் காட்டும் யுக்தி. அதைக் கண்டு கொள்வதே நிலையைச் சரிசெய்யும் முதல் கட்டமாகும். படிப்படியாக எதிர்பார்ப்பு-உணர்வைப் பற்றி மேலும் பேசினோம். பொதுவாகப் பொறாமை உணர்வு நம்மிடம் உள்ளது என ஏற்றுக்கொள்வதே அபூர்வம். மதன் இதை ஒப்புக் கொண்டது பாராட்டத்தக்கது. தன்னால் ரூபவதி போல் செய்ய இயலவில்லை என்றதே இந்த ஒப்பீட்டிற்கு ஆரம்பமானது. இதை ஆராய்ந்தபின் ரூபவதியை ஸெஷனுக்கு வர அழைத்தேன்.
மதன் தன் நிலையை விவரித்தான். அவனுடைய மனக்கலக்கம் தெளிய, அவள் செயல்படும் விதத்தை விவரிக்க வைத்தேன். ரூபவதி செய்த வெவ்வேறு ஈவென்டுகளை எவ்வாறு செய்தாள் என்றும், செய்த முன்னேற்பாடுகளைக் குறித்துப் பல விவரங்களையும் கேட்டேன்.
அதிலிருந்து மதன் தன் அணுகுமுறையைப் பற்றிப் பேசத் தொடங்கினான். அவன் செய்யாததை அடையாளம் காண ஆரம்பித்தோம். சூழ்நிலைகளைச் சந்திக்கும் சமயங்களில் நிலைத்த தன் மனோநிலை, அதை வெளிப்படுத்தும் விதங்களைப் பார்க்க, மதனுக்கு தன் மனோபாவங்களால் தன் மனத்தின்-உடலின் நிலையை இன்னும் நன்றாக அறிந்து, அதனால் விளைந்த பயம், பதட்டத்தை அடையாளம் காண முடிந்தது. இந்த புரிதல் பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது என்றான்!
அடுத்த படியாக ரூபவதி தான் வடிவமைப்புகள் செய்வதை வர்ணித்தாள். மதன் தனக்குப் புரிந்து கொள்ளப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டான். சலிக்காமல் விளக்கம் அளித்தாள். அவள் திறமையைச் சோதனை செய்வது போல் கேட்டதிலிருந்து எப்படிச் செயல் பட்டாள் என அறிந்து கொள்வதில் மாறியதில் போட்டியோ பொறாமையோ இன்றி பார்த்தான். அவன் அடுத்த கட்டத்திற்குச் செல்வதை உணர்ந்தேன்.
ரூபவதியுடன் ஒரிரு ஸெஷன்கள் தேவையானது. அவள் தன் பங்கிற்கு ஏதாவது உதவ வேண்டும் எனச் சொன்னாள். மதன் அவளை இப்படி உயரத்தில் வைப்பது தனக்குக் கூச்சமாக இருப்பதாகக் கூறினாள். அவள் மாமியார் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வாள். அவர்களுக்குத் தான் ஒத்துழைப்பு தராததை உணர்ந்தாள். இதுவரையில் அவள் இல்லத்தரசியாக இல்லாமல் ஒரு விருந்தாளி போல் சாப்பிடுவது தூங்குவது என இருந்தாள்.
இதன் விளைவுதான் மதன் அவளைச் சக ஊழியராகப் பார்த்தானோ? அதை மாற்ற அவள் வீட்டின் பொறுப்புகளில் பங்கெடுக்க முடிவெடுத்தோம். மாமியாரும் புரிந்து கொள்ள, அவர்களை அழைத்து விவரித்து, எப்படிச் செய்யப் போகிறார்கள் என ஆராய்ந்தோம். பல பாதைகளை வகுத்தோம். அதைத் தினசரியாக்க, இரண்டு வாரத்திற்குப் பிறகு வரச் சொன்னேன்.
இந்த இடைவேளையில் மதனுடன் ஸெஷன்கள் சென்றது. இதே நேரத்தில் தன் வேலையில் பல மாற்றங்களைச் செய்ய முயன்றான். வெற்றிகரமாக அந்த ப்ராஜெக்ட் முடிக்க முடிந்தது. வேலையும், உடற்பயிற்சிகளும் செய்து வர, மதனின் உடல் மனம் இரண்டும் நன்றாக, தாழ்வு மனப்பான்மை நகர்ந்தது.
வேலை இடமாற்றம் ஏழாவது மாடியில் என ஆயிற்று. லிஃப்டில் எந்த இடைஞ்சலும் உணராமல் போவதை மிக உற்சாகத்துடன் சொன்னான். வீட்டிலும் ரூபவதியை வீட்டு வேலைகளை அவ்வளவு அழகாக அம்மாவுடன் செய்வதைப் பார்ப்பது வித்தியாசமாகவும் இருக்கிறது, அவளிடம் இன்னும் அன்புடன் பார்ப்பதாகவும் கூறினான்!