74 வது சுதந்திரதினப் பாடல் – அஷோக்
நிமிர்ந்து நின்று நெஞ்சில் வீரம்
……நித்தங் காட்டும் பாரதர்
உமிழ்ந்து தீவு லுத்தர் சோர
……ஓடச் சாய்த்துத் தீர்ப்பரே
இமிழ்த்து தீர ஏற்ற மோடு
……என்றும் காப்பர் நாட்டினை
திமிர்த்தெ ழுந்து தீர்க்க நாளும்
……தெய்வம் எங்கள் பக்கமே!
பாரில் மிக்கப் பகரு டைத்த
……பார தத்தைப் போலவே
சீரில் எந்த தேச முண்டு
……தேடி னும்கி டைக்குமோ?
வேரில் ஊன்றி விண்ணு யர்ந்த
……விந்தை கொள்வி ருட்சமாய்
பேரு டைத்துப் பெற்றிப் பெற்ற
……பிம்பம் எங்கும் தங்குமே
ஏழு பத்து நான்கு ஆண்டு
……இன்பம் இச்சு தந்திரம்
பாழு டைத்து பட்டு வீழ
……பார்த்தி ருக்கப் போவமோ?
தாழ எங்கள் தாயின் மக்கள்
……தாம்பொ றுத்தல் கொள்வரோ?
ஆழம் மிக்க ஆன்ம சக்தி
……அன்னை தந்த ஆளுமை
வாழ்க என்றும் வண்மை மிக்கு
……வல்ல மையில் வாழ்கவே
சூழ்க எங்கள் சொற்கள் பாரில்
……சோதி போலே சூழ்ந்துமே
ஆழ்க எங்கும் ஆன்ற மைந்த
……அன்பு பண்ப மைதியே
வீழ்க தீமை வேக மாக
……வெற்றி யேவி ளைக்கவே