தொலைவில் தொலைந்த விழுது
தந்தையும் தாயும் தங்களின் துணையாய்த்
தங்களை எண்ணித் தனிமையில் இருப்பர்.
வந்திடும் நண்பர் உறவினர் தம்மை
மகிழ்வுடன் கூடிப் பேசிட அழைப்பர்.
அந்தஅப் படத்தில் இருப்பதெம் மகனே
ஆறிரு வயதில் என்றெலாம் சொல்லி
முந்தைய நினைவில் மூழ்கியே எடுக்கும்
முத்தினைத் தொடுத்துக் கண்களும் விடுக்கும்.
மெல்லவே விடியும் ஒவ்வொரு நாளும்
மெல்லவே நடக்கும், மெல்லவே முடியும்
நல்லதோர் காப்பி, நாளிதழ் மற்றும்
நயம்நிறை இசையால் நகர்ந்திடும் பொழுது.
கொல்லையில் மணக்கும் முல்லையும் மல்லியும்
கொள்பவர் இன்றித் தவிக்குமே அழுது.
தொல்லுயர் ஆல மரத்தினை விட்டுத்
தொலைவினில் ஊன்றித் தொலைந்தது விழுது.