சரித்திரம் பேசுகிறது – ” யாரோ”

சங்கரவிஜயம்

ஆண்டவனை அறிய முடியுமா?- Dinamani

ஆதி சங்கரர்..

இந்த உலக நாயகன் வாழ்ந்த காலம் என்ன என்பதை விவாதித்தோம்.

அது .. ஒரு ‘டீஸர்’ தான்.  

இது .. ‘மெயின் பிக்சர்’.

இவரது சரித்திரம் சொல்லாமல் நமது எழுத்து நகர இயலாது।

இவரைப் பற்றி எழுத..

நமது நண்பர் ..  இலக்கியவாதி.. ‘அசோக் சுப்பிரமணியம்’ எழுதுகிறார்:

இனி அசோக்கின் வார்த்தைகள்:..’யாரோவின் கண்பார்வையில்’
****************************************************************************************************************************************************************
வருடம் கி.மு. 509!

பாரத தேசத்தின் தெற்கு மூலையில்  கடவுளின் சொந்த தேசமென்று கூறப்படும் வஞ்சி பூமியாம் கேரள தேசத்தில்

இந்நாளைய திருச்சூர் நகரிலிருந்து தென்கிழக்காக முப்பது மைல் தூரத்தில் சிறிய கிராமமாக இருந்த காலடியில் 

ஈஸ்வர பக்தியோடு கூடிய சிவகுரு-ஆர்யாம்பா என்னும் புண்ணியத் தம்பதியருக்கு  மகனாக நம் சங்கரர் அவதரித்தார்.

(சரித்திரம் பேசுகிறது தொடரின் இது வரையில் வந்த மிக நீண்ட வாக்கியம் இது தான்! நீளமான சொற்றொடருக்கு மன்னிக்கவும்!)

என்ன செய்வது?

சரித்திரத்தில் இடம் பெறும் சாதனை நாயகருக்கு,

சனாதனத் தருமத்தின் விடிவிளக்காம் ஆச்சாரியாருக்கு ஏற்ற  கட்டியமாக அல்லவா சொல்லவேண்டியிருக்கிறது!

அவதாரமும், அவதார காலமும்:

கலி பிறந்து 2000 ஆண்டுகளுக்குப் பின், தன்னுடைய அம்சமாக சங்கரர் என்ற பெயரில் அத்வைத ஆசாரியர் அவதரிப்பார் – என்று  சிவபெருமானே “சிவரகசியத்தில்” கூறியுள்ளபடி சங்கரர்  அவதாரம் செய்தார்.

அவருடைய நேரடி சீடர்களான தோடகர், பத்மபாதர் போன்றோரும் அவரை பரமேஸ்வர அவதாரமாகவே கூறுகின்றனர்.

கேரள தேசத்திலே மிகப்பெரிய சிவத்தலம் திருச்சூரில் வ்ருஷாசலம் என்னும் பெயருள்ள வடக்கு நாதன் கோவில் உள்ளது.

அங்கு புத்திர பாக்கியத்துக்காக சிவகுரு-ஆர்யாம்பா தம்பதியர் தங்கிப் பாராயண நியமங்களோடு விரதம் இருந்துவந்தனர்.

ஒருநாள் சிவகுருவின் கனவில் இறைவன் தோன்றி..

புத்திரவரம் தருவதாகக் கூறி ஒரு கேள்வியை முன் வைத்தார்.

‘மண்டுக்களாக பூரண ஆயுசுடன் பல பிள்ளைகள் வேண்டுமா?’அல்லது ‘பெரும் அறிவு ஜோதியாக, அல்பாயுசு காலமே இருக்கக்கூடிய குழந்தை வேண்டுமா?’

மார்க்கண்டேயரின் தகப்பனுக்கும் இதே கேள்வி கேட்கப்பட்டது.

மார்க்கண்டேயரின் தந்தை – த ன் மகன் 6 வயது வாழ்ந்தாலும் அறிவுடன் இருக்கும் பிள்ளையே வேண்டும் என்றார்.

சிவகுரு – அந்தக் கனவிலேயே தன்னுடைய பத்தினியைக் கலந்தாலோசிப்பதாகக் கூறி விழித்தார்.

சிவபெருமான் – சிவகுருவின் மனைவியாருக்கும் அவ்வண்ணமே கனவில் தோன்றினார்.

இருவரும் இறைவனின் திருவுளப்படியே நடக்கட்டும் என்று தீர்மானம் செய்து, வடக்குநாதர் சந்நிதியில் உளமாற வேண்டிச் சொல்லவும்,
தானே அவர்களுக்குக் காட்சி தந்து,  அவர்களுக்குப் புத்திரனாக அவதரிப்பதாகச் சொல்லி, ஆனால் எட்டுவயதுவரைக்கும் மட்டுமே தான் இருப்பேன் என்று கூறி மறைந்தார்.

