சென்னை செல்லும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தாள் மீனா. வெள்ளிக்கிழமை இரவு என்பதால் எல்லா பேருந்திலும் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. இறுதியாக ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தாள். புழுக்கம் அதிகமாக இருந்தது. கண்ணாடிக் கதவை லேசாக தள்ளினாள்; ஜில்லென்று வீசிய குளிர்காற்று அவள் உடலை லேசாக தழுவியது. ஆனால் அவள் மனம் மட்டும் வெறுமையாக இருந்தது.
மீனா அருகில் இளம் பெண் அமர்ந்தாள்.
அவள் மடியில் ஐந்து மாதக் குழந்தை உறங்கி கொண்டிருந்தது. மற்றொரு குழந்தை அழுது கொண்டிருந்தது. தாய் ஏதோ சொல்லி சமாதான படுத்தினாள். குழந்தை கேட்கவில்லை.
“அம்மா நான் ஜன்னல் ஓரத்தில்தான் உட்காருவேன்” என்று சொன்னாள்.
காதில் வாங்கிய மீனா இருக்கையை விட்டு எழுந்து வேறு இருக்கையில் அமர்ந்தாள். இடம் கிடைத்த மகிழ்ச்சி அந்த மூன்று வயது குழந்தையின் முகத்தில் நிரம்பியிருந்தது. அவள் வடிவத்தில் மகள் தர்ஷினியை காண்கிறாள் மீனா. அவள் உயிரோடு இருந்திருந்தால் இவள் வயது இருக்கும். இந்நேரம் துறுதுறு என்று வளைய வருவாள் நினைக்கும் போதே அழுகை பீறிட்டது மீனாவிற்கு அடக்கி கொண்டாள்.
அவள் முன் பழைய நினைவுகள் நிழலாடியது.
கல்லூரி மேல்படிப்புக்காக மீனா நாகர்கோவில் சென்றபோது அறிமுகமானவன் பிரதாப். அவன் மிகுந்த செல்வந்தன் சொந்தமான பேன்ஸி ஸ்டோர் வைத்திருந்தான். இரண்டு மாத பழக்கம் அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது.
பிரதாப்பின் தந்தை வேதாச்சலம் இவர்கள் காதலை தடுத்தார். மீனா நடுத்தர வர்க்கத்துப் பெண்; நம் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவள் அல்ல என்று எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லிப் பார்த்தார். பிரதாப் கேட்கவில்லை மீனாவை திருமணம் செய்துக் கொள்வதில்; உறுதியாக இருந்தான்.
பெற்றோரை எதிர்த்து மீனாவை திருமணமும் செய்து கொண்டான். வேதாச்சலம் மகன் நடத்தி வந்த பேன்ஸி ஸ்டோரை பிடுங்கிக் கொண்டு அவனை வெளியே துரத்தினார்.
மீனா பிரதாப்பை அழைத்துக் கொண்டு திருச்சி வந்தாள். அவள் அம்மா வீட்டிற்கு அருகில் குடி புகுந்தாள்.
ஒரு வருட காலம் சந்தோஷமாக ஓடியது அவர்கள் வாழ்க்கை. அதன் அடையாளமாக தர்ஷினி பிறந்தாள். பணப்பற்றாக்குறை அவர்களுக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது.
கால் சென்டரில் வேலை பார்க்கும் மீனாவிடம் அடிக்கடி பணம் கேட்பான் பிரதாப். அவள் தரவில்லையென்றால் அடித்து துன்புறுத்துவான். மாத கடைசியில் பக்கத்து தெருவில் வசிக்கும் மாமியாரிடம் பணம் வாங்கி வரும்படி வற்புறுத்துவான். அன்று ஞாயிற்றுக்கிழமை மீனா வீட்டிலிருந்தாள் வழக்கம் போல பிரச்சனை செய்தான் பிரதாப்.
“ஏய்…மீனா கை செலவுக்கு பணம் இல்ல உன் அம்மாகிட்ட போய் பணம் வாங்கிட்டு வா” அதிகாரத்துடன் சொன்னான்.
“ஒரு வேலையும் செய்யாம வீட்டுல உட்காந்திருந்தா எங்கிருந்து பணம் வரும்? ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிக்க பாருங்க் சும்மா எங்க அம்மாகிட்ட பணம் கேட்காதீங்க” கோபத்துடன் சொன்னாள்.
“சம்பாதிக்கிற திமிருல பேசுறியா? எங்க அப்பாகிட்ட இருக்கிற சொத்திற்கு நான் வேலைக்கு போகனும்னு அவசியமில்ல் உன்னை கல்யாணம் பண்ணதுனால எனக்கு எந்த லாபமும் இல்லை என் சொத்தை இழந்ததுதான் மிச்சம்”.
