மலையில் முகிலும் படிகிறது – காணும்
மனதில் கவிதை வடிகிறது -மிகத்
தொலைவில் சாலை முடிகிறது – சென்று
தொட்டால் பொழுது விடிகிறது -திரிந்து
அலையும் எண்ணம் குவிகிறது – வாழ்வின்
ஆழ்ந்த உண்மை தெரிகிறது – சற்றுத்
தலையும் சுற்றி வருகிறது – படைப்பின்
தன்மை பற்றிப் புரிகிறது.

குயிலின் குரலும் கேட்கிறது -செவியில்
கொஞ்சம் தேனைச் சேர்க்கிறது -மென்மை
இயையும் ஏழு பண்ணினிமை -அதில்
எழுந்து பரவி ஆர்க்கிறது – பெரும்
மயலும் சோர்வும் மறைகிறது – பிணியின்
வலியும் மெல்லக் குறைகிறது – செயலில்
முயன்று பார்த்து முன்னேறும் – புது
முனைப்பில் உள்ளம் விரைகிறது.