தங்கள் பஜனத்தை ( விரதத்தை) முடித்து, சமாராதனையில் பிராம்மண போஜனத்தின் மிச்சத்தை   ஆர்யாம்பாள் பிரசாதமாக உண்ணும்போதே ஐயன் அவள் வயிற்றில் கருவாகி விட்டார்.

பிறந்தது நந்தன வருட, வைகாசி மாதம்.

வளர் பிறை பஞ்சமியில்,

சூரியன் உச்சியில் இருக்கும் வெற்றியைத்தரும் வேளையில்,

பரமசிவனை அதிதேவதையாகக் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் சங்கரர் திருஅவதாரம் செய்தார்.

சங்கரர் அவதார நாளன்று பல சுப சகுனங்கள் தோன்றியதாகவும், வைதிக மதத்திற்கு எதிராக பிரசாரம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு மட்டும் தீய சகுனங்களாகத் தோன்றின என்றும் சங்கர விஜய நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நாளை உறுதிப் படுத்தும்விதமாக ஆச்சார்யாள் சித்தி அடைந்த நாளாக கி.மு 477-ஐக் குறிக்கும் சுலோகம் ஒன்றை புண்யச் சுலோக மஞ்சரி என்ற நூலில் காணலாம்.

அதில் இருக்கும் சங்கேதக் குறிப்பைக் கடபயாதி சங்கியையின்படி படித்தால்..

ரக்தாக்ஷி வருடத்தில் வைகாசியில் சுக்லபட்ச ஏகாதசியில் சித்தியானார் என்றிருக்கிறது.

சித்தியானபோது அவருடைய வயது 32 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த குறிப்பின்படி, அந்தவருடம்..  கலியுகத்தில் 2625 என்றும்,
அதுவே கி.மு 477 என்றும் ஆகிறது.

இதிலிருந்து 32 வருடங்கள் பின்னோக்குவோமானால், அது கி.மு.509
அதாவது சங்கரரின் அவதார தினத்துக்கு வந்துவிடுகிறது.

என்ன! இது ஒரே புராணகால நடையாக இருக்கிறதே..
வழக்கமான ‘யாரோ’ எழுதியதுபோல இல்லையே! வேறு ‘யாரோ’ எழுதியதுபோல இருக்கிறதே என்று எண்ணவேண்டாம்..
என்ன செய்ய!

ஆச்சாரியர்கள் பரம்பரையின் ஆதி ஆச்சாரியரைப் பற்றி எழுதும் சரித்திர உரையில், இந்நடை தேவைப்படுகிறதே!

பின்னால் வந்த கி.பி 788-820 என்னும் நாளென்பது எப்படிப் பொருந்தவில்லை என்று சென்ற கட்டுரையில் கோடி காட்டியிருந்தோம்.
அதனால் அப்பக்கம் அதிகம் செல்லவேண்டியதில்லை. 

(சந்தேகப் பேர்வழிகள் சென்ற இதழைப் படித்து விட்டு வரவும்..)

இளமையில் மேதை

சங்கரர் குழந்தையிலே பெரிய மேதையாயிருந்தார்.  மூன்று வயதுக்குள்ளாக அவர் தேச மொழிகளிலெல்லாம் தேர்ச்சி பெற்றுவிட்டார்.
அவை பெரும்பாலும் தமிழும், சமஸ்க்ருதமுமாகத்தான் இருந்திருக்கவேண்டும். இந்த காலத்தில் சொல்லுகிறார்போல் சங்கரரும் “சைல்ட் ப்ராடிஜி”யாக இருந்திருக்கவேண்டும்.

தந்தையும் அவரது நாலு வயதிற்குள்ளாக சிவபதவி அடைந்துவிடுகிறார்। 
உறவினர் துணையோடு அவருக்கு ஐந்து வயதிலேயே உபநயனமும் செய்துவிட்டார்கள்.
எட்டு வயதுக்குள் குருகுல வாசத்தையும் முடித்துவிட்டு வந்து சந்நியாசமும் வாங்கியாயிற்று.
தன்னுடைய 12வது வயதுக்குள் அத்தனை பாஷ்யங்களும் கூட எழுதிவிட்டாராம்..

அவர் தனக்குத் தெரிந்த சித்தாந்தந்தத்தையே மட்டும் சத்தியம் என்று கொண்டாடாமல் மற்ற சாத்திரங்களையும் சித்தாந்தங்களையும் ஐயம் திரிபறக் கற்றதாலேயே  அவற்றைக்  கண்டிக்கும் பாண்டியத்துவமும் பெற்றார்.