“உங்க அப்பா சொத்து தரலேன்னா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும் விருப்பப்பட்டுதானா என்னைத் திருமணம் செஞ்சீங்க.
“ஆமாம் அதுக்காக நான் இப்ப வருத்தப்படறேன் வழவழன்னு பேசாம போய் உங்க அம்மாகிட்ட பணம் வாங்கிட்டு வா”.
மீனா போகாமல் நின்றாள் ‘பளார்’ என்று அவள் கன்னத்தில் அறைந்தான் பிரதாப். விருட்டென்று தொட்டில் அருகே சென்றாள். உறங்கும் குழந்தையை தூக்க அவளை தடுத்தான் பிரதாப்.
“குழந்தைய தூக்கிட்டு போனா நீ வரமாட்டேன்னு எனக்கு தெரியும். அதனால நீ மட்டும் போயிட்டு வா” அவளை விரட்டி அனுப்பினான்.
பணம் வாங்க சென்ற மீனா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கடுப்பில் இருந்தான் பிரதாப். குழந்தை வேறு பசியால் அழுது கொண்டிருந்தது.
‘நிலமை தெரியாமல் இதுவேறு சனியன்….என்று சொல்லியவாறே வேகமாக தொட்டில் அருகே சென்றான். குழந்தையை ஒரு கையால் தூக்கினான். முற்றத்தில் நீர் நிரம்பிய அகன்ற பாத்திரம் இருந்தது; அதில் குழந்தையை அமுக்கினான். மூச்சு திணறிய எட்டு மாதக் குழந்தை இரண்டு நிமிடங்களில் தன் உயிரை இழந்தது.
இறந்த குழந்தையை வீசியெறிந்து விட்டு வெளியே ஓடினான் பிரதாப் ; எதிரில் வந்த மீனாவை அவன் கவனிக்கவில்லை. தலைதெறிக்க ஓடும் காரணம் புரியாமல் குழம்பிப் போனாள் மீனா.
வீசியெறியப்பட்ட குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.
“ஐயோ என் பிள்ளையை கொன்னுட்டானே பாவிபய” தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு கதறினாள். தரையில் தவழும் குழந்தை தரையோடு கிடப்பதைப் பார்த்து மனம் குமுறினாள்.
இறந்த குழந்தையை இரு கை தாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். பின் அவிழ்ந்த கூந்தலை முடித்துக் கொண்டு புயலாக புறப்பட்டாள். காவல்துறை நோக்கி
வழியில் எதிர்பட்டான் பிரதாப்.
“மீனா…கோபம் என் கண்களை மறைச்சிடுச்சு அநியாயமா நம்ம பிள்ளையை கொன்னுட்டேன் என்னை மன்னித்து விடு” அவள் காலை பிடித்து கெஞ்சினான்.
“சீ…என் கால விடு” அவன் கைபிடியிலிருந்து தன் கால்களை விடுவிடுவித்துக் கொண்டாள் மீனா.
“நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? பெத்த புள்ளைய கோபத்துல கொன்னுட்டேன்னு சொல்றீயே உனக்கு வெட்கமில்ல. பால்வடியிற இந்த முகத்தை கசக்கி பிழிய உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு. கள்ளம் கபட மில்லாத இந்த முகத்தை பார்த்தால் நம் கவலையெல்லாம் மறந்து போகுமே”. குழந்தையை முத்தமிட்டவாறே அழுது புலம்பினாள்.
“மீனா நான் சொல்றதை….”முடிக்கவில்லை அவன்.
“நீ சொல்ற எதையும் நான் கேட்க விரும்பல. பெத்த பிள்ளைய கொலை செய்த மிருகம் நீ. உனக்கு விலங்கு மாட்டாமல் நான் ஓய மாட்டேன்”
ஆவேசத்துடன் சொல்லிவிட்டு ரோட்டை கடந்து போனாள்.
“மீனா.. மீனா என்று கத்தியவாறே அவளை பின் தொடர்ந்தான் பிரதாப். எதிரில் வந்த லாரியை அவன் கவனிக்கவில்லை. லாரி அவன் மீது மோதியது. அவன் உடல் நாலாபுறம் சிதறி கீழே விழுந்தது.
திரும்பி பார்த்த மீனா கடவுள் தீர்ப்பு சரி என உணர்ந்தாள்.
கண்டெக்டர் ‘டிக்கெட்…டிக்கெட்’ என்று சொன்னதும் அவள் நினைவுகள் கலைந்தன. மனம் மட்டும் சலனமில்லாமல் வெறுமையாகவே இருந்தது.