வயதும் நினைவிலில்லை
காரணமும் நினைவிலில்லை
அன்றொரு நாளில்
அப்பாவிடம் அடிவாங்கி
கால் சட்டை நனைத்தது
மூன்றாம் வகுப்பு ஆசிரியருக்குப் பயந்து
இரண்டாம் வகுப்பிலேயே
இரண்டாண்டுகள் இருக்க நினைத்தது
ஊர்ப்புற நூலகத்தில்
சிறுவர் மலர் புத்தகத்தைத்
தெரியாமல் திருடியது
துவக்கப் பள்ளி நாட்களிலே
தோழி அவள் விரல்கள்
என் உள்ளங்கை வருடியது
தும்பி பிடித்து நூலில் கட்டி
கல்தூக்க வைத்து மகிழ்ந்து சிரித்தது
வாலறுந்து அது இறந்து போக
தனியாய்ச் சென்று தேம்பி அழுதது
கடவுளுக்கு நீர் தர மறுத்ததாய்
ஓணான் மீது குற்றம் சாட்டி
அதற்கு தூக்கு தண்டனை
நிறைவேற்றிய சிறுவர் கூட்டத்தில்
நானும் இருந்தது
பள்ளி முடிந்து வீட்டிற்கு
வேகமாய் ஓடும்போது
சுவரில் மோதி முன்பற்கள்
உடைந்து விழுந்தது
ஆடை அவிழ்ப்பு நாடகமொன்றை
அறியாமல் நான் காணநேர்ந்தது
அறியாத வயதில் எனக்கு
அவள் மேல் காதல் வந்தது
அம்மன் கோவில் திருவிழாவில்
அவளை முதலாய்த் தாவணியில் ரசித்தது
அன்றொரு நாளில் அவசரமாய்
அவளிடம் ஒருமுறை முத்தம் ருசித்தது
இப்படியாய் இன்னும்
எத்தனையோ நிகழ்வுகள்
இன்றுவரை என் தினசரிக் குறிப்பேட்டில்
எழுதப்படாத குறிப்புகளாக… ….