அவருக்கு உண்மையான, ஆத்மார்த்தமான அனுபவமாக இருந்தது “அத்வைத சித்தாந்தம்” மட்டுமே.

“அமல அத்வதை ஸுகே” என்பதுபோல் அழுக்கு, குற்றங்குறைகள், ஏதுமில்லாமல்  நித்திய சுகமாய் இருப்பது அத்வைதம் மட்டுமே.

ஈசன் வேறில்லை, தாம் வேறில்லை என்னும் பேதமில்லா மனநிலையே திருமூலரும் பாடிய “ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” என்று கூறிய நிலை.

மீமாம்சையானால், கர்மானுஷ்டானம் செய்து சுவர்க்கத்தை அடையும் விருப்பம் என்பதுபோல எல்லா தத்துவங்களிலும் ஏதேனும் ஒரு அழுக்கு இருக்கிறது.

பிரம்மமே தானாக இருக்கும் நிலையாம் அத்வைதத்தில் அனைத்து ஆனந்தமும் அடங்கிவிடுவதால், அதனிலும் விஞ்சிய ஒன்றில்லை என்று சங்கரர் தெளிந்தார்.

பொன்மாரியாய் பொழியவைத்தப் பொன்மனச் செம்மல்

அவர் பால சந்நியாசியாக இருந்த காலத்திலே, உஞ்ச விருத்தி முறைப்படி, ஓர்  ஏழைப் பிராமணர் வீட்டு வாசலில் நின்று :
“பவதி பிக்ஷாம் தேஹி” என்று கேட்டார்.

அன்று அந்த வீட்டிலிருந்த அம்மாள் , இத்தனை ஒளிபொருந்திய முகத்தோடு பால பிரம்மச்சாரி சிறுவன் வந்திருக்கிறானே ! 

இவனுக்கு திருவோட்டில்  இட ஒரு குந்துமணி அரிசி இல்லையே என்று வருந்தி, புரையில் இருந்த  ஒரே ஒரு அழுகிய நெல்லிக்காயை எடுத்துவந்து  பிட்சையாக இட்டார் !

அந்தப்  பால சங்கரர்  உள்ளம் நெகிழ்ந்து, மகாலக்ஷ்மியின் பேரில் “கனகதாரா துதியைப்” பாடினார்.

“மனம் சோர்ந்து வாடிப் போயிருக்கிற இந்த ஏழையான பறவைக் குஞ்சுக்கு, உன் கடாக்ஷமேகம் அருட் காற்றோடு கூடிவந்து திரவிய தாரையாகப் பொழியட்டும்” – என்று சங்கரர் வேண்டிய மாத்திரம் அந்த ஏழைத் தாய்க்கு அன்னை மகாலட்சுமி பொன் நெல்லிக்கனிகளாகப் பொழிந்துவிட்டாள்.

இதுதான் அவர் முதன் முதலில் பாடிய சுலோகமாம்!

அந்த ஐந்து வயதுக்குள்ளாக அப்படியொரு கவித்துவமாகப் பொழிந்தது, அன்னை பராசக்தியின் அருளமுதால்தானோ என்னவோ?

நதியை வளைத்த நாயகர் அவர்!

அன்னையைத் தெய்வமாகப் போற்றியவர் ஆதி சங்கரர்.

அதிலொரு நிகழ்வு

ஒரு சமயம் ஆர்யாம்பாள் நோய்வாய்ப்பட்டிருந்தார் .

தூரத்திலுள்ள நதிக்குச் சென்று நீராடமுடியாத நிலை.

எங்கோ ஓடிக்கொண்டிருக்கும் ஆல்வாய்ப்புழையான பூர்ணாநதியை தன்னுடைய கிராமத்து மக்களுக்குப் பயன்படும்படியாவும்..
தன் அன்னையின் குறையை நிவர்த்தி செய்யும் விதமாகவும் வளைத்து வீட்டின் புழக்கடை அருகே ஓடும்படி செய்துவிட்டாராம்.

பின்னாளில் அன்னை மரணத்தருவாயிலும்.. எங்கோ இருந்தவர் ஆகாயமார்க்கமாகவே வந்து, அவளுக்கு கங்கை நீரை வார்த்தாராம்.

****************************************************************************************************************************************************************

அசோக்கின் எழுத்துக்கு நன்றி.

சரித்திரம் ‘ஆதி சங்கரர்’ என்ற இந்த யுக புருஷரைப்பற்றி இன்னும் எழுதத் துடிக்கிறது

விரைவில் சந்திப்போம்..
